தவெக.,வின் ஆட்சியில் பங்கு ஆஃபர்...திருமாவளவன் விமர்சனம்

Jan 09, 2026,04:11 PM IST

சென்னை: தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பது போல, சட்டமன்ற தேர்தலுக்கு விஜய்யின் தவெக கட்சி, ஆட்சியில் பங்கு தருகிறோம் என ஆஃபர் கொடுக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு குறித்தும் பேசி வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், 


தவெக கட்சி கூட்டணிக்காக அனைத்து கதவுகளையும் திறந்து வைத்து கொண்டுள்ளது. தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பது போல, சட்டமன்ற தேர்தலுக்கு விஜய்யின் தவெக கட்சி, ஆட்சியில் பங்கு தருகிறோம் என ஆஃபர் கொடுக்கிறது. இதுதான் தற்போது நடிகர் விஜய் தலைமையிலான கட்சியின் நிலைமை. விஜய் பெரும் மக்கள் செல்வாக்கு உள்ள நடிகர், அவர் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நம்பக்கூடியவர். 




ஆனால் அவர் தேர்தலுகாக ஆஃபர் போட்டு காத்திருக்கிறார். அங்கேயும் இன்னும் ஒரு கூட்டணி அமையவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மை. ஆனால் ஊடகங்கள் இவையெல்லாம் மறைத்து திமுக கூட்டணி பலவீனமாக உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்.


அதேபோல ஏற்கனவே கூட்டணியில் இருந்த பாமக தற்போது மீண்டும் இணைந்ததை காட்டி மார்தட்டி கொள்கிறது அதிமுக. புதிதாக வேறு எந்த ஒரு கட்சியும் அங்கு சேரவில்லை. பாமகவிலேயே இன்னும் உட்கசி மோதல் தீர்ந்தபாடில்லை. ஆனால், பாமக எங்கள் அணிக்கு வந்துவிட்டது என்கிறது அதிமுக. அதிமுக - பாஜக தலைமையில் கூட்டணி அமைவதற்கே திண்டாட்டமான நிலை.  விஜய்க்கு ஆதரவாக மொத்தமாக களமிறங்கியுள்ளது காங்கிரஸ் படை என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்