சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கட்சிக் கொடி கட்டிய காரில் பயணித்த சிலர், பெண்கள் உள்ளிட்டோர் பயணித்த காரைத் துரத்தியும், நடு ரோட்டில் நிறுத்தியும், காரை விட்டு இறங்கி ஓடி வந்து காரைத் தட்டியும், மிரட்டியும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கான காரணம் குறித்துத் தெரிய வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோ பதிவில் இடம் பெற்றிருந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீடியோவில் இருந்தது இதுதான்:
ஒரு காருக்குள் இருந்த பெண்கள் எடுத்த வீடியோ இது. அவர்கள் பயணித்த காரை வெள்ளை நிற சபாரி கார் துரத்தி வருகிறது. அந்தக்
காரில் திமுக கட்சியின் கொடி கட்டப்பட்டிருந்தது. அந்த நபர்களிடமிருந்து தப்ப பெண்கள் இருந்த கார் முயன்றது. ஆனால் அந்த இளைஞர்கள் விடவில்லை. துரத்தி வந்து மடக்கியுள்ளனர். பெண்கள் உள்ள கார் தப்பி விடாமல் தடுக்கும் வகையில் நடு ரோட்டிலும் காரை நிறுத்தியுள்ளனர். மேலும் அதிலிருந்து ஒரு நபர் இறங்கி வேகமாக பெண்கள் இருந்த காரை நோக்கி ஓடி வருகிறார். கார்க் கதவையும் அவர் திறக்க முயல்வதாக தெரிகிறது. காருக்குள் இருந்த பெண்கள் பயத்தில் அலறுகின்றனர். மாமாவுக்குப் போன் போடு போடு என்றும் ஒரு பெண் கூறுகிறார். காரில் ஒரு ஆண் குரலும் கேட்கிறது.

அந்தக் கும்பலிடமிருந்து தப்பிப்பதற்காக பெண்கள் இருந்த கார் ரிவர்ஸில் போய் வேறு பாதை வழியாக தப்பிச் செல்கிறது. அந்தக் காரை இளைஞர்கள் அடங்கிய கார் விடாமல் துரத்திச் சென்றுள்ளதாக தெரிகிறது. யார் இந்த நபர்கள், எதற்காக காரைத் துரத்தினர், ஏன் இப்படி மிரட்டும் வகையில் நடந்து கொண்டனர் என்று தெரியாமல் இருந்தது. இதுகுறித்து கானாத்தூர் காவல்நிலையப் போலீஸார் 2 தனிப் படைகளை அமைத்து தீவிரமாக அந்த நபர்களைத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பான விவரம் தெரிய வந்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஈசிஆர் முட்டுக்காடு படகு முகாம் மேம்பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், 26ம் தேதி கானாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சம்பவத்தன்று, நான்கு பெண்கள், 2 ஆண்கள் பயணித்த அந்தக் கார் முட்டுக்காடு அருகே பார்க் செய்யப்பட்டிருந்தது. அந்தக் காருக்குப் பின்னால், இந்தப் பெண்களின் காரைத் துரத்திய இளைஞர்கள் வந்த வெள்ளை நிற காரும், இன்னொரு தார் காரும் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது பெண்களின் கார் ரிவர்ஸ் எடுத்தபோது, பின்னால் இருந்த சபாரி காரை இடித்து விட்டது. இதையடுத்து இளைஞர்கள் அதுகுறித்துக் கேட்டுள்ளனர். ஆனால் பெண்கள் வந்த காரில் இருந்தவர்கள், ஸாரி கூட கேட்காமல் காரை கிளப்பிக் கொண்டு போனதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த இளைஞர்கள், பெண்களின் காரைத் துரத்த ஆரம்பித்துள்ளனர். இரண்டு கார்களில் 8 இளைஞர்கள் தங்களது காரைத் துரத்தி வந்ததால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர், அதிர்ச்சியில், செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அவர்களது உறவினர் வீடு உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே வந்தபோதுதான் அந்த இளைஞர்கள் காரை வழி மறித்து நிறுத்தி காரை விட்டு இறங்குமாறு கூறியுள்ளனர். இதுதான் நடந்த சம்பவமாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்போது அந்த நபர்களைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனராம். காரை இடித்தது தொடர்பான வாக்குவாதம்தான் இது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் கொடுத்த பெண் மறுப்பு:
இதற்கிடையே, காரை உரசியதால் இந்தப் பிரச்சினை ஏற்படவில்லை என்றும், தாங்கள் எந்த கார் மீதம் மோதவில்லை என்றும் புகார் கொடுத்த பெண் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அந்தப் பெண் கூறுகையில், சம்பவம் நடந்த இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருந்தன. அதில் அத்தனை காட்சிகளும் தெளிவாக பதிவாகியுள்ளன. நாங்கள் எந்தக் காரையும் இடிக்கவில்லை.
நாங்கள் குடிபோதையில் இடித்து விட்டதாகவும் கூறியுள்ளனர். அப்படி எதுவுமே இல்லை. நாங்கள் குடும்பத்தோடு போயிருந்தோம். குடிபோதையில் யாருமே இல்லை. காவல்துறையிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டோம். எங்களுக்கு போலீஸ் மீது நம்பிக்கை உள்ளது. போலீஸார் நாங்கள் காரை இடித்து விட்டோம் என்று சொல்ல வாய்ப்பில்லை. நாங்கள் அவர்களிடமும் அப்படி சொல்லவில்லை என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
உருவம் முக்கியமல்ல, கடமையே முக்கியம்.. Conversation between minute and hour
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
What is yourss is Yours.. உனக்கானது உன்னை வந்தடையும்!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
Porselvi Rajan Tamil Poem: வெயிலோடு விளையாடி!
Deepa Ravi Poem: வேறெதுவும் தேவையில்லை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
{{comments.comment}}