சென்னை: இயக்குநர் - நடிகர் மனோபாலாவின் மரணத்தால் நடிகை ராதிகா சரத்குமார் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளார்.
மனோபாலாவுக்கும், நடிகை ராதிகாவுக்கும் இடையிலான உறவு என்பது மிகப் பெரிய நட்பு. இதை பலமுறை இவர்கள் இருவருமே சொல்லியுள்ளனர். அந்த அளவுக்கு நீண்ட கால நட்பைப் பேணி வந்தவர்கள்.
பாரதிராஜா மூலம் நடிகையாக ராதிகா அறிமுகப்படுத்தப்பட்டபோது மனோபாலா, பாக்கியராஜ் போன்றோர்தான் அவருக்கு வசனம் சொல்லிக் கொடுத்தவர்கள். அதிலும் மனோபாலாவும், ராதிகாவும் மிகச் சிறந்த நண்பர்களாக குறுகிய காலத்திலேயே மாறிப் போனார்கள். இருவரும் மணிக்கணக்கில் சினிமா குறித்துப் பேசுவார்களாம்.
ராதிகாவுக்கு வசனம் சொல்லிக் கொடுத்த அனுபவம் குறித்து பாக்கியராஜும் சரி, மனோபாலாவும் சரி நிறையவே பேட்டிகள் கொடுத்துள்ளனர். அத்தகைய நண்பனை இழந்து பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார் ராதிகா.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், நான் இதயம் நொறுங்கிப் போயுள்ளேன். இன்று காலைதான் அவருக்குப் போன் செய்து, எங்கு இருக்கிறார். எங்கு வந்தால் பார்க்கலாம் என்று கேட்டேன். இப்போது இந்த செய்தி. நம்பவே முடியவில்லை.. அதிர்ச்சியாக இருக்கிறது. தொழில்முறையாகவும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி அவருடன் நிறையப் பகிர்ந்துள்ளேன்.
இருவரும் இணைந்தே தொழிலைக் கற்றுக் கொண்டோம். சேர்ந்து சிரித்தோம், சண்டை போட்டோம், சேர்ந்து சாப்பிட்டோம், நிறைய நிறைய மணிக்கணக்கில் பேசினோம். மிகச் சிறந்த திறமையாளர். எந்தச் சூழலிலும் இருக்கக் கூடியஅளவுக்கு மன பலம் படைத்தவர். எந்த சூழலையும் தனக்கானதாக மாற்றிக் கொள்ளக் கூடிய பக்குவம் உள்ளவர். அவரை நான் நிறைய மிஸ் செய்வேன் என்று கூறியுள்ளார் ராதிகா.
{{comments.comment}}