"இந்தாங்க டீச்சர் பூ".. சிறுகதை

Jan 08, 2026,09:56 AM IST
- க.முருகேஸ்வரி

மகளிர் தினக் காலை அது. வகுப்பறைக்குள் நுழைந்தபோதே என் மனதிற்குள் ஒரு மெல்லிய பிடிவாதம் இருந்தது. காரணம், தர்ஷன். அவன் செய்த ஏதோ ஒரு குறும்பு என் கோபத்தைத் தூண்டியிருந்தது. ஆனால் அது உண்மையான கோபம் அல்ல; அவனைத் நல்வழிப்படுத்த நான் அணிந்துகொண்ட 'பொய்க்கோப' முகமூடி.

அன்று முழுவதும் அவனைப் பார்க்காமல், அவனிடம் பேசாமல் பிடிவாதமாக இருந்தேன். ஆனால் தர்ஷன் விடுவதாக இல்லை. என் மேஜையைச் சுற்றிச் சுற்றி வந்தவன், இடைவிடாமல் ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருந்தான்.

"மிஸ்... உங்களுக்குத்தான் பூ கொண்டு வந்திருக்கேன். வச்சுக்கோங்க மிஸ்... ப்ளீஸ் வச்சுக்கோங்க!"



அவன் சொல்லும்போதெல்லாம் என் கண்கள் அங்கும் இங்கும் தேடின. அவன் கையில் பூ இல்லை, பையிலும் இல்லை. 'எங்கே ஒளித்து வைத்திருக்கிறான்?' என்ற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும், வெளியே கோபமாக இருப்பது போலவே காட்டிக்கொண்டேன்.

மணி பதினொன்றைத் தொட்டது. மீண்டும் அதே குரல், "மிஸ்... பூவ வச்சுக்கோங்க மிஸ்!"

இறுதியில் என் மௌனத்தைக் கலைத்தேன். "எங்கடா இருக்கு பூ? எப்போ பாரு பூ பூ-ன்னு சொல்லிட்டே இருக்க, கண்ணுக்கே தெரியலையே?" என்று சற்று அதட்டலாகக் கேட்டேன்.

உடனே அவன் தன் மேஜை மீது இருந்த ஒரு பிளாஸ்டிக் டம்ளரைக் காண்பித்தான். அதற்குள் இதழ் விரித்துச் சிரித்துக் கொண்டிருந்தன சிவப்பு நிறச் செம்பருத்திப் பூக்கள். தண்ணீருக்குள் மிதந்தபடி ஒரு டம்ளர் நிறைய அன்பை எனக்காகச் சேமித்து வைத்திருந்தான்.

"இதோ மிஸ்... இது உங்களுக்குத்தான்!" - அவன் கண்களில் இருந்த அந்தத் தெளிவும் எதிர்பார்ப்பும் என் பொய்க்கோபத்தை அப்படியே கரைத்துவிட்டது.

'அடப்பாவி... இதை எப்படிடா நான் தலையில் வைப்பது?' என்று மனதிற்குள் நினைத்துச் சிரித்துக்கொண்டேன். ஆனால், அவன் கொண்டு வந்த அந்த அன்பின் கனம் எனக்குப் புரிந்தது.

"எனக்காகத்தானே கொண்டு வந்த? சரி, என் கையிலேயே கொடு," என்று நான் கையை நீட்ட, அடுத்த நொடியே அவன் முகம் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தில் பிரகாசித்தது. மிகுந்த குஷியுடன் அந்தப் பூக்களை எடுத்து என் கையில் கொடுத்தான்.

அன்று எத்தனையோ வாழ்த்துகள் வந்திருக்கலாம், ஆனால் ஒரு குழந்தையின் கள்ளமில்லாத இந்த அன்புப் பரிசை விடச் சிறந்த ஒன்றை யாரால் கொடுத்துவிட முடியும்?

நிச்சயமாக, குழந்தைகள் இந்த உலகிற்கு இறைவனால் அனுப்பப்பட்ட தேவதைகள்!

(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்

news

சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

news

ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்

news

எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!

news

இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!

news

சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!

news

நீலத்திரைக்கடலோரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்