ரீல்ஸ் மோகம்!

Sep 12, 2026,03:00 PM IST

- அ.தாமஸ்


பிறர் நினைப்பதை எல்லாம் நம் நினைவில் ஏற்றி; 

நம் நினைவை எல்லாம் அதுவே மாற்றும்!

 

தகவலை எல்லாம் விரைவாய்க் கொடுக்கும்; 

நேரத்தை மட்டும் விழுங்கியே பிழைக்கும்! 


கல்வி வளர்ச்சியின் கதவையும் திறக்கும்; 

கவனச் சிதறலையும் நம்மிலே விதைக்கும்! 


புதிய திறன்களைக் கற்றுக் கொடுக்கும்; 

படிப்பையும் வேலையையும் அதன் கலப்பால் கெடுக்கும்! 




எளிமையாய் விளம்பரம் செய்தே பிழைக்க 

ஏழைக்கும் கூட வழிவகை கொடுக்கும்! 


திறமைகள் வளர்க்கும் வாயிலும் அதுதான்; 

நம் திறமையை சிதைக்கும் காலனும் அதுதான்!


நடனம் பேச்சு பல்திறன் எல்லாம் 

நம்மில் வளர்த்தே உலகினில் உயர்த்தும்! 


நம் சுயசிந்தனை அனைத்தும் உடனே சிதைத்து; 

அதையே நம்பும் நிலையே கொடுக்கும்! 


சமூக அவலங்கள் குறித்து விழிப்புணர்வு கொடுக்கும்; 

அது குறித்து மட்டும் அறிந்தாலும் கெடுக்கும்! 


நம்மை உயர்த்தும் ஊக்கமும் உந்தமும் கொடுக்கும்! 

சில நேரங்களில் நம் உயர்வினையே கெடுக்கும்!

நமது பொழுதை நமக்கே தெரியாமல் களவாடிக் கெடுக்கும்!


அளவாய்ப் பார்த்தால் அறிவைக் கொடுக்கும் அருவியும் அதுவே! 

அளவின்றி பார்த்தால் நம்மையே சிதைக்கும் கருவியும் அதுவே!


மன அழுத்தம் பதற்றம் பரிசாய்க் கொடுக்கும்; தன்னுரிமையை மட்டும் உடனே பறிக்கும்!

போலிகள் மீது பாசத்தைப் புகட்டும்; உண்மையான உறவை நம்மிடம் எடுக்கும்!

அறிவியல் என்றும் ஆபத்து இல்லை; அளவோடு நாம் பயன்படுத்த முனைந்தால்!


தேவைக்கு மட்டும் பயன்படுத்தி; 

தேவை முடிந்ததும் நாம் நிறுத்தி; 

அளவோடு அதனை உடன் ஏற்றால் 

உலகையே உயர்த்த வழிகாட்டும்! 


காலம் பல கடந்தாலும் நம்மை மட்டுமே நாம் நம்பி;

அறிவியல் படைப்பை அரவணைத்து; 

தேவைக்கு நம் உடன் இணைத்து; 

நம் அறிவை மட்டுமே அதில் புகுத்தி; 

கவனமாய் நாம் தினம் வாழ்ந்தால்; 

கவலைகள் யாவையும் கலைத்து விடும்! 

அகிலம் அறிய நம்மை  உயர்த்தி விடும்!


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்