பேரின்பப் பெருவாழ்வு பெற்று உய்க... தேவாரத் தலங்களின் விளக்கமும், செல்லும் வழிகளும்!

Dec 09, 2025,10:03 AM IST

- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி 


நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்

தேடித்திரிந்து சிவபெருமானென்று

பாடுமின் பாடிப் பணிமின் பணிந்த பின்

கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே.

திருமந்திரம் - சரியை 3( 1455)


நாம் அனைவரும் இன்பமுடன் வாழவே விரும்புகிறோம். ஆனால் நம் வாழ்வு இன்பமும், துன்பமும் கலந்ததாகவே இருக்கின்றது. அதற்க்குக் காரணம் நம் வாழ்வு நாம் செய்த முன் வினைப்படி அமைந்திருப்பது தான் அவ்வாறு அமைந்த வாழ்வில் இன்பத்தைப் பெருக்கிக் கொள்ளவும், துன்பத்தைக் குறைத்துக் கொள்ளவும் தக்கவழி கடவுள் வழிபாடே ஆகும்.




திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் போற்றி வணங்கிய முத்தித்தலங்கள் 274 என்பார்கள். மாணிக்கவாசகப் பெருமான் அவர்கள் திருவாசகத்தில் குறிப்பிடும் தலங்கள் 48. மற்றும் 9 ஆம் திருமுறையான திருவிசைப்பா, திருப்பல்லாண்டில் குறிக்கப் பெறும் தலங்கள் 14. ( இந்தப் 14 ல் தேவாரம் பெற்றவை 6. திருவிசைப்பாவின் தனித்தலங்கள் 8) மேலே குறிப்பிட்ட இத்தலங்களை எல்லோரும் எளிதில் நேரில் சென்று வணங்கி அம்மூவர்களின் திருப்பதிகங்களை அவன் திருமுன்னர் ஓதி உணர்ந்து, பேரின்பப் பெருவாழ்வு பெற்று உய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தேவாரத் தலங்கள்  சிலவற்றைத் தருகின்றேன்.


சோழநாட்டுத் தேவாரத் தலங்கள்

-------------------------------------------


காவிரியின் வடகரைத் தலங்கள் 63

காவிரியின் தென்கரைத்தலங்கள் 127

பாண்டிநாட்டுத் தலங்கள் 14

தொண்டை நாட்டுத் தலங்கள் 32

நடுநாட்டுத் தலங்கள் 22

கொங்கு நாட்டுத் தலங்கள் 7

வடநாட்டுத் தலங்கள்  5

துளுவ நாட்டுத்தலம் 1

ஈழநாட்டுத்தலம் 2

மலைநாட்டுத்தலம் 1.


ஆக மொத்தம் 274 திருத்தலங்கள். இத்தலங்களைத் தரிசிக்க ஒரு நகரை மையமாக வைத்துப் பிறகு எந்தெந்தத் தலங்களைச் சென்று, கண்டு, வணங்கி மகிழலாம் என்று பார்க்கலாம். முதலில் சோழ நாட்டை எடுத்துக் கொள்ளவோம்.


மையநகரம்  திருச்சிராப்பள்ளி


இந்நகரை மையமாக வைத்து நாம் காணும் தலங்கள் 17.


1. திருச்சி ( தென்கரை)

2. திருமுக்கீச்சரம் ( உறையூர் )

3. திருவாணைக்கா

4. திருக்கற்குடி ( உய்யக் கொண்டான் திருமலை)

5. திருவெறும்பூர் 

6. திருப்பாச்சிலாச்சிராமம்( திருவாசி)

7. திருப்பைஞ்ஞீலி

8. திருப்பாற்றுறை

9. திருநெடுங்களம்

10. திருப்பராய்த்துறை

11. திருக்கடம்பந்துறை

        ( குளித்தலை)

12. திருவாட்போக்கி ( ஐயர் மலை)

13. திருஈங்கோய்மலை

14. திருமாந்துறை

15. திருஅன்பிலாந்துறை ( அன்பில் )

16. திருமழபாடி

17. திருப்பழுவூர் ( கீழப்பழுவூர்)


திருச்சி மாநகரை மையமாகக்கொண்டு மேலே கொடுத்துள்ள தேவாரத் தலங்களுடன் ஷ்ரீரங்கம், வயலூர், சமயபுரம், குணசீலம், விராலிமலை, உறையூர் வெக்காளியம்மன், நாச்சியார் கோவில் போன்ற புகழ்பெற்ற தலங்களில் உள்ள திருக்கோவில்களுக்கும் சென்று மகிழலாம்.)


திருச்சி 


இறைவன் : தாயுமானவர்

இறைவி: மட்டுவார் குழலம்மை

தீர்த்தம் : காவிரி நன்றுடையான் தீர்த்தம்.

தலவிருட்சம்: வில்வம்

பாடியோர்: திருஞானசம்பந்தர் 11

அப்பர் 4 ( நாவுக்கரசர்)

மணிவாசகர் 2 இடங்கள்.


தமிழகத்தின்  மையநகரம் திருச்சி. இம்மாநகரின் இதயம் போன்று விளங்கும் இடத்தில் மலைக்கோட்டை உள்ளது.' மெயின் கார்டுகேட்' எனப்படும் இடம் அருகில் தெப்பக்குளம் உள்ளது. அதன் வழியே சின்னக்கடை வீதி வரும். இச்சாலை திரும்பும் இடத்தில் ஷ்ரீ மாணிக்க விநாயகர் கோயிலுக்குச் செல்லும் வழியும், மலைக்கோட்டைக்கு மேல் ஏறிச்செல்லும் வழித்தடமும் காணலாம். மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்ல 417 படிகள் ஏறவேண்டும். தாயுமாறவர் திருக்கோயிலுள் நுழையும் பொழுதே 63 நாயன்மார்களையும், விநாயகர், முருகனை வணங்கி உள்ளே சென்றால் ஷ்ரீ மட்டுவார் குழலம்மை சந்நிதி. அம்மை மிகக் கம்பீயமாக மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அம்மையை வணங்கியபிறகு ஐயன் சந்நிதிக்குச் செல்கிறோம். இறைவனும் நீண்டு அகன்ற நல்மேனியராய்மேற்கு நோக்கியுள்ளார்.


ஒரு செட்டிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்க்கத் தாயாகவும் மாறியதால் தாயுமானவர் என்ற திருநாமம் கொண்டார். இவ்வரலாற்றைச் சுவரில் சித்திரமாகத் தீட்டியுள்ளனர். இத்திருவிழா சித்திரையில் நடைபெறுகிறது. வெவ்வேறு திசைகளைப் பார்த்து நிற்கும் நவக்கிரகங்கள் இத்திருக்கோவிலில் சூரியனை நோக்கியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக் காட்சி வேறெந்தக் கோவில்களிலும் காண முடியாத ஒன்று. ஷ்ரீ மாணிக்க விநாயகர் சந்நிதி தாண்டி உச்சிப்பிள்ளையார் நோக்கி மலைப்படிகளில் ஏறிவரும் பொழுது மலைக்கோட்டை உள்வீதி சாலை வரும். அதன் எதிரே யானை கட்டியுள்ள மண்டபம் இருக்கும்.


சாலையின் மேற்கு வளைவில் மலையைக்குடைந்து பல்லவர் குகைக்கோயில் அமைத்துள்ளனர். அனைவரும் அவசியம் காணவேண்டிய இடமிது. இந்திரன், நான்முகன், இராமபிரான், நாகக்கன்னியர், அனுமன் போன்றோர் வணங்கிய ஊர் திருச்சி.


நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச் சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.


மட்டுவார் குழலாளொடு மால்விடை இட்ட மாவுகந்தேறும் இறைவனார் கட்டி நீத்தவர்க்கு இன்னருளே செயும் சிட்டர் போலும் சிராப்பள்ளிச் செல்வரே. இத்திருப்பதிகத்தில்  4 பாடல்களே உள்ளது.


(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர்.  பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

காண்பதும் கேட்பதும்.. உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லையே!

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

உண்மையான பெண் சுதந்திரம் என்ன தெரியுமா?.. Women empowerment

news

நீங்க ஆயிரத்தில் ஒருவர் பாஸ்.. No one is you and that's your power!

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

அந்த 4 M இருக்கு பாத்தீங்களா.. அதை மட்டும் கன்ட்ரோல் பண்ணுங்க.. நீங்கதான் பெஸ்ட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்