கோவை : திமுக அரசை கண்டித்து தன்னை தானே சாட்டையால் அடித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தி உள்ளார். சொன்னபடியே தன்னுடைய சபதத்தை அவர் நிறைவேற்றி உள்ளார். அது மட்டும் அல்லாமல், 6 முறை அடிப்பேன் என்று கூறியிருந்த அவர் 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்டார். தொண்டர்கள் ஓடி வந்து தடுத்து நிறுத்தியதால்தான் 8 முறையோடு விட்டார். இல்லாவிட்டால் இன்னும் அடித்திருப்பார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் தொல்லை நடைபெற்றதாக மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் மீது எப்ஃஐஆர்., பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் அந்த மாணவி அளித்த புகாரின் எஃஐஆர் காப்பி சோஷியல் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. மாணவி அளித்த புகாரின் எஃப்ஐஆர் காப்பி, போலீசாரின் உதவி இல்லாமல் எப்படி வெளியே வந்திருக்க முடியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கேள்வி எழுப்பி இருந்தார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசை மிக கடுமையாக விமர்சித்ததுடன், மிகவும் ஆவேசமாக சபதங்களையும் பட்டியல் போட்டார். திமுக.,வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை தான் காலில் செருப்பு அணிய போவதில்லை என கூறி, செய்தியாளர்கள் முன்னிலையிலேயே காலில் இருந்த ஷூவைக் கழற்றித் தூக்கிக் காட்டினார். பிறகு பிப்ரவரி மாதம் முதல் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று, முருகனிடம் முறையிடப் போவதாக தெரிவித்த அவர், டிசம்பர் 27ம் தேதியன்று காலை 10 மணிக்கு தன்னை தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ள போவதாக அறிவித்தார். இதனால் தமிழக அரசியலே பரபரப்பானது.
இதற்கிடையில் நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதால், துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக அண்ணாமலை தன்னுடைய சபதத்தை ஒத்திவைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தான் ஏற்கனவே சொன்ன படி, மீடியாக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் கோவையில் உள்ள தன்னுடைய வீட்டின் முன்பாக தன்னை தானே அடித்துக் கொண்டார்.

வீட்டுக்கு முன்பு நின்றபடி சாட்டையடி
வீட்டு வாசலுக்கு முன்பு வந்து நின்ற அண்ணாமலை பச்சை நிற வேட்டி அணிந்திருந்தார். வெற்று உடம்புடன் கையில் வந்த அவர் தொண்டர் ஒருவர் பூக்களால் நிரப்பப்பட்ட தட்டில் வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற சாட்டையை பவ்யமாக வாங்கிக் கொண்டார். பின்னர் தனக்குப் பக்கத்தில் யாரும் நிற்காதீர்கள் என்று கூறினார். அண்ணாமலைக்குப் பின்னால் சற்று தொலைவில் 12 பேர் நின்று கொண்டனர். அவர்களில் நான்கு பேர் திமுக அரசுக்கு எதிரான முழக்கங்கங்கள் அடங்கிய வாசகங்களை ஏந்தியபடி நின்றனர்.
அண்ணாமலைக்கு முன்னால் திரளான பத்திரிகையாளர்கள், கட்சியினர், அக்கம் பக்கத்தினர் என திரண்டிருந்தனர். அதன் பின்னர் சாட்டையால் அடிக்க ஆரம்பித்தார் அண்ணாமலை. லாவகமாக சாட்டையை நன்றாக சுழற்றிச் சுழற்றி அடித்தார். 6 அடி என்று அவர் கூறியிருந்ததால் அத்தோடு நிறுத்துவார் என்று பார்த்தால் அதற்கு மேலும் அடிக்க ஆரம்பித்தார். 8வது முறை அடித்த போது, அருகில் இருந்த ஒருவர் ஓடி வந்து வேண்டாம் அண்ணா என்று கூறி அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனால் அத்தோடு சாட்டையை கீழே இறக்கி விட்டார் அண்ணாமலை.
அவர் சாட்டையால் அடித்தபோது வெற்றி வேல் வீரவேல் என்று அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கோஷமிட்டனர். தான் சொன்னபடியே, சாட்டையால் அடித்து சபதத்தை நிறைவேற்றினார். முதலில் 6 முறை சாட்டையால் அடிக்க போவதாக கூறிய அண்ணாமலை கூடுதலாக 2 முறை என 8 முறை அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இனி அடுத்த கட்டமாக அவர் என்ன செய்ய போகிறார் என மக்களும், மீடியாக்களும் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அண்ணாமலையின் இந்த நூதனப் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நூதனப் போராட்டத்தை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சித்துள்ளனர். இது தேவையில்லாதது என்று திமுக கூட்டணித் தலைவர்கள் பலரும் வர்ணித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அலமேலுவின் ஆச்சரியம்!
பயனாளியாக!
Tamil Poem by V Jayanthi: பணமா? மனமா?
Tn elections 2026 தமிழக தேர்தலுக்கு இன்னும் 2 நாள் மட்டுமே... பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது
திடீரென வரும் உறவும்… திடீரென விலகும் மனமும்!
சிந்தனைச் சிதறல்.. உலகின் உன்னதமான மொழி எது தெரியுமா?
M Bharathi Poem: காற்று
When Care Turns Blind.. அன்போடு சுட்டிக் காட்டப்படும் தவறுகள்.. நல்லதே!
Deepa Ravi Poem: நீலவானும் நீயும் நானும்
{{comments.comment}}