வங்கதேசத்தில் பெரும் கலவரம்.. போர்க்களமாக மாறிய நகரங்கள்.. 100க்கும் மேற்பட்டோர் பலி.. ஊரடங்கு!

Jul 20, 2024,05:48 PM IST

டாக்கா:   வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் பெரும் கலவரமாக மாறியுள்ளன. இதனால் பல நகரங்கள் பற்றி எரிகின்றன. 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு உத்தரவை அந்த நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. கலவரத்தை அடக்க ராணுவமும் களம் இறக்கப்பட்டுள்ளது.


டாக்காவில் ஆரம்பித்த கலவரம் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. அரசின் இட ஒதுக்கீடுக் கொள்கையை எதிர்த்தும், நிர்வாக சீர்குலைவை எதிர்த்தும் அங்கு மாணவர்கள் போராட்டங்களில் குதித்தனர். இப்போது இது பெரும் மக்கள் போராட்டமாக மாறியுள்ளது. அமைதியாக ஆரம்பித்த போராட்டம் இப்போது வன்முறையாக மாறியுள்ளது. இதை அடக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இதையடுத்து தற்போது ராணுவத்தை களம் இறக்கியுள்ளது பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு.


கலவரங்களில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பெருமளவிலான பொதுச் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த 15 வருடத்திற்கும் மேலாக ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு எதிரான அதிருப்தி சமீப காலமாக அதிகரித்து வருகிறது.




தலைநகர் டாக்காவில் கூட்டம் கூடுவது, ஊர்வலம் நடத்துவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதை மாணவர்களும், போராட்டக்கார்ரகளும் பொருட்படுத்தவே இல்லை. தடை உத்தரவை மீறி திரண்டு வந்து போராடி வருவதால் போலீஸார் திணறி வருகின்றனர். போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்குப் பதிலுக்கு மாணவர்களும் போராட்டம் நடத்துவோரும் தாக்குதலில் இறங்கியதால் உயிர்ப்பலி அதிகரித்துள்ளது.


இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் பிரதிநிதி சர்வார் துஷார் கூறுகையில் எங்களது போராட்டம் தொடரும். எப்படி எங்களை முடக்கினாலும் நாங்கள் போராட்டத்தை விட மாட்டோம். உடனடியாக ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும். இத்தனை பேரின் உயிர் பறி போனதற்கு இந்த அரசுதான் காரணம் என்று ஆவேசமாக தெரிவித்தார்.


டாக்காவில் மட்டும் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் வன்முறையில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து படுகாயமடைந்த பலரும் டாக்கா அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வண்ணம் உள்ளனர். 


வங்கதேச போராட்டத்தில் மாணவர்கள் மீதான காவல்துறை தாக்குதல் கண்டனத்துக்குரியது, ஏற்றுக் கொள்ளமுடியாதது, கவலை தருவதாக உள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் வால்கர் துர்க் கூறியுள்ளார். தாக்குதல் நடத்த உத்தரவிட்டவர்கள், தாக்குதல் நடத்தியோர் உள்ளிட்டோர் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று துர்க் கூறியுள்ளார்.


என்ன பிரச்சினை.. ஏன் போராட்டம்?




வங்கதேச அரசு புதிய இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி சில குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசுப் பணிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு அறிவித்துள்ளது. அதாவது 1971ல் நடந்த பாகிஸ்தான் போரின்போது உயிர்த்தியாகம் செய்த தியாகிகளின் வாரிசுகள் மற்றும் பல்வேறு பிரிவினர் இதில் அடக்கம். இதில் ஏன் பிரச்சினை வந்துள்ளது என்றால், இட ஒதுக்கீட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளவர்கள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவானவர்கள் என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 


சாமானிய மக்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டால் எந்த பலனும் இல்லை. மாறாக, ஷேக் ஹசீனாவை ஆதரிப்போருக்கு மட்டும் இது லாபகரமானது என்பதால்தான் இதை எதிர்ப்பதாக மாணவர்கள் கூறுகிறார்கள். மேலும் ஷேக் ஹசீனா தொடர்ந்து தேர்தல்களில் முறைகேடு செய்து ஜெயித்து வருகிறார் என்பதும் மக்களின் குற்றச்சாட்டு. 2009ம் ஆண்டு முதல் ஷேக் ஹசீனா ஆட்சியில் நீடித்து வருகிறார். கடந்த தேர்தலின்போது எதிர்க்கட்சியே களத்தில் இல்லை. இதனால் மக்களின் பெரும் அதிருப்திக்குள்ளானார் ஷேக் ஹசீனா.


எதிர்க்கட்சிகளை ஒடுக்கி விட்டார். பலருக்கு தண்டனை கொடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சர்வாதிகாரத்தின் உச்சமாக மாறியுள்ளது ஷேக் ஹசீனாவின் ஆட்சி என்று மக்களும், மாணவர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். 


வங்கதேசத்திற்கு கலவரங்களும், சர்வாதிகாரமும் புதிதல்ல. பல போராட்டங்களை சந்தித்த நாடுதான் வங்கதேசம். சர்வாதிகாரி எர்ஷாத்தின் ஆட்சியை இன்னும் உலகம் மறக்கவில்லை. இந்த நிலையில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்கள் வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்திருப்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்