சென்னை: மொழிப் போர் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி, புதுப்பிக்கப்பட்ட தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது வீர முழக்கம் வீரமுழக்கம் என்று கூறி அவர் கோஷமிட அனைவரும் இணைந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்திருந்த எக்ஸ் தளப் பதிவில், ஆதிக்க இந்திக்குத் தமிழ்நாடு அடிபணியாது என்பதை உணர்த்திய மொழிப்போர்க்களத்தின் முதல் தியாகச் சுடர்கள் நடராசன் - தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை மூலக்கொத்தளத்தில் திறந்து வைத்தேன்.
அதுமட்டுமல்ல, சகோதரர் தொல் திருமாவளவன் அவர்களின் கோரிக்கையினை ஏற்று, எழும்பூரில் உள்ள தாளமுத்து - நடராசன் மாளிகையில் அவர்தம் திருவுருவச் சிலைகளையும் நிறுவிடுவோம்!
தமிழைக் காக்கத் தம்மையே பலியிட்ட தீரர்களின் தியாகத்தால் இயக்கப்படும் அரசு இது! மொழிப்போர்த் தியாகிகளுக்கு எம் வீரவணக்கம்! தமிழ்_வெல்லும் என்று அவர் கூறியிருந்தார்.
புதுப்பிக்கப்பட்ட நினைவிடம்

சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த தாளமுத்து – நடராசன் ஆகியோரின் நினைவிடம் 34 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1938ஆம் ஆண்டு மதராஸ் மாகாணமாக தமிழ்நாடு இருந்தபோது, அப்போதைய முதலமைச்சரான மூதறிஞர் இராஜாஜி, தமிழ்நாட்டு மாணவர்கள் இனி இந்தி கட்டாயமாக கற்க வேண்டுமென்று வெளியிட்ட அறிவிப்பினை எதிர்த்து, 27.02.1938 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில், தாய்மொழியை காக்க இந்தி திணிப்பினை எதிர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு அதன் அடிப்படையில், தந்தை பெரியார், மறைமலை அடிகள், திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதி, பேரறிஞர் அண்ணா போன்ற தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தாய்மொழி காக்க களம் கண்டனர்.
அப்போது, 14 வயதே ஆன பள்ளி மாணவரான கலைஞர் கருணாநிதியும் திருவாரூர் வீதியில் தன்னுடன் பயிலும் மாணவர்களை அணி திரட்டி, "கயல், வில், புலி" சின்னம் பொறித்த தமிழ்க் கொடியினை கையிலேந்தி,
“ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்!
நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே!"
என்று, இந்தித் திணிப்பு எதிர்ப்பு போரில் தனது பங்களிப்பையும் பதிவு செய்தார். முதற்கட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்ற நடராசன் 15.01.1939 அன்றும்: தாளமுத்து 11.03.1939 அன்றும் வீர மரணம் அடைந்தனர். தமிழக மக்களின் தொடர் போராட்டத்தினால், ராஜாஜி அரசு 21.02.1940ல் கட்டாய இந்தி திணிப்பை கைவிடும் முடிவுக்கு வந்தது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கீழுப் பழூவூர் சின்னச்சாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி. விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, பீளமேடு தண்டபாணி, சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் தீக்குளித்தும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரின் தீரத்தை நினைவு கூர்ந்திடும் நாள் தான் ஜனவரி 25ஆம் நாள் ஆகும்.
தாளமுத்து - நடராசன் நினைவிடம் மட்டுமல்லாமல், மொழிப்போர் தியாகி, சமூகப் போராளி டாக்டர். எஸ். தர்மாம்பாள் ஆகியோரது திருவுருவப் படங்களுக்கும் மலர் தூவி அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிகழ்ச்சியின்போது, தாளமுத்து – நடராசன் ஆகிய இருவருக்கும் சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!
{{comments.comment}}