என்று கனவு நனவாகும்...?

Jun 27, 2025,04:33 PM IST

- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி


என்ன... கலை.... ஏதோ... ஆழ்ந்த சிந்தனை...!! கவலையா இருக்கிற மாதிரி தெரியுது... என்னாச்சு... !!


ஒன்னும் இல்லடி... சும்மாதான்... எதோ  சில கனவுகள்... நினைவுகள்.... நேத்திக்கு நடந்ததை  நினைச்சு பார்த்தா  மனசுக்கு ரொம்ப கஷ்டமா  இருக்கு.... ரேவதி.


என்னாச்சு ...? என்ன நடந்தது...?என்ன கஷ்டம்... கலை


என்னத்த சொல்ல .....ரேவதி நேத்திக்கி...  நான் பருப்பு வாங்க கடைக்குப் போயிருந்தேன்.  ஒரு அம்மா வந்தாங்க. . கொண்டக்கடலை ஒரு கிலோ கொடுங்கன்னு கேட்டாங்க.  அந்த கடைக்காரர்  ஒரு கிலோ பாக்கெட்டை எடுத்து கொடுத்தார். 


அதுக்கப்புறம்தான் விஷயமே... அந்த அம்மா கையில   பெரிய.. ஸ்டோர் சாக்கு பை வச்சிருந்தாங்க. . இருந்தும்.....அந்த ஒரு கிலோ பாக்கெட்டை போட ஒரு பிளாஸ்டிக் பை வேணும்னு ஒத்தக்கால்ல நிக்கிறாங்க. 


எனக்கு ஒரே ஆச்சரியமா இருந்தது .இவ்வளவு பெரிய பை வச்சிருக்கு. ஒரு கிலோ கொண்டைக்கடலை   பாக்கெட்டை அந்தப் பைக்குள்ள வச்சுக்கிட்டா என்ன..?


என்னால தாங்க... முடியலை  ரேவதி.




நான் கேட்டேன்... ஏம்மா இவ்வளவு பெரிய பை வச்சிருக்கீங்க. அதிலேயே இந்த கொண்டக்கடல, பாக்கெட்டை போடக்கூடாதான்னு கேட்டேன். அதுக்கு அந்த அம்மா சொல்றாங்க..., அதுக்குள்ள முட்டை இருக்கு....என்று. அது சொன்னது எனக்கு சிரிப்பாக இருந்தது. கோவமும் வந்தது.


கடைக்காரர்  ஒரு பிளாஸ்டிக் கவர் கொடுத்தவுடன், அதற்குள் போட்டு, ஸ்டோர் பைக்குள்ள வச்சிடுச்சு.  இப்ப அந்த முட்டை உடையாதா.. ரேவதி.. ? ஏன் இப்படி மக்கள் இருக்காங்க..?


நேத்துல இருந்து திரும்பத் திரும்ப இந்த சம்பவம் என்  மனசுக்குள்ளே ஓடிட்டே இருக்கு ... வீட்டுக்கு போன உடனே..  கொண்டைக்கடலையை எடுத்து டப்பால கொட்டிட்டு , இரண்டு பிளாஸ்டிக் கவரையும் குப்பையில் போட போறாங்க. ஒரு கிலோ கொண்டக் கடலைக்கு இரண்டு பிளாஸ்டிக் கவர்......  குப்பையில் போகப்  போகுது. அதுக்கு ஏன் இப்படி ....?  நினைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ரேவதி.


இதுதான் உன் கவலையா கலை. உண்மைதான்... என்ன பண்றது. இன்னும் கொஞ்ச நாள்ல பூமியில மண்ணையே பார்க்க முடியாது. பிளாஸ்டிக் கவர் மேல தான் நடந்து போவோம். 


ரோட்ல எங்கே பார்த்தாலும் ஒரே.... பிளாஸ்டிக் குப்பை . அதைப் பார்க்கும்போது மனசு என்னவோ.... செய்யுது.  வாய்க்கால்  , திறந்த சாக்கடை எல்லாம் அவ்வளவு பிளாஸ்டிக் பை.. பார்க்க பார்க்க வயிறு எரியுது. ரேவதி. ரோடு சுத்தமா, சுற்றி பசுமையா இருந்தா எவ்வளவு ரம்மியமாக இருக்கும் . இப்போ கண்ண மூடிட்டு போற மாதிரி இருக்கு.


ஆமா...கலை .. கண்குளிர பார்க்க முப்பது வருஷத்துக்கு முன்னாடி போகணும்.


ஒரு திருமண விழா முடிந்தால் ....... எவ்வளவு பிளாஸ்டிக் தண்ணி  பாட்டில்...  கழிவுகள். பிளாஸ்டிக்  வாழை இலையில சுடச்சுட பிரியாணி போடுறாங்க. 


இந்த கழிவுகளை எங்கே போய் கொட்டுவது....?


டிவில ஒரு நியூஸ் போட்டாங்க.  பாத்தியா ரேவதி...மாட்டு வயித்துக்குள்ள இருந்து, ஆபரேஷன் பண்ணி 10 கிலோ பிளாஸ்டிக் கவர் எடுத்தாங்களாம். இந்த கொடுமையை எங்க போய் சொல்றது.


ஆமா ...ஆமா...  நான் கூட பார்த்தேன். என்ன செய்றது கலை... உன் கவலை நியாயமானது தான்.


2015 டிசம்பர் வெள்ளம் சென்னையே புரட்டிப்போட்டது... வெள்ளத்தில் அடிச்சுக்கிட்டு போயி எவ்வளவு பிளாஸ்டிக் பை தண்ணீர்  போற வழியை, அடைத்துக் கொண்டது. 10,000 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அடித்து கொண்டுவரப்பட்டு அகற்றப்பட்டது. வர்தா புயல் வந்த புரம் மக்கள் எப்படி கஷ்டப்பட்டாங்க. எல்லாத்தையும் டிவியில் பார்த்தாங்க தானே... தண்ணி போக வழியில்லாமல் தண்ணியும் எல்லார் வீட்டுக்குள் புகுந்தது. எல்லாத்தையும் மக்கள் உடனே மறந்து விடுகிறார்களே. செடி ,மரங்கள் எல்லாத்துலயும் பிளாஸ்டிக் கவர்  , தண்ணில அடிச்சிட்டு போயி  எப்படி மாட்டிட்டு இருந்தது. அந்தக் காட்சியை மறக்க முடியல.




அப்புறம் இன்னொரு விஷயத்தை , சொல்ல மறந்துட்டேன் அந்த அம்மா...நான் கேட்டதுக்கு, ஆமா ....நான் ஒருத்தி பிளாஸ்டிக் யூஸ் பண்ணாம இருந்தா..... போதுமாக்கும் அப்படின்னு சொல்லி, கோவமா முனங்கிட்டே போகுது.


இப்படி எல்லாரும் நினைச்சா .....அப்ப யார் தான் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுவது.


வரும் வரும் .....முடிவுக்கு வரும் .....இப்போ கவர்மெண்ட் அரசாணை எல்லாம் போட்டு இருக்கு. பிளாஸ்டிக் கவர்  கடையில கொடுக்கக் கூடாது ன்னு..


ஆமா இதுவரைக்கும் பல தடவை அரசாணை போட்டாச்சு. இத நான் கடையில போய் சொன்னேனா... அவங்க சொல்றாங்க ....எங்களுக்கு பிளாஸ்டிக் கவர் எல்லாம் கிடைக்குது. அதனாலதான் வாங்குகிறோம் . பிளாஸ்டிக் கவர் கிடைக்கா விட்டால் நாங்க  எப்படி வாங்குவோம். ? அதனால... போயி பிளாஸ்டிக் பை உற்பத்தி செய்ற இடத்துல தடுத்து நிறுத்துங்கள் என்று சொல்கிறான்.


இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கே தெரியலை.. இதுக்கு பதில் சொல்லணும்னா அதுக்கு பின்னாடி பெரிய கதை இருக்கு... கலை


எனக்கு என்ன பயம்னா இப்போ இந்த நெகிழிப்பைகளால் நம்ம பூமி பயங்கரமா வெப்பம் ஆயிடுச்சு  என்று உலக சுகாதார நிறுவனம்  சொல்லுது.  இப்போ  ஒரு ஆராய்ச்சியிலே  மனித ரத்தத்தில் பாலிமர் பிளாஸ்டிக் துகள்கள் இருக்கிறதா கண்டறியப்பட்டுள்ளதாம்.  இதனால மனித உடலில் பல பாதிப்புகள் ஏற்படும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. குழந்தைகளின் மலத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருக்கிறதாம்.  இந்த நிலை நீடித்தால் பல உடல் நலக் குறைகள் ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.


முன்னாடி தண்ணிய குளத்தில்  இருந்து எடுத்துட்டு வருவோம். எல்லா சத்துக்களும் நிறைந்து அவ்வளவு சுவையா இருக்கும் .இப்ப சத்தே இல்லாத பிளாஸ்டிக் கேன் தண்ணிய  காசுக்கு வாங்க ஆரம்பிச்சுட்டோம் .சில இடங்கள்ல  காற்றையும் காசுக்கு வாங்க ஆரம்பிச்சுட்டாங்க... கொரானா இரண்டாவது அலையில் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் எவ்வளவு பேர் இறந்து போனாங்க ..மறக்கவே முடியல.. இன்னும் போற போக்க பார்த்த , இன்னும் கொஞ்ச நாள்ல உலகம் என்ன ஆகப்போகுதோ..!!! என எனக்கு ரொம்ப பயமா இருக்கு ரேவதி..


அதுதான் என்னோட கவலைக்கு காரணம்.. நேத்துல இருந்து அதே யோசனை தான் எனக்கு. மண் மலடாகி போச்சுன்னு சொல்றாங்க... ரசாயன உரம் போட்டா தான் பூமியில விலையுது. பூமி முழுவதும் கட்டிட கழிவுகளாலும், பிளாஸ்டிக் கழிவுகளாலும்  நிரம்பி கிடக்குது. சுத்தமான மண்ணை எங்கேயும் பார்க்க முடியல. சுத்தமான மண்ணுக்கு எவ்வளவு மருத்துவ குணம் இருக்குனு உனக்கு தெரியுமா...? இயற்கை வைத்தியத்தில் பாதி மருத்துவ முறைகள் மண் சிகிச்சை முறைகள் தான். 


செடி வைக்க மண்ணை காசுக்கு வாங்குறோம். குடிக்கிற தண்ணிய காசுக்கு வாங்குறோம். காற்றையும் காசுக்கு வாங்க ஆரம்பிச்சுட்டோம். எங்கே போய் முடியப் போகுதோ தெரியல..?


இந்த கெமிக்கல் உரம் போட்ட காய்கறிகளை சாப்பிட்டா, மனிதர்களும்  மலடாகி போவார்கள் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.




நம்மளோட அடுத்த தலைமுறைக்கு  50 சதவிகிதம் மலட்டுத்தன்மையை இந்தப் பிளாஸ்டிக் பயன்பாடு  உருவாக்கும் . என  பல ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. சீக்கிரமே முடி உதிர்ந்து வயதான தோற்றம் வந்துவிடும் என்று ஒரு ரிசர்ச் ஆர்டிகில் படித்தேன்.  இப்பவே மக்கள் உணரலைனா அந்த மாதிரியான ஒரு சூழ்நிலை வெகுதூரத்தில் இல்லை.


நிறைய பேர் இதை பத்தி பேசிட்டு தான் இருக்காங்க...கலை. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் மனித குலத்திற்கு ஆபத்து என்பது தெரிந்த உண்மை தான்... என்ன செய்ய..?


நம்மளோட அடுத்த ஜெனரேஷன் மலடாகாம இருக்கணும் என்றால்  இந்த பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க ஏதாவது செய்தே ஆக வேண்டும் இல்லையா..!!! ரொம்ப ஓவரா புலம்புகிறேனோ!.


இல்ல கலை... உன்னோட கவலை ரொம்ப நியாயமானது... அவசரமா கவனிக்கப்பட வேண்டியது.. உன்னோட கனவு விரைவில் நனவாக வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.


நெகிழிக் குப்பைகள் இல்லாத பசுமையான உலகம் எப்போது மீண்டு வரும். எப்போது என் கனவு நனவாகும்.????


(நெகிழியால் ஏற்படும் தீமைகளை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து செயல்பட்டால் தான்,  அடுத்த தலைமுறை வாழ்வதற்கு உகந்த பூமியை விட்டுச் செல்ல முடியும்)


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்.. கோவையிலிருந்து சுற்றுப்பயணம் தொடங்கும் எடப்பாடி பழனிச்சாமி

news

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

news

ஆஸ்கர் விருது வழங்கும் விழா... நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு!

news

என்று கனவு நனவாகும்...?

news

இயற்கை அழகு கொஞ்சும் கூமாபட்டி .. எங்கங்க இருக்கு இந்த ஊரு.. இப்படி போட்டு படுத்தறாய்ங்களே!

news

கோடை விடுமுறையில் பள்ளியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

news

கூட்டணியின் கட்டளைத் தளபதி எடப்பாடி பழனிச்சாமி தான்.. அவர் எடுப்பதே இறுதி முடிவு: ராஜேந்திர பாலாஜி!

news

நிதி ஒதுக்கீடு... தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கப்படும் மாபெரும் அநீதி: சீமான்!

news

யாருக்காகவும் காத்திருக்காதீர்கள்.. உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்