- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
தெருவில் எல்லோரும், அவரவர் வீட்டு வாசலில் நின்றபடி, ஒருவருக்கொருவர் சோகமாய் பேசிக்கொண்டனர். மாடியில் குடியிருப்போர் என்ன ஆச்சு... ஒன்னும் புரியலையே... என்ன பேசிக்கிறாங்க என குழம்பினார்கள். கடைக்கு வந்த காவியாவிற்கு, ஒன்றுமே புரியவில்லை.
“என்னப்பா தம்பி ...என்ன எல்லாரும் ஏதோ பேசிக்கிறாங்களே. என்ன விஷயம்....?” காவியா கடைக்கார பையனிடம் கேட்டாள்.
“ஒன்னும் இல்லக்கா.. அந்த ஜானகி அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்....காம்.. அதான் ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்க.”
“ஐய்யய்யோ அப்படியா.... முருகா ...நல்லபடியாக குணமாகி வீடு திரும்பி வரணும் தம்பி. ரொம்ப நல்லவங்க.”
கேள்விப்பட்டவுடன்... காவியாவிற்கு மனம் கனத்துப் போயிற்று.
வீட்டுக்கு வந்த காவியா, தன் கணவரிடம் , “அந்த ஜானகி அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்... காம். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்களாம்.”
“அப்படியா..? அச்சச்சோ.. மனசுக்கு கஷ்டமா இருக்கு. ஆனால் அவர்களுக்கு ஒன்னும் ஆகாது . நல்லபடியா திரும்பி வருவாங்க. அவர்களுக்கு வில் பவர் அதிகம்.”
“அவுங்க எவ்வளவு பெரிய பதவியை விட்டுட்டு , விருப்ப ஓய்வு வாங்கிட்டு, எல்லாருக்கும் சேவை செய்வதையே தன் கடமையாக நினைத்து, இந்த தெருவுல வந்து இருக்காங்க.. அவுங்க இல்லன்னா.... நம்ம பையன் இந்த ஸ்கூல்ல சேர்ந்து இருக்கவே முடியாது.. உணர்ச்சிவசப்பட்டாள் காவியா. ஜானகி, ஐ.ஏ.எஸ் என போர்டு கூட வீட்டிற்கு முன் இல்ல. அவங்க நம்ம தெருவில் குடிவந்தது ......நாம செய்த அதிஷ்டம்.”
ரஞ்சித் ஓடிவந்தான்... “அம்மா... அம்மா... அந்த ஜானகி அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாம்.. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காங்களாம். எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா.. நான் போயி முருகர் கிட்ட பிரார்த்தனை பண்ணப் போறேம்மா...!! அவங்களுக்கு சீக்கிரம் உடம்பு சரியாகனும்னு.”
“சரி ரஞ்சித்... போய் நல்ல வேண்டிக்க ..”
“பெருமாளே...!!! அந்த அம்மா பத்திரமா வீடு திரும்பணும். அந்த அம்மாவால தான் இந்த தெருவே , இவ்வளவு அழகா இருக்கு . மழை பெய்தா குண்டும் குழியுமாக ....நடக்கவே முடியாம இருந்த ரோடு. அவங்களே பெட்டிஷன் ரெடி பண்ணி, எல்லார்கிட்டையும், கையெழுத்து வாங்கி மேயரைப் பார்த்து.... யாரு செய்வா ...? இப்படி... அவங்க முயற்சியால்தான் இந்த தெருவிலே புது ரோடு போட்டாங்க.....” என காவியா வாசலில் நின்று , அனைவரிடமும் கூறிக் கொண்டிருந்தாள்.
“அது மட்டுமா... !!! வாரத்துல ஒரு நாள் எல்லா பெண்களையும் ,ஒரு மணி நேரம் தெருவில் இறங்க வச்சாங்கலே. எல்லாரும் சேர்ந்து வீட்டை கிளீன் பண்றது, மாதிரி தெருவை சுத்தப்படுத்திணோமே....!!! நினைவிருக்கா..? நம்ம தெருவே அண்ணாநகரில் ஒரு ரோல் மாடல் ஆயிருச்சு. இது அந்த அம்மாவால் தான் சாத்தியப்பட்டது”. பூரித்துப் போனாள் ,வனிதா.
“எல்லாக் கடைகளிலும், போய் நோட்டீஸ் ஒட்டினாங்களே. கடைக்கு வரும்போது துணிப்பை எடுத்துட்டு வரணும் என்று. பிளாஸ்டிக் குப்பையே இல்லாத ஒரே தெரு, நம்ம தெருவாத்தான் இருந்தது.” கண்ணீருடன் கமலா.
வனிதா... இத மறந்துட்ட... ஒரு நாள் நல்ல மழை பெய்து ஓய்ந்த உடன், அத்தனை மரக்கன்றுகளை அவர்களே வாங்கி, ஆள் விட்டு, குழிதோண்டி , நம்ம எல்லாரையும், மரம் நட வச்சாங்களே...!! அன்னைக்கி நம்ம தெருவே திருவிழாக் கோலமாய் இருந்தது.
அவை சாதாரண மரங்கள் அல்ல. பூத்து குலுங்கும் மரங்கள். பறவைகளுக்கு உணவாகும் பழ மரங்கள். பிராணவாயுவை அதிகமாக வெளியேற்றும் மரங்கள், என பார்த்து பார்த்து யோசித்து வாங்கி அல்லவா, நட வைத்தார்கள். காலையில் எழுந்தவுடன் அந்த பறவைகளின் கிறீச் சத்தம் கேட்கும் போதெல்லாம்... ஜானகி அம்மா நினைவுதான் வரும். கண்களை அகல விரித்தாள், கமலா.
அவங்க எப்பவும் சிரித்த முகம். என்ன அமைதியான பேச்சு. முகத்தில் அப்படி ஒரு ஆளுமை. அந்த அம்மாவிற்கு எதிர்மறையா இந்த பிளாட்டில் ஒருத்தி இருக்காளே. தன்னைப் பத்தி மட்டும் தான் நினைப்பாள். அடுத்தவங்க எக்கேடு கெட்டுப்போனா நமக்கென்ன என்று நினைக்கிறவ. பொம்பளையா அவ. உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும். கமலா முனுமுனுத்தாள்.
“எப்பப் பார்த்தாலும் எதிர்வீட்டோட சண்டை. எதுக்கெடுத்தாலும் புகார். கடுகடுத்த முகம். பார்த்தாலே வயிறு பத்திக்கிட்டு வருது. அட அன்னிக்கு என் குழந்தைக்கு திருஷ்டி சுத்தி சூடத்தை என் வீட்டு வாசலில் வைத்தேன். அதுக்கு வந்து, அந்த கத்து கத்தறா. இரண்டாவது மாடியில் இருந்து கீழே இறங்கி , ரோட்டுல போய் வைக்கணுமாம். கொடுமைடா சாமி. எப்ப பார்த்தாலும் மூஞ்சிய இஞ்சி தின்ன குரங்காட்டம் வச்சுகிட்டு.”
“ஒருநாள் எங்க வீட்டுக்கு விருந்தாளி வந்தவங்க செருப்பை அவ வீட்டு பக்கம் தெரியாம போட்டுட்டாங்க. விருந்தாளி இருக்கும் போதே காலிங் பெல்லை அடித்து , வீட்டுக்கு வந்த விருந்தாளி கிட்ட போய் , அறிவு இருக்கா... என் வீட்டு பக்கம் செருப்பை போட்டு இருக்கீங்க எனக் கேட்கிறா, அவ. எனக்கு பகிர்னு ஆயிடுச்சு.. வீட்டுக்கு வந்தவங்க... இப்படி கூட ஒரு பொம்பள இருப்பாளா என மாஞ்சு போய்ட்டாங்க.” புலம்பி தீர்த்தாள் வனிதா.
“ஏன்…என் வீட்டு நாய் ,அவ வீட்டு வாசல்ல மூச்சா போயிருச்சுன்னு போலீசில் போய் கம்ப்ளைன்ட் பண்ணவ ஆவ. என்னன்னு கம்ப்ளைன்ட் பண்ண தெரியுமா.? நெனச்சா சிரிப்பு தான் வருது. இப்படி ஒருத்தியை நான் இதுவரை பார்த்ததே இல்லை. இவளால எல்லாருக்கும் நிம்மதியே போச்சு.” கமலா தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தாள்.
“ஆமா...அவளைப் பத்தி இப்ப போய் பேசிக்கிட்டு. நினைச்சாலே எரிச்சல் வருது. அத விடுங்க.. ஜானகி அம்மா பையனுக்கு போன் போடனும். விதவிதமான மனிதர்கள் உலகில்.”
“காவியா என்னங்க... ஜானகி அம்மா பையனுக்கு போன் போடுங்க. நாம ஏதும் ஆஸ்பத்திரிக்கு போய், ஏதாவது உதவி செய்ய முடியுமானு கேட்போம். உடனே போன் பண்ணுங்க..” காவியா கணவரை அவசரப்படுத்தினாள்.
காவியாவின் கணவர் ஜானகி அம்மாவின் மகனுக்கு போன் செய்தார். இரத்தக் குழாயில் அடைப்பு அதிகம் இருக்காம். உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்களாம். தெரியவந்தது.
“அய்யய்யோ ... அவங்க மத்தவங்களுக்கு உதவி பண்றோம்னு ...தன் உடம்பை கவனிக்காம விட்டுட்டாங்களே... சரி ...நாம இன்னைக்கு போய் அவங்கள பாத்துட்டு வருவோம். சரியாயிடும் .நம்மால முடிஞ்ச உதவியை அவங்களுக்கு பண்ணனும் என்றாள் காவியா. ”
அந்தப் பிளாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் மறுநாள் மாலை ஐந்து மணிக்கு பக்கத்தில் உள்ள கோயிலுக்கு போய் , ஜானகி அம்மாவிற்காக ஒரு கூட்டு பிரார்த்தனை செய்வதாக முடிவாயிற்று. எல்லாருடைய வேண்டுதலுக்கும், பிரார்த்தனைக்கும் , எண்ணங்களுக்கும் சக்தி உண்டு தானே.
ஜானகி அம்மாவிற்கு ஆப்ரேஷன் நல்ல விதமாய் முடிந்து , நார்மல் வார்டுக்கு வந்து விட்டதாக தகவல். அந்த தெரு முழுவதும் விசயம் பரவியது. எல்லோர் முகத்திலும் நிம்மதி பெருமூச்சு ..... நல்ல வேலை . கடவுள் கைவிடல. இன்னும் நமக்கு அவுங்க எவ்வளவு உதவி செய்யணும் ....!!
ஜானகி அம்மா ....டிஸ்சார்ஜ் ஆகி, நாளை வீட்டுக்கு வருவதாக தகவல் . செய்தி காட்டுத்தீயாய்...தெரு முழுவதும் பரவியது. அனைவருக்கும் மகிழ்ச்சி. ஜானகி அம்மா வீடு திரும்பும் போது தெருமுனையிலேயே, காரை நிறுத்தி , அனைவரும் சேர்ந்து ஆரத்தி எடுக்க முடிவு செய்தனர்...ஆஸ்பத்திரியில் இருந்து கார் கிளப்பியாச்சாம். செய்தி அறிந்து எல்லோரும் வீட்டு வாசலில் வந்து காத்து நின்றனர். ஜானகி அம்மா வந்தே விட்டார்.
அனைவர் முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷம்.. ஆரத்தி தட்டுடன் அனைவரும் தெருமுனையிலேயே வரவேற்றனர்.
பின்னாடி ஒரு ஆம்புலன்சின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பி, ஆம்புலன்சிற்கு வழி விட்டனர்.
“யாரு...நம்ம தெருவில் இருந்து ஆம்புலன்ஸ் வருது. காவியா... உங்க பிளாட்டில் இருந்து தான் ஆம்புலன்ஸ் வருது. அப்படியா.. ? என்னன்னு தெரியலையே. நான் அங்கே இருந்து வந்து ஒரு மணி நேரம் ஆச்சு .ஜானகி அம்மா வீட்டுக்கு போய் , அவுங்க வீட்டை ரெடி பண்ணிட்டு நேராக இங்க வந்துட்டேன்.”
ஜானகி அம்மா அவர் வீட்டிற்கு சென்றவுடன் , சிறிது நேரத்தில் காவியா தனது பிளாட்டை வந்தடைந்தாள்... வீட்டுக்குள் நுழைந்தவுடன் காவியாவின் மகன், “அம்மா... அம்மா... அந்த சுடுமூஞ்சி பொம்பள ...ஏதோ மேல இருந்து கீழே விழுந்துருச்சாம். தலையில நல்ல பலமான அடியாம். வீடு பூராம் ஒரே இரத்தம்.”
“அவதான் ஆம்புலன்ஸ்ல போனாளா…? எங்கே இருந்து விழுந்தா?”
காவியா.. உடனே வனிதா வீட்டிற்கு சென்றாள். “என்ன வனிதா. ? என்னமோ அவ விழுந்துட்டாளாம். என்ன...என்னாச்சு. எப்படி விழுந்தா. ?”
“இல்ல காவியா.. மேல லாப்டுல ஏதோ சாமான் எடுத்து இருக்கா. அந்த அலுமினியம் ஏணி அப்படியே சாய்ந்து , கீழே விழுந்து, கட்டில் கார்னர் மேலே தலைபட்டு, தலையில் நல்ல அடி. இரத்த வெள்ளம். அவளைப் பார்க்க சகிக்கல. நான்தான் உடனே ஆம்புலன்ஸ்.. க்கு போன் பண்ணி வர சொன்னேன்.”
“ஆனா காவியா ...நிஜமா என் மனசுல எந்த பதட்டமோ, பச்சாதாவமோ வரல. ஐயோ பாவம்ன்னு மனசு நினைக்கவே இல்ல. ஒரு பூனைக்கு அடிபட்டா கூட அது மேல பாவப்பட்டு என் மனசு கிடந்து தவிக்கும். இவள இந்த நிலைமையில பார்த்தும் ,மனசுல ஒரு தவிப்பும் இல்லை. அந்த அளவுக்கு என் மனசு வெறுத்துப் போச்சு அவ நடத்தையால. இனிமேலாவது அவளுக்கு நல்ல புத்தி வருமான்னு தெரியல. மனிதர்களை மதிக்க தெரியணும்... என்ன காவியா சொல்ற..?”
உனக்கு இவ்வளவு மன உளைச்சல் கொடுத்தும் , அவ விழுந்துட்டான்னு தெரிந்த உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி உதவி செய்து இருக்க. அத அவள் உணர்வாளான்னு தெரியல.
“அவ உணர்ந்தா என்ன ..? உணராமல் போனால் என்ன..? நம்ம மனசு கேட்குமா..? போன் செய்த பத்து நிமிஷத்துல ஆம்புலன்ஸ் வந்துட்டாங்க. ஏதோ போய் நல்லபடியா பிழைச்சு வரட்டும். வந்து ஒரு மனுஷியா நடத்திக்கிட்டா போதும்.”
“ஆனா இந்த பிளாட்டில் அவளுக்காக யாரும் வருத்தப்பட மாட்டாங்க வனிதா. யாருக்கும் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யக்கூடாது. ஆனால் இவள் அனைவருக்கும் உபத்திரவம் மட்டும் தானே செய்து கொண்டிருந்தாள்.”
விஷயத்தை கேள்விப்பட்டு அந்த பிளாட்டில் உள்ள அனைவரும், எங்கோ யாருக்கோ நடந்த நிகழ்வு போல, அது ஒரு நியூஸ் பேப்பரில் வந்த செய்தி போல் , அதனை கடந்து சென்றார்கள்.
சிறிது நேரத்தில் “அவளின் கணவர்” வனிதாவிற்கு போன் செய்தார். “மேடம் ரொம்ப தேங்க்ஸ் மேடம் . உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணிட்டீங்க. கொஞ்சம் தாமதம் செய்திருந்தாலும் பிழைப்பது கஷ்டம் என்று சொன்னார்கள் மேடம். அவளுக்கு உடனே இரத்தம் ஏத்தனுமாம். நம்ம பிளாட்டில் யாருக்காவது ஓ நெகட்டிவ் பிளட் குரூப் இருக்கா…? எனக்கு உங்க கூட பேசவே கஷ்டமா இருக்கு .இருந்தாலும் வேற வழி இல்ல . இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் இரத்தம் ஏத்தலைன்னா உயிருக்கு ஆபத்துன்னு சொல்றாங்க மேடம். ஏதாவது கொஞ்சம் விசாரிங்க மேடம். நானும் பிரண்ட்ஸ் கிட்ட கேட்கிறேன் . ஆனால் அவங்க எல்லாம் ரொம்ப தூரத்தில் இருக்காங்க. ப்ளீஸ் மேடம் .நம்ம பிளாட்டில் யாராவது இருந்தா வர சொல்லுங்க மேடம்.”
வனிதாவிற்கு உடனே கண்கலங்கியது. அவளின் பிளட் குரூப் ஓ நெகட்டிவ். ஐந்து நிமிடத்தில் சேலை மாற்றிக் கொண்டு விரைந்தாள். “காவியா நான் ஹாஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வரேன். வந்து சொல்றேன் .அவசரம் “ என கூறிக் கொண்டே ஆட்டோவில் ஏறினாள் வனிதா.
காவியாவிற்கு ஒன்றும் புரியவில்லை .அவள் பரபரப்பாய் போவதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன ஆச்சு இவளுக்கு..? இவ்வளவு பரபரப்பா போகிறாள்..!! காவியா வியப்போடு வனிதாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்..!!!
(ஒவ்வொரு மனிதனும் போகும்போது எதையும் கொண்டு போகப் போவதில்லை. வாழும் இந்த குறுகிய வாழ்க்கை பயணத்தில் யார் மனதையும் காயப்படுத்தாமல், அன்போடும் அனுசரனையோடும் வாழ்ந்துதான் பாருங்களேன். நான் என்கிற அகங்காரம் ஒழிந்து ,நல்ல மனிதராய் வாழ்ந்து, பிறருக்கு மகிழ்ச்சியை தருவோமே.)
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
கொரோனா பரவல்... கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும்: தமிழக சுகாதாரத்துறை!
தமிழகத்தில் ஜூன் 10,11,12 ஆகிய 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் எச்சரிக்கை!
லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க போகும் சூப்பர் ஹீரோ படத்தின் ஹீரோ இவரா?
ராமதாஸ்-அன்புமணி இடையே சமாதானம் ஏற்படும்: ஜி.கே.மணி பேட்டி
உணவு பாதுகாப்பு தினம் 2025 ஜூன் 7 (World Food Safety Day)
குடிநீர் வாரிய ஊழல் குறித்து நியாயமான விசாரணை வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
புதிய தயாரிப்பு நிறுவன லோகோ.. குன்றக்குடி முருகன் பாதத்தில் வைத்து வழிபட்ட ரவி மோகன்!
இப்படியும் மனிதர்கள்..!!! (சிறுகதை)
Kashmir gets Vande Bharat: ஜம்மு காஷ்மீருக்கு முதல் வந்தே பாரத்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
{{comments.comment}}