கோவிலுக்குத் திரும்பினார் அழகர்.. மதுரை சித்திரை திருவிழா நிறைவு

May 06, 2026,01:31 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ  வருடம் 20 26 உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன், 19ஆம் தேதி சித்திரை திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 6 2026  உற்சவ சாந்தியுடன் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. மதுரை சித்திரை திருவிழா என்பது சைவ வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் உன்னத விழா ஆகும்.


சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் :


முதலில் மீனாட்சியம்மன் கோவிலில் இத்திருவிழா தொடங்கியது.பிறகு மதுரையில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைணவ தலமான  கள்ளழகர் கோவிலில் இந்த விழா நடைபெற்றது. ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழாவின் சிகர  நிகழ்வுகளான மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 28ஆம்  தேதியும், மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி புதன்கிழமையும், கோலாகலமாக நடைபெற்றது.


இதற்கிடையே அழகர் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 29ஆம் தேதி புதன்கிழமை  அழகர் தங்க பல்லக்கில் மதுரை புறப்பாடு நடைபெற்றது. அழகர் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் ஆக வேடம் பூண்டு  தங்கப் பல்லக்கில்  மதுரைக்கு புறப்பட்டார். இந்தக் கோலாகலமான நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர். 




கண்டாங்கி பட்டுடுத்தி கையில் நேரிக்கம்பு  ஏந்தி, கள்ளழகர் தங்க பல்லக்கில் எழுந்தருளினார். பதினெட்டாம் படிக் கருப்பண்ண சுவாமி சன்னதி முன்பு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன.அங்கிருந்து கள்ளழகரின் பல்லக்கு உத்தரவு பெற்று நகரத் தொடங்கியது. இந்நிகழ்வில் குழுமியிருந்த பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என பக்தியுடன் எழுப்பிய கோஷங்கள் விண்ணை தொடும் அளவிற்கு ஒலித்தது. கள்ளழகர் சகல பரிவாரங்கள் முன் செல்ல பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வந்து சேர்ந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தங்கப் பல்லக்கில் கண்டாங்கி பட்டுடுத்தி,எழுந்தருளிய கள்ளழகருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்சேவை அளித்தனர். பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியும், அழகர், கருப்பண்ணசாமி, என சிறு குழந்தைகள் வேடமணிந்து, ஆடிப்பாடி, தீப்பந்தம் ஏந்தி "கோவிந்தா கோவிந்தா" என்று கோஷமிட்டு வழிபட்டனர்.


சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 'கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி' - மே 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கினார். மதுரையே குலுங்கும் அளவிற்கு லட்சக்கணக்கான  பக்தர்கள் தரிசனம் பெற்றனர். ஆற்றில் இறங்கி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.


 மே 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருமாலிருஞ்சோலை மலைக்கு ( அழகர் மலை)திரும்பிய அழகருக்கு மக்கள் மலர்களை தூவி, திருஷ்டி கழிப்பதற்காக பூசணிக்காய் சுற்றி, தீபம் ஏற்றி வழிபாடுகள் செய்தனர். சுமார் 250 டன் மலர்கள் தூவி வழிபாடுகள் நடைபெற்றது. பிரகாரத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.


சித்திரை திருவிழா நிறைவு:


மே 6ஆம் தேதி, புதன்கிழமை,உற்சவ சாந்தியுடன் இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்ற சித்திரை திருவிழா நிறைவடைகிறது. மீண்டும் அடுத்த ஆண்டு சித்திரை திருவிழாவில்  கள்ளழகரை சந்திப்போம்.


மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்