- முனைவர் ராணி சக்கரவர்த்தி
30 வயது கமலாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னிடம் ஆற்றுப்படுத்துவதற்காக அவருடைய கணவர் அழைத்து வந்தார். கமலா மிகவும் சோர்வாகவும் பயத்தோடும் காணப்பட்டார். அவள் அதிகம் சந்தேகப்படுவதாகவும், தேவையில்லாமல் பயப்படுவதாகவும், இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதாகவும் அவரது கணவர் கூறினார். முதலில் அவரது கணவரிடம் பிறகு கமலாவிடமும் பேசியதிலிருந்து பிரச்சனையின் ஆணிவேரை, புரிந்து கொள்ள முடிந்தது.
கமலாவின் மாமியாருக்கு இரண்டு மகன்கள். இவர் மூத்த மகன். மூத்த மகன் மீது அவருடைய தாய்க்கு அதிகப் பாசம். தன் மகனை எந்த வேலையும் செய்யவிடாமல், தானே அனைத்து வேலைகளையும் செய்வார். மகன் விரும்பியதை சமைத்து கையில் கொண்டு தருவது, அவர் கேட்கும் முன்பே அவருக்கு வேண்டியதை வீட்டில் வாங்கி வைத்து விடுவது, வெளியில் எங்கு சென்றாலும், உடன் கூட்டிச் செல்வது என அதிக செல்லத்தோடும், பாதுகாப்போடும் வளர்த்திருக்கிறார். மகனுக்கும், தன் தாய் மீது அதிக பாசம்.
இந்த மகனின் திருமணத்திற்கு சில வருடங்களுக்கு முன்னர் அவரது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துவிட்டார். அதன் பிறகு, தன் மகன் மீதான சார்பு நிலை மேலும் அதிகரித்துள்ளது. மகனை அதிக நேரம் அருகிலேயே வைத்துக் கொள்வது, மகன் அறையிலேயே படுத்து உறங்குவது, தன் மனக்கவலைகள் அனைத்தையும் மகனோடு பகிர்ந்து கொள்வது என, மகனை அதிகம் சார்ந்து இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். உண்மையில் இந்த தாய் தன் சுக துக்கங்களை மறந்து தனக்கென வாழாமல் தன் மகனுக்காகவே வாழ்ந்த ஒரு உண்மையான தியாகத் தாய் தான்.
தன் மகனின் திருமணத்திற்கு பிறகு, இந்த தியாகமே அவர்களுக்கு வினையாக அமைந்தது. தானே முன் நின்று பார்த்து, ஆராய்ந்து ஒரு பெண்ணை தேர்வு செய்து தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். மருமகள் வீட்டுக்கு வந்ததும் சொன்ன முதல் வார்த்தை, நானே அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்கிறேன். நீ சிரமப்பட வேண்டாம். ஓய்வாக இரு என்பதுதான். இதைக் கேட்டபோது முதலில் மருமகள் கமலாவிற்கு மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. தனக்கும் தன் கணவருக்கும் தேவையானவற்றை சமைத்துக் கொடுப்பது, வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து விடுவது, எவ்வளவு நேரம் தூங்கினாலும் ஒன்று சொல்லாமல் இருப்பது போன்றவைகள் கமலாவைத் திருப்தி அடையச் செய்தது.
பெண்களே.. நம் உரிமை நம் கையில்.. கண்ணையும் கருத்தையும் திறந்து வைங்க போதும்!
நாட்கள் செல்ல செல்ல, தனது மாமியார், தனது கணவர் மீது கொண்டிருக்கும் அதீத உரிமை, அவளை எரிச்சல் அடையச் செய்தது. தனது கணவர் அலுவலகம் செல்லும் பொழுது, அவரது தாய், எதிரில் நடந்து வந்து வழி அனுப்புவது, அறைக்குள் வேகமாக நுழைந்து, அவரது உள்ளாடைகள் முதல் கொண்டு அனைத்து ஆடைகளையும் எடுத்துக்கொண்டு போய் துவைப்பது, பணி முடிந்து வந்த பிறகும், தனது கணவர், தன் தாயோடு அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பது போன்ற செயல்கள், கமலாவின் மன அமைதியை முற்றிலுமாகக் குலைத்துவிட்டது. தன் கணவருக்கு, அவருடைய தாய், சில நேரங்களில் பால் சாதம் ஊட்டி விடுவதை பார்க்கும் போது கமலாவிற்கு கோபம் தலைக்கு ஏறிவிடும்.
தங்களின் தனி அறையில் கொஞ்சம் சத்தம் போட்டுச் சிரித்தால் கூட அவர்களுடைய கணவர் சத்தமாகச் சிரிக்காதே அம்மா வெளியில் இருக்கிறார், கேட்டால் சங்கடப்படுவார், எனக்கு அம்மா தான் எல்லாம், பிறகுதான் மற்றவர்கள் என கணவர் சொல்லச் சொல்ல கமலாவிற்கு, அவளின் மாமியார் மேலான வெறுப்பு அதிகமாகிவிட்டது. அறையிலேயே முடங்கிக் கிடக்க ஆரம்பித்தார். தனது கணவர் தனக்கு முக்கியத்துவம் தராதது, தன்னை இரண்டாம் பட்சமாக நடத்துவது அவளை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. இதற்கிடையில் கமலாவிற்கு, ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. தனது மாமியார் குழந்தையைிப் பார்க்க வந்த பொழுது, குழந்தையைக் காட்டாமல், நெஞ்சோடு குழந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டாள். தனது கணவர் எவ்வளவோ கெஞ்சியும், குழந்தையைத் தன் மாமியார் கையில் கொடுக்க அனுமதிக்கவில்லை.
தாய் வீட்டிலேயேத் தங்கியிருந்த கமலா ஒரு வருடம் கழித்து, தனது கணவர் வீட்டுக்கு குழந்தையோடு வந்தாள். முதல் நாளில் இருந்தே குழந்தையை யாரும் தூக்கவோ, குழந்தை அறையை விட்டு வெளியே செல்லவோ அனுமதிக்கவில்லை. தனக்கும், தன் குழந்தைக்கும் வேண்டியதை சமைக்கும் பொழுது தன் மாமியார் சமையல் அறைக்குள் வரக்கூடாது. தனது அறையை பலமுறை துடைப்பது, வாசலில் எலுமிச்சம் பழம் கட்டுவது, மந்திரித்த கயிறுகளைக் குழந்தையின் உடலில் நிறைய கட்டுவது, எந்நேரமும் பதற்றத்தோடு இருப்பது என அவளின் வித்தியாசமான செயல்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
ஒருநாள் என் குழந்தையை உங்க அம்மா கொலை செய்யப் பாக்குறாங்க, நான் சமைத்து வைத்த உணவில் விஷத்தைக் கலந்து விடுகிறார்கள் என கமலா அழுவதை பார்த்த பிறகு தான் அவரது கணவருக்கு, பிரச்சனையின் வீரியம் புரிந்தது. பிறகுதான் பலவந்தமாக என்னிடம் அழைத்து வந்திருக்கிறார்.
சிரிக்க மறந்ததால் சிதைந்து போனோம்.. நம்மை நாமே செதுக்கி எழும்புவோம்.. சிரிக்கலாம் வாங்க தோழிகளே...!
பொதுவாக தாய்மார்களுக்கு தங்களின் மகனின் மீது எப்போதும் தனி பாசம் இருக்கும். மகன்தான் குடும்ப வாரிசு, தனது வயதான காலத்தில் மகன்தான் தன்னைப் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணத்தில் தாய்மார்களுக்கு மகன் மீது சார்பு நிலை அதிகரிக்கிறது. தங்களின் சுய தேவைகள், ஆசைகள், கனவுகள் அனைத்தையும் மறந்து குடும்பத்திற்காகவே பெண்கள் வாழ்வதால், வயதான காலத்தில் தன் மகன், தன்னை கவனிக்காமல் விட்டு விடுவானோ என்ற பாதுகாப்பற்ற உணர்வுக்கு ஆளாகிறார்கள். பொருளாதாரத்தில் சுய சார்பு இல்லாமையும் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. திருமணத்திற்கு முன்னர் தந்தையையும், திருமணத்திற்கு பிறகு கணவனையும், பிறகு மகனையும் சார்ந்திருக்கும் பெண்கள், தனித்து செயல்பட பயப்படுவார்கள். அவ்வாறு தனித்தியங்கும் நிலை வரும் போது, அதிக மானச்சோர்வுக்கு ஆளாவார்கள். உரிமைப் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கிறது. கடைசியில் வில்லியாக பார்க்கப்படுகிறார்கள்.
இதில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது? யார் செய்தது சரி? கமலா செய்ததா? அவர் மாமியார் செய்ததா? எனக் கேட்டால் இருவருமே சரிதான். சில இடங்களில் இருவர் செய்ததுமே தவறுதான். இருவருமே மன தைரியம் இல்லாதவர்கள், சுய சார்பற்றவர்கள். உறவுச் சிக்கல்களை சரியாகக் கையாளத் தெரியாதவர்கள். கண்மூடித்தனமான பாசம் வைத்திருப்பவர்கள். இவர்கள் இருவரையும், சரிவரக் கையாளத் தவறிய கமலாவின் கணவர் தான் முதலில் மாற வேண்டியவர். தாயையும் மனைவியையும் ஒப்பிடக்கூடாது. ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் உயர்த்திப் பேசுவதோ, தாழ்த்திப் பேசுவதோ கூடாது. தாய்க்கான இடத்தையும், மனைவிக்கான இடத்தையும் சரியாகப் பிரித்து உணர்ந்து செயல்பட வேண்டும். தனக்கு, தன் குடும்பத்தின் மேல் இருக்கும் அக்கறையும் பாசமும், தன் மனைவிக்கும் அவளின் குடும்பத்தில் மேல் இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அவனை அவளின் குடும்பத்திலிருந்து முழுவதுமாகப் பிரிக்க நினைப்பது, பல பிரச்சினைகளுக்கு அடித்தளமாக அமையும்.
தாயாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பெண்கள், எல்லாவற்றிற்கும் ஆண்களைச் சார்ந்து இருக்கும் நிலை மாற வேண்டும். சிறு வயது முதலே குழந்தைகள், தன் வேலைகளைத் தானே செய்து கொள்ள, தனித்து செயல்பட வாய்ப்பளிக்க வேண்டும். மாமியார்கள், தன் மகளுக்கு கிடைக்க வேண்டும் என நினைக்கும் உரிமைகள், தன்னுடைய மருமகளுக்கு கிடைக்க வேண்டும் என நினைக்க வேண்டும்.
தன் மகனின் திருமணத்திற்கு பிறகு, அவர்களின் குடும்பத்தை அவர்களே நிர்வாகிக்கவும், அவர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழவும் இடம் அளிக்க வேண்டும். மாமியார்கள், உங்களின் வாழ்க்கை நீங்கள் ரசித்து வாழப் பழகிக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்ததை செய்யத் துவங்குங்கள். மற்றவர்களின் சுமைகளை உங்கள் தோள்களில் சுமக்க வேண்டாம். மகிழ்ச்சியாக இருங்கள்.
மருமகள்கள் தன் தாய்க்குக் கிடைக்க வேண்டிய கிடைக்க வேண்டும் என நினைக்கும் அன்பும் உரிமையும், தன் மாமியாருக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும். பல வருட கால தாயின் பாசத்தை, அவளின் தியாகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். வயது மூப்பு காரணமாக அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உடல் மற்றும் மனசோர்வையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் அரவணைப்பும், உங்களிடமிருந்து கிடைக்கும் போது அவர்களின் அதிகாரம் செலுத்தும் எண்ணம் குறைந்து விடும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, மதிப்பளித்து, விட்டு கொடுத்து வாழும் பொழுது குடும்பம் கோவிலாக மாறும். தனது குடும்பத்தை நேசிப்பது போல தனது இணையரின் குடும்பத்தையும் நேசிப்பது, அனுசரித்து செல்வது அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று என்பதை கணவன் மனைவி இருவரும் உணர வேண்டும். இந்த அமைதியான குடும்பம் தான், மனித நேயமிக்க, சிறந்த அறிவாற்றல் கொண்ட குழந்தைகள் உருவாக, வளமான விளைநிலமாக அமையும்.
கட்டுரை: முனைவர் ராணி சக்கரவர்த்தி எழுதிய மனதோடு பேசுவோம் தோழி நூலிலிருந்து.
வானமே இடிந்து தலையில் விழுந்தாலும் டென்ஷன் ஆகாமல் கூலாக இருக்கும் 7 ராசிக்காரர்கள்
என்னது.. ஐபிஎல் 2025 பைனலில் அனுஷ்கா அணிந்து வந்த ஜீன்ஸ் விலை ரூ.27,000 ஆ?
வட்டச்செயலாளருடன் பேசுவது ஒரு தவறா?. அண்ணாமலை கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!
எப்ப தான் குறையுமோ... வாடிக்கையாளர்களை புலம்ப வைத்து வரும் தங்கம் விலை!
Rain rain come again.. மே மாதத்தில் இந்தியாவில் மழை அளவு 125 சதவீதம் அதிகரிப்பு!
இந்தியாவுடனான மோதலை.. மதப் பிரச்சினையாக்க முயன்ற பாகிஸ்தான்.. நோஸ்கட் கொடுத்த மலேசியா
உங்க கனவை RCB நிறைவேத்திருச்சு.. SBI கனவை நீங்க நிறைவேத்துங்க.. மல்லையாவுக்கு நூதன கோரிக்கை!
IPL 2025 Final பெங்களுரு அணி த்ரில் வெற்றி...முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி
IPL 2025 Final...விராத் அவுட்...கை நழுவி போன சாதனை...ரசிகர்கள் ஏமாற்றம்
{{comments.comment}}