புதிய தொடக்கம்!

Apr 13, 2026,10:47 AM IST

- தமிழ்மாமணி  இரா.  கலைச்செல்வி   


நேற்றைய கண்ணீர் நேற்றோடு போகட்டும்.

இன்றைய தொடக்கம் வெற்றியாய் அமையட்டும்.


முற்றிலும் புதிதாய் விடியல் பிறந்தது,

முன்னேறிச் செல்லத்  தான் தம்பி!


கடந்தவை எல்லாம் பாடம் என்று,

கற்றுக்கொண்டே நடப்போம் - இனி


நடப்பவை எல்லாம்  நன்மைக்கே  என்று,

நம்பிக்கையோடு  வீறுநடை போட்டு நடப்போம்!




நீ கண்ட தோல்விகள்  யாவும்,

நீண்ட வெற்றிப்படிகளின் முதல் படி!


உள்ளத் தெளிவும் உறுதிப் பாடும்,

உயரப் பறக்கச் செய்யும் உன்னை. 


மெள்ள நகரும்  உன் முயற்சி கூட

மேகம் தொடுவது நிச்சயம்.!


இலக்கு நோக்கிப் பயணம் செய்தால்,

இமயமே உனக்குச் சிறியது  ஆகும்.


விலக்க நினைக்கும் தடைகள் யாவும்

வெற்றிப் பாதைக்கு  வித்திடும்!


ஓயாத உழைப்பும் ஓயாத தேடலும்

ஒரு வெற்றியாளனாய் உன்னை உருவாக்கும்.!


உன் இந்த புதிய  தொடக்கப் பயணம் ,

உன்னத வெற்றியை நிச்சயம் கொடுக்கும்.!


உன் சாதனை,சரித்திரப் பக்கத்தில் உன் பெயரை நிச்சயம் சேர்க்கும்!


(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்