சென்னை: விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு நுகர்வோர் கடன் மதிப்பெண் (சிபில் ஸ்கோர்) அடிப்படையில் மட்டுமே இனி வேளாண் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
கூட்டுறவு வங்கிகளில் நுகர்வோர் கடன் மதிப்பெண் (CIBIL Score) அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த 26.05.2025 அன்று தமிழ்நாடு கூட்டுறவுத் துறை பதிவாளர் விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் பின்பற்றுகிற நடைமுறையின்படி, இனி கூட்டுறவு கடன் பெறும் விவசாயிகளின் சிபில் ஸ்கோர் (CIBIL Score) மதிப்பெண் பார்த்து தகுதி உள்ளோருக்கு மட்டுமே இனி வேளாண் கடன் வழங்கிட வேண்டுமென உத்தரவைப் பிறப்பித்துள்ளது விவசாய பெருமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி நகைக்கடன் தொடர்பாகப் புதிதாகப் பிறப்பித்த 9 விதிகள் கூட்டுறவு துறையைக் கட்டுப்படுத்தாது என மாண்புமிகு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் அவர்கள் கூறியிருந்த நிலையில், அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக அதே துறையின் தலைமை அலுவலர் ரிசர்வ் வங்கி விதிமுறையைப் பின்பற்றி இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டது எப்படி? இது அமைச்சருக்குத் தெரியாமல் வெளியிடப்பட்டதா? அல்லது அமைச்சரின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டதா? அல்லது இந்திய ஒன்றிய பாஜக அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவிட்டு, மறைமுகமாக நடைமுறைப்படுத்தும் திராவிட மாடல் தில்லுமுல்லுகளில் இதுவும் ஒன்றா?

இந்திய ரிசர்வ் வங்கியே மக்களுக்கு எதிரான தன்னுடைய புதிய நடைமுறையைத் திரும்ப பெற்றுவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு எதிரான இத்தகைய கடுமையான விதிமுறையை விதித்திருப்பது ஏன்? ரிசர்வு வங்கி விதிமுறைகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறிய தமிழ்நாடு அரசு, தற்போது வணிக வங்கிகளுக்கான நடைமுறையை கூட்டுறவு வங்கிக்குப் பொருத்துவது முறைதானா?
வேளாண் கடன் பெற்ற விவசாயிகள் அக்கடனைத் திருப்பி செலுத்தும் கணக்கீடான சிபில் ஸ்கோர் மதிப்பெண்களின் அளவீடு தான் விவசாயிகள் கடன் பெறுவதற்கான தகுதியாகத் தீர்மானிக்கப்படும் என்றால் இலட்சக்கணக்கான ஏழை எளிய விவசாயிகள், இனி வேளாண் கடன் பெறவே முடியாது. இது வேளாண்மையை அழித்தொழித்து, விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேற்றுகின்ற கொடுஞ்செயலாகும். தொழில் முனைவோருக்குக் கடன்கொடுக்க, வணிக வங்கிகள் இலாப நோக்கோடு கையாளும் சிபில் ஸ்கோர் கணக்கீடுகளை, வேளாண் பணிகளைத் தடையின்றி செய்வதற்கு ஏதுவாக சேவை மனப்பான்மையோடு விவசாயிகளுக்கு வழங்கும் கடன்களுக்கு விதிப்பது முறைதானா?
இதரப் பணிகளைப்போல வேளாண்மை ஒரு தொழிலல்ல; அது ஒரு வாழ்வியல் என்பது திமுக அரசுக்கு தெரியாதா? விவசாயிகள் வெயிலிலும் மழையிலும் அரும்பாடுபட்டு பல தடைகளைக் கடந்து விளைவிக்கும் விளைப்பொருட்களை நம்பியே உலகில் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றன. உழவர்கள் கைம்மடங்கி படுத்துவிட்டால், உலகத்தை துறந்த துறவிகளுக்கும் உணவு கிடைக்காத அவலநிலை ஏற்படும் என்பதாலேயே 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்கிறார் தமிழ்மறை இயற்றிய வள்ளுவப்பெரும்பாட்டன்.
மற்ற தொழில்களைப் போல விவசாயம் என்பது மாதா மாதம் லாபம் ஈட்டும் தொழிலுமல்ல; ஐந்தாறு மாதங்கள் ஓய்வின்றி உழைத்து, இயற்கையும் துணை புரிந்தால் மட்டுமே வெள்ளாமை வீடு வந்து சேர்ந்து சிறிதளவாவது லாபம் கிடைக்கும் அதுவும் அரசின் கொள்முதல் விலை, சந்தையின் விற்பனை விலையை பொறுத்ததாகும். அத்தகைய நிலையில், ஒவ்வொரு மாதமும் கடனைத் திருப்பிச்செலுத்தும் முறையை வைத்துத்தான் இனி கடன் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பது உழவினை முடக்கும் சிறிதும் அறமற்ற கொடுஞ்செயலாகும்.
ஏற்கனவே வறட்சி, புயல், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், விதைகள், உரங்கள், வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றின் விலையைக் கட்டுக்குள் வைக்காமல் பன்மடங்கு அதிகரிக்கச் செய்தும் வேளாண் பெருங்குடி மக்களை ஒன்றிய, மாநில அரசுகள் வாட்டி வதைத்து வருகின்றன. இத்தனை தடைகளையும் தாண்டி விவசாயிகள் விளைவித்த பயிர்களுக்கு உரிய விலை வழங்காமலும் ஏமாற்றி வருகின்றன. மேலும், நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட அடிப்படையான வேளாண் பணிகளுக்குக் கூட ஆள் கிடைக்காத அவலச் சூழல் நிலவுவதால் விவசாயிகள் வேளாண்மையைக் கைவிட வேண்டிய நெருக்கடியானச் சூழலை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர்.
அதிலும் கடன் வாங்கித்தான் வேளாண்மை செய்ய முடியும் என்ற அவலநிலையில் விவசாயிகளை வைத்துவிட்டு, அப்படி கடன் வழங்கவும் புதிய விதிமுறைகள் என்ற பெயரில் திமுக அரசு கட்டுப்பாடு விதிப்பது, விவசாயிகள் முற்று முழுதாக வேளாண்மையைக் கைவிடுகின்ற பேராபத்தான சூழலை ஏற்படுத்தும். இது மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டு விலைவாசி உயரவும், மக்கள் பசியால் மடியவுமே வழிவகுக்கும். இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் விவசாயிகளையும் வேளாண்மையையும் பாதுகாக்கும் முறையா?
ஆகவே, வேளாண்மையை அழித்தொழிக்கும் வகையில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் இனி நுகர்வோர் கடன் மதிப்பெண் (சிபில் ஸ்கோர்) அடிப்படையில் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
உருவம் முக்கியமல்ல, கடமையே முக்கியம்.. Conversation between minute and hour
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
What is yourss is Yours.. உனக்கானது உன்னை வந்தடையும்!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
Porselvi Rajan Tamil Poem: வெயிலோடு விளையாடி!
Deepa Ravi Poem: வேறெதுவும் தேவையில்லை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
{{comments.comment}}