சொற்களில் தட்டிப் பதறும்.. சுடிதாரின் விளிம்புகள்!

Aug 14, 2026,03:35 PM IST

- ப. வினு


அவள் இன்னும்

என் கற்பனைகளின் அறையில்தான்

இருக்கிறாள்.


ஆனால்,

முன்பு போல அல்ல...


அவள் இப்போது

வெள்ளைப் பட்டாடைகளையோ

மேகத்தின் ஆடைகளையோ

உடுத்துவதில்லை.

சமீபகாலமாய்

அவள் சுடிதார் அணியத் தொடங்கியிருக்கிறாள்.


ஒரு துப்பட்டாவை

எப்படியும் நழுவ விட்டுவிடும்

அவளது அசட்டுத்தனமும்,

துணிகளின் வண்ணங்களில்

அவள் தேடும்

இந்தக் காலத்தின் சிறுபிள்ளைத்தனமும்

எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.




அவள் என் கவிதைகளுக்குள்

நடந்து செல்லும்போது

அந்தச் சுடிதாரின் விளிம்புகள்

என் சொற்களில் தட்டிப் பதறுகின்றன.


யாருமற்ற இரவுகளில்

அவள் தன் சுடிதாரைச் சரிசெய்தபடி

என்னிடம் கேட்கிறாள்

இந்த நிறம் எனக்கு நன்றாக இருக்கிறதா?  என்று.


எனக்குத் தெரியவில்லை.

ஒரு கற்பனைப் பெண்

சுடிதார் அணியும் அளவுக்கு

வளர்ந்துவிட்டாளா...

அல்லது

என் தனிமை

அவளுக்கு ஆடை தைக்கத் தொடங்கிவிட்டதா?


அவள்

என் கனவுகளின் தெருக்களில்

சுடிதாரோடு அலைந்து கொண்டிருக்கிறாள்...

நானோ

அவளது துப்பட்டாவின் நுனியைப் பிடித்துக் கொண்டு

அடுத்த வரியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்