ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தையும், மண்டபம் பகுதியையும் இணைக்கும் ரயில்வே கடல் பாலம் புதிய தொழில்நுட்பத்தில் அதி நவீனமாக கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவின்போது ராமேஸவரம்- தாம்பரம் இடையிலான புதிய ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக இலங்கையின் அனுராதபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அங்கிருந்து கார் மூலம் பாம்பன் கடல் மேம்பாலத்திற்கு அவர் வந்தடைந்தார். அங்கிருந்தபடி பாம்பன் ரயில் பாலத்தையும், புதிய ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ், ஆளுநர் ஆர். என். ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே முதலாவது வெர்ட்டிகல் லிப்ட் கடல் பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இருந்த கிட்டத்தட்ட நூறாண்டுகளைக் கடந்த பழைய பாம்பன் பாலத்திற்குப் பதில் இந்தப் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள கடல் பாலமானது 2.07 கிலோமீட்டர் நீளம் கொண்டது. பாக் நீரிணையின் மீது இந்த பாலம் செல்கிறது. இந்தப் பாலத்தின் நடுவே, தானியங்கி தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது கப்பல்கள் இந்தப் பகுதி வழியாக கடந்து செல்லும்போது இந்த தூக்கு பாலமானது மேலெழும்பி கப்பல் செல்ல வழி கொடுக்கும்.
இந்தப் பாலத்தில் இரு முனை ரயில்வே பாதைகளை அமைக்க முடியும். இருப்பினும் தற்போது ஒரு வழிப் பாதை மட்டுமே போடப்பட்டுள்ளது.
இந்த ரயில் பாலம் மீது மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல ரயில்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் இந்தப் பாலத்தைக் கட்டியுள்ளது. ரூ. 550 கோடி மதிப்பில் பாலம் உருவாகியுள்ளது.
100 வருடங்கள் வரை செயல்படக் கூடிய வகையில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறைந்த அளவிலான பராமரிப்பே தேவைப்படும் வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
பழைய பாலத்தை விட 3 மீட்டர் உயரம் கொண்டதாக புதிய பாலம் அமைந்துள்ளது. இங்கிலாந்தின் டவர் பிரிட்ஜ், அமெரிக்காவின் கோல்டன் கேட் பாலம் ஆகியவற்றுக்கு நிகராக புதிய பாம்பன் பாலம் அமைந்துள்ளது.
பழைய பாம்பன் பாலம் கடந்த 1914ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியின்போது கட்டப்பட்டது. இந்தப் பாலத்தில் இடம் பெற்றுள்ள தூக்கு பாலமானது மனிதர்களால் இயக்கப்படக் கூடியதாக அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தில் எல்லாமே தானியங்கியாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜூன் 21, 22 சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
22ம் தேதி முருகனை கையில் எடுப்பது போல் 2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்: நயினார் நாகேந்திரன்
சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு... தமிழ்த் திரையுலகுக்கு புதுத் தெம்பு.. கமல்ஹாசனின் ரியல் Thuglife
கமல்ஹாசனை எப்படி மன்னிப்பு கேட்கச் சொல்லலாம்.. தக்லைபுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி
காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை: எடப்பாடி பழனிச்சாமி!
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 குறைவு!
சிறுவன் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்
4 ராசிகளில் நீங்களும் ஒருவரா?..2025ல் பெரிய கோடீஸ்வரரா ஆய்ருவீங்களாம்ய்யா..பாபா வங்காவே சொல்லிட்டாரு
{{comments.comment}}