வெள்ளத்திலிருந்து மீண்ட தூத்துக்குடியில்.. பொங்கல் விழா.. வேட்டி சேலையில் கலக்கிய வெளிநாட்டவர்!

Jan 04, 2024,03:59 PM IST

தூத்துக்குடி: இந்தியாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர் வேட்டி, சேலை அணிந்து மண்பானையில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடினர். விழா எங்கு நடந்தது தெரியுமா.. சமீபத்தில் வெள்ளத்தில் சிக்கி மீண்டுள்ள தூத்துக்குடியில்தான்.


தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட வெளிநாட்டவர்கள்  தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். அதுவும் ஆண்கள் வேட்டி, சட்டை அணிந்தும் பெண்கள் சேலை அணிந்து மண்பானையில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறைப்படி கொண்டாடி மகிழ்ந்தனர்.


ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இந்திய கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியா வருவது இயல்பு. இவர்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்து வருவார்கள். தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள், கோயில்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பழகி வருவார்கள் மேலும் அவர்களுடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொள்வார்கள். இதன் மூலம் இந்திய பண்பாடு கலாச்சாரங்களை அறிந்து கொள்கின்றனர்.




அந்த வகையில் ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 19 பெண்கள் உட்பட 47 பேர் சென்னை வந்தனர். அங்கிருந்து கடந்த 28ஆம் தேதி 20 ஆட்டோவில் பயணத்தை தொடங்கிய இவர்கள் புதுச்சேரி, தஞ்சை, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தனர். விதவிதமான வண்ணங்களில் ஆட்டோக்களை அலங்கரித்து இருந்தனர். 


அவர்கள் கலாச்சார ஆடைகள் அணிந்து  தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலயம், மணப்பாடு, திருச்செந்தூர் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சென்று பார்வையிட்டனர். இறுதியாக தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்திற்கு சென்று, அங்குள்ள ஒரு தோட்டத்தில் வைத்து பொங்கல் விழா கொண்டாடினர். அப்பொழுது 20 மண்பானைகளில் பொங்கல் வைத்தனர். இதற்காக, வெளிநாட்டினர் தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தினர். ஆண்கள் வேஷ்டி துண்டும், பெண்கள் சேலைகளையும் அணிந்திருந்தனர். அந்தப் பகுதியில் கரும்பு வாழையால் தோரணங்கள் அமைத்து, மஞ்சள் குழை, பழம், பனங்கிழங்கு படைத்து பொங்கல் இட்டு வழிபாடு செய்தனர்.


இது குறித்து வெளிநாடு சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், தமிழ்நாட்டில் கலாச்சாரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மக்கள் உற்சாகமாக எங்களை வரவேற்றனர். மண் பானையில் பொங்கல் இடுவது வித்தியாசமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று கூறினார். இந்த சுற்றுலா குழுவினர் இன்று நெல்லை செல்கின்றனர். அங்கிருந்து 6ஆம் தேதி திருவனந்தபுரம் சென்று பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை

news

TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்

news

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!

news

விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!

news

எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்

news

Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு

news

10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!

news

வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு

news

மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!

அதிகம் பார்க்கும் செய்திகள்