பிரிவின் வலி!

Apr 02, 2026,01:20 PM IST
- பூரணவள்ளி சேகர்

கூடை நிறைய காய்கறிகளை அடுக்கி வைத்துக் கொண்டு அதனைத் தூக்குவதற்காக எப்போதும் போல தன் கணவன் கண்ணனை அழைத்தாள் கவிதா. திடீரென பெருங்குரலெடுத்து தன் அழுகையை அடக்க முடியாமல் 
கதறி அழுதாள். அருகில் இருந்த உறவினர்கள் கவிதாவை முடிந்த அளவு தேற்றினார்கள். கவிதாவின் அழுகை நின்றபாடில்லை.

அவள் கணவன் கண்ணன் இப்போது அவள் மனத்திரையில் முழுமையாக நிறைந்திருந்தான்.

கண்ணன் கவிதா இருவருக்கும் திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆயின. ஆனால் குழந்தை பேறு மட்டும் கிடைக்கவில்லை.  ஆயினும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதல்  நிறைவாகவே இருந்தது.

கண்ணன் கவிதா இருவரும் குழந்தை பற்றிய எவ்வித கவலையும் இல்லாமல் காலம் கழித்தனர். 

காலப்போக்கில் கண்ணன் தான் செய்யும் வேலைகளில் மிகவும் சோர்ந்து போனான். எதிலும் ஒரு ஈடுபாடு இல்லாமல் இருந்தான். மனச்சோர்வு  காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக வேலைக்கு செல்வதையே தவிர்த்து வந்தான்.





எவ்வளவு காலம் தான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்? வாழ்வில் இருவருக்கும் சலிப்பு தட்டியது. ஆயினும் வாழ்ந்தாக வேண்டும் .

வாழ்வதற்கு சொத்து சுகம் ஏதும் இல்லை. கண்ணனும் தற்போது வேலைக்குச் செல்லவில்லை என்ற நிலையில் கவிதா காய்கறி விற்று வாழ்க்கை நடத்தும் நிலைக்கு ஆளானாள்.

கண்ணனால் கவிதாவிற்கு ஒரு உதவியும் இல்லை. கவிதா வீட்டு வேலைகளையும் முடித்து காய்கறி விற்கவும் சென்றாள்.

சம்பாதித்த பணத்தில் இருவரும் ஓரளவு சாப்பிட்டு வந்தனர்.  கவிதாவிற்கு காய்கறி கூடையை தூக்கி விடுவது மட்டுமே கண்ணன் செய்யும் பெரும் உதவியாகும். 

கண்ணனுக்கு வாழ்வில் பிடிப்பில்லாமல் போனது. உலக வாழ்வியல் எதிலும் சேராமல் மிகவும் அமைதியாக இருந்தான் கண்ணன். 

கூடையை தூக்கி விடுதல் பசி தூக்கம் இந்த மூன்றை மட்டும் சரியாக செய்து வந்தான் கண்ணன். 
மனநோயாளி போல இருந்த கண்ணன் ஒருநாள் இந்த உலகில் இருந்து விடை பெற்றான். உறவினர்கள் அனைவரும் வந்து துக்கத்தில் கலந்து கொண்டனர். உறவினர் சிலர் கூட்டமாக நின்று கண்ணன் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

கவிதா சிலை போல அமைதியாக இருந்தாள். கண்ணனின் இறப்பிற்காக கவிதா அழவில்லை என்று உறவினர்கள் புறம் பேசினார்கள்.

உறவினர்கள் பேசுவது கவிதாவிற்கு கேட்டாலும் கவிதா அதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. ஐந்து நாட்களுக்குள் கண்ணனுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிறைவு பெற்றன.

ஆறாம் நாள் கவிதா காய்கறி விற்க கிளம்பினாள். அப்போதுதான் கூடையைத்  தூக்கிவிட கணவனை அழைத்தாள்.
ஐந்து நாட்களும் சிலையாய் இருந்த கவிதா தற்போது தன் கணவன் தன்னுடன் இல்லை என்ற நிலையை அறிந்து வெடித்து அழுதாள். அவளைத் தேற்றுவதற்குக் கூட யாரும் இல்லை.  அடிமனதில் தேக்கி வைத்திருந்த பிரிவின் வலி கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது.

(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்