"பிந்தரன்வாலே 2.0".. ஒன்றரை மாத ஓட்டம் முடிவுக்கு வந்தது.. அம்ரித் பால் சிங் சரண்!

Apr 23, 2023,08:49 AM IST

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தை சமீப காலமாக பதட்டத்தில் வைத்துக் கொண்டிருந்த அம்ரித்பால் சிங் ஒரு வழியாக போலீஸில் சரணடைந்து விட்டார். கடந்த ஒன்றரை மாத காலமாக அவரை போலீஸார் வலைவீசி தேடி வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.


ஒரு காலத்தில் போராட்டங்களின் கொதிகலனாக இருந்தது பஞ்சாப் மாநிலம். "பஞ்சாப் தீவிரவாதிகள்" என்று தொலைக்காட்சி, பத்திரிகைகளில் செய்தி வராத நாளே இல்லை. அந்த அளவுக்கு பஞ்சாப் போராளிகளின் களமாக இருந்தது. தினசரி ஒரு குண்டுவெடிப்பு, தாக்குதல் என்று பஞ்சாப் மாநிலத்திற்கே பிறர் போகப் பயப்படும் அளவுக்கு இருந்தது.


குறிப்பாக பிந்தரன்வாலே தலைமையில் செயல்பட்ட காலிஸ்தான் போராளிகள் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தி வந்தனர். அட்டகாசம்செய்து வந்த பிந்தரன்வாலேவை அமிர்தசரஸ் பொற்கோவிலில்  வைத்து அதிரடியாக கொன்று தீர்த்தது போலீஸ் படை. அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி எடுத்த இந்த அதிரடி முடிவு பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தினாலும் கூட பஞ்சாப் மாநிலத்திற்கு ஒரு விடிவுகாலத்தை அது கொண்டு வந்தது. ஆனால் அதே பஞ்சாப் தீவிரவாதம், இந்திராகாந்தியின் உயிரைக் குடித்து விட்டது.




இப்படியாக அமைதி நிலைக்குக் கொண்டு வரப்பட்டது பஞ்சாப். அதன் பின்னர் அது சந்தித்த வளர்ச்சியும், அடைந்த பொருளாதார முன்னேற்றமும் மிகப் பெரியது. இன்று நாட்டில் உள்ள மிகச் செழிப்பான மாநிலங்களுள் பஞ்சாபும் முக்கியமான இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் பஞ்சாப் மாநிலத்தை அமைதியிழக்க வைக்க சில விஷமிகள் சதி செய்ய ஆரம்பித்துள்ளனர். மீண்டும் காலிஸ்தான் கோஷங்கள் தலையெடுக்க ஆரம்பித்துள்ளன. இந்த அமளிதுமளிகளுக்கு மூல காரணம்தான் அம்ரித் பால் சிங். வாரிஸ் பஞ்சாப் தே என்ற அமைப்பை நடத்தி வரும் இவருக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்த நபர் தொடர்ந்து போராட்டங்களைத் தூண்டி விட்டு வருகிறார். தனி நாடு கோரிக்கையை முன்வைத்து இவர் போராட்டங்களை நடத்த தூண்டி வருகிறார். பிந்தரன்வாலேவின் வாரிசாக தன்னை அறிவித்துக் கொண்டு இவர் செயல்பட்டு வருகிறார்.


தீவிரமாக தேடப்பட்டு வந்த அம்ரித் பால் பல்வேறு மாநிலங்களுக்கு அடுத்தடுத்து இடம் பெயர்ந்து வந்ததால் அவரைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர். ஆனாலும் போலீஸாரின் வேட்டை தீவிரமானதைத் தொடர்ந்து இனியும் ஓடிக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்து பஞ்சாப் மாநிலம் மோகா நகரில் வைத்து போலீஸாரிடம் சரணடைந்தார் அம்ரித் பால் சிங்.


பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதத்தை கொண்டு வர முயல்கிறார். இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து அவர்களை ஆயுதம் ஏந்தத் தூண்டுகிறார். தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த இளைஞர்களைத் தயார் செய்கிறார். பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களைக் கடத்தி வந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்று வருகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அம்ரித் பால் சிங் மீது உள்ளன.


அவர் மீதான புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்குப் பின்னர் அம்ரித் பால்சிங்கைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். கிட்டத்தட்ட ஒன்றரை மாத ஓட்டத்திற்குப் பின்னர் போலீஸ் பிடியில் அவர் சிக்கியுள்ளார்.


அம்ரித் பால் சிங் துபாயில்தான் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு 2012ம் ஆண்டு முதல் தங்கியிருந்தார். 2021ல் டெல்லியில் நடந்த  மாபெரும் விவசாயிகள் போராட்டத்தின்போதுதான் அவர் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். அதன் பின்னர் தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கியிருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

news

பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

news

த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை

news

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்

news

சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

news

கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

அதிகம் பார்க்கும் செய்திகள்