ஒரு வருடத்திற்குப் பின் அமைச்சரான சா.மு நாசர்.. 8 மாதத்திற்குப் பின் செந்தில் பாலாஜிக்குப் பதவி!

Sep 29, 2024,04:39 PM IST

சென்னை : தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்ட நிலையில், நான்கு அமைச்சர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் செந்தில் பாலாஜி ஏற்கனவே மின்துறை அமைச்சராக இருந்தவர். எஸ்.எம்.நாசர் ஏற்கனவே தமிழக பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர். இது தவிர மற்ற இருவரும் புதுமுகங்கள் ஆவர்.


புதிதாக அமைச்சராகியுள்ளவர்களில் செந்தில் பாலாஜி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு அமைச்சராகியுள்ளார். அதேபோல நாசரும் ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் அமைச்சராகியுள்ளார். புதிதாக பதவியேற்றுள்ள 4 பேரின் அரசியல் பின்னணி குறித்து தெரிந்து கொள்ளலாம்.


செந்தில் பாலாஜி :




கரூரில் பிறந்து, அங்குள்ள அரசு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த செந்தில் பாலாஜி, தன்னுடைய 21 வது வயதில் அரசியலுக்கு வந்தவர். 1997 ம் ஆண்டு அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினராக இணைந்து, பிறகு படிப்படியாக தன்னுடைய செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். 2006 ல் கரூர் தொகுதியிலும், 2016ல் அரவக்குறிச்சி தொகுதிியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ., ஆனார். ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக ஆனார்.  2017ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு இரண்டாக பிரிந்த அதிமுக.,வில் டி.டி.வி.தினகரன் பக்கம் இணைந்ததால் அப்போதைய சபாநாயகர் தனபாலால் தகுதிநீக்கம் செய்யப்பட்டு எம்எல்ஏ., பதவியை இழந்தார். பிறகு 2018ம் ஆண்டு திமுக.,வில் இணைந்து மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ.,ஆகி, மின்சாரத்துறை அமைச்சராகவும் இருந்தார்.


டாக்டர் கோவி.செழியன் :




கோவி.செழியன், திமுக சார்பில் திருவிடைமருதூர் தனி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர். 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். திமுக.,வில் மாணவரணியில் இணைந்து பல பொறுப்புகள் வகித்து, பிறகு மாணவரணி இணை செயலாளராக ஆனார். படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்ட இவர், தற்போது திமுக.,வில் முக்கிய உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்து வருகிறார். சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் சட்டம் பெற்று, அதில் முதுகலை பட்டமும் பெற்றவர். திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் பேச்சு குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். திமுக.,வின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் இவரும் ஒருவர்.


ஆர்.ராஜேந்திரன் :




சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருப்பவர் ஆர்.ராஜேந்திரன். சேலத்தில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த இவர் அரசியலில் பட்டம் பெற்றவர். 1985ம் ஆண்டு திமுக மாணவர் அணியில் இணைந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையை துவங்கினார். பிறகு 1999ம் ஆண்டு மாநில இளைஞர்கள் அணி தணை செயலாளராக உயர்ந்தார். ஆரம்பத்தில் பனமரத்துப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வந்த இவர் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவிற்கு பிறகு சேலம் வடக்கு தொகுதி இவருக்கு அளிக்கப்பட்டது. இந்த தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று எம்எல்ஏ.,வாக இருந்து வருகிறார்.


எஸ்.எம்.நாசர் :




சென்னை ஆவடி தொகுதி எம்எல்ஏ.,வாக இருக்கும் எஸ்.எம்.நாசர், 2016ம் சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தாலும். 2021ல் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் அமைக்கப்பட்ட தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். திமுக.,வில் உள்ள மிக முக்கியமான நிர்வாகிகளில் இவரும் ஒருவர். இவர் தற்போது மீண்டும் தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்