- கவிநிலவு சுமதி சிவக்குமார்
சின்னசேலம்: ஒரு சிறு மெய் சிலிர்க்கும் அனுபவம் பற்றி எழுதுகிறேன். எல்லாத் தாய்மார்களுக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும் அல்லவா.. அதைத்தான் இங்கு விவரிக்கிறேன்.
அம்மா...!!
நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.
கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று ஆசை தோன்றுகிறது. என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.
இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன். அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது.
அதற்கு பதில் பேசும் விதமாக நிறைய முறை என்னுடைய கை கால்களை அசைத்திருக்கிறேன்.
உதைத்து இருக்கிறேன்.

எத்தனை விதமான சப்தங்கள் கேட்டாலும் எப்போதும் மாறாதிருப்பது அந்த இதயத்துடிப்பின் சப்தம் தான்.
அதுயாரிடம் இருந்து வருகிறது என்பதை நிச்சயம் ஒருநாள் பார்த்து விட வேண்டும்.
என்னவோ தெரியவில்லை. இரண்டு அல்லது மூன்று நாட்களில் இங்கிருந்து வெளியே சென்று விட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. கை கால்களை உதைத்து எவ்வளவோ முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.
இறுதியாக ஒரு நாள் நான் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி
எங்கோ நகரத் தொடங்கினேன். நான் தலை கீழாக தொங்கி விட்டேன்.
அந்த இதயத்துடிப்பின் சத்தம் மெல்ல மெல்லக் குறைகிறது. இந்த உலகத்தை விட்டு வேறெங்கோ செல்கிறேனோ என்று பயமாக இருக்கிறது.
எனக்கு மென்மையாகக் கேட்ட அந்தக் குரல் இப்போது வலியில் கதறுகிறது. ஏனோ எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எல்லாம் என்னால் வந்தது. நான் தான் கை கால்களை உதைத்து ஏதோ செய்து விட்டேன் என்று நினைக்கிறேன்.
திடீரென நான் இருந்த தண்ணீர் தொட்டியில் ஓட்டை விழுந்து விட்டது. சோதனைக்கு மேல் சோதனை. தண்ணீரோடு அடித்துக் கொண்டு எங்கோ செல்கிறேன். இடையில் எங்கோ சிக்கிக் கொள்கிறேன்.
யாரோ என் தலையைப் பிடித்து இழுக்கிறார்கள்.
அதே நேரத்தில் அந்தக் குரலும் உயிர் போவது போல் கதறுகிறது. எனக்கும் வலிக்கிறது.
ஒரு வழியாக வெளியே வந்து விட்டேன். எனக்கும் அந்த உலகத்துக்கும் இருந்த கடைசித் தொடர்பான நான் தொங்கி கொண்டிருந்த கயிறையும் அறுத்து விட்டார்கள்.
இவ்வளவு நாளும் நான் கேட்டு வந்த இதயத்துடிப்பும் முற்றிலும் நின்று விட்டது. கதறிய அந்த குரலும் கேட்கவில்லை. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
முதன் முறையாக வாய்விட்டு அழுகிறேன். ஆனால் என்னைச் சுற்றி எல்லோரும் சிரிக்கிறார்கள்.
என்னை தண்ணீரில் குளிக்க வைக்கிறார்கள். ஆனாலும் அழுகிறேன். ஏதோ வெள்ளை துணியில் சுற்றி எல்லோருக்கும் என்னைக் காட்டுகிறார்கள். என் இடுப்புக்கு கீழ் எதையோ பார்த்துச் சிரிக்கிறார்கள். எனக்குக் கோபமாய் வருகிறது. ஆனாலும் அழுகிறேன். அவர்கள் மட்டும் என்னைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஏதேதோ பேசி சிரிக்கிறார்கள்.
அந்த இதயத் துடிப்பும் மென்மையான பேச்சும் எனக்குக் கேட்கவில்லை. என்னைக் கொண்டு சென்று யார் பக்கத்திலோ படுக்க வைத்தார்கள்.
நான் அழுவதை நிறுத்தி விட்டேன். காரணம் அந்த இதயத்துடிப்பு இப்போது கேட்க ஆரம்பித்து விட்டது. என்னை ஒரு கை தழுவியது, தடவியது.. ஆம் என் உலகத்தில் இருந்த போது உணர்ந்த அதே தொடுதல்.
அவர் மாதிரியே இருக்கான் இல்ல என்று பேசிய போது அந்த குரலின் அதே மென்மையை உணர்ந்தேன். அது யாரென்று பார்த்து விடவேண்டும் என்று துடிக்கிறேன். ஆனால் கை கால்களை மட்டுமே அசைக்க முடிகிறது. திரும்ப முடியவில்லை.
எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போது இரண்டு கைகள் என்னைத் தூக்குகிறது. தன் முகத்துக்கு நேராய்க் கொண்டு போய் வைக்கிறது.
மரணம் வரை சென்று வந்த துயரத்திற்கு நடுவே மகிழ்ச்சி நிறைந்த புன்னகை அந்த முகத்தில். அந்த முகத்தைப் பார்த்த போது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை பரவசத்தை விவரிக்க எந்த மொழியிலும் வார்த்தைகளில்லை.
அவளிடமிருந்துதான் நான் வந்தேன் என்பதையும், அது என் தாய் என்பதையும் உணர்ந்து கொண்டேன். ஆனாலும் ஏனோ அழுது கொண்டே இருக்கிறேன். நான் அழுத போதும் என் அம்மா மட்டும் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்.
எனக்குக் கோபமாய் வந்தது. அப்போது எனக்குத் தெரியவில்லை. என் மொத்த வாழ் நாளில் நான் அழுவதைப் பார்த்து என் அம்மா சிரிக்கும் ஒரே ஒரு நாள் அது தான் என்று...!!
அம்மா...!! இது என் அம்மா...!!
(சுமதி சிவக்குமார்.. B. A., M. com., (co-op mgt)., M. A ., (yoga) ., DOM., (computer)., . கள்ளக்குறிச்சி மாவட்டம் மூஙகில்துறைப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது ஊரில் ஏரிக்கு நீர் கொண்டு வர இணையும் கைகள் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார் உயர்திரு அப்துல் ரஹீம் அவர்கள். நீர் நிரம்பி இருமுறை கோடி போனது. அதனால் கோமுகி நதியை வாழ்த்தி நடந்தால் வாழீ கோமுகி என்ற கவிதையை பதிவிட்டார் சுமதி சிவக்குமார். முகநூலில் நிறைய கவிதை தளங்களில் கவிதைப் போட்டி நடுவராகவும் கவியரங்கம் தலைவராகவும் திகழ்கிறார். கிட்டத்தட்ட 3000 சான்றிதழ்கள் 50 ஷீல்டுகள் பரிசு பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடல் எழுதி பாடவும் செய்வார். மதியின் மதி என்ற கவிதை புத்தகம் , தெம்மாங்கு பாடலா என்ற நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார். சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயல்படுகிறார்)
TAPS: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுத்த ஹேப்பி நியூஸ்.. அறிக்கையின் முழு விவரம்!
வெனிசுலா அதிபர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தல்...டிரெம்ப் அறிவிப்பு
வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!
திமுக தேர்தல் அறிக்கை: மொபைல் செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அதிகரிக்கும் குடும்பப் பஞ்சாயத்துகள்.. விரிவடையுமா டிஎன்ஏ டெஸ்ட் கோரிக்கைகள்?
காவல்துறையினர் மரியாதை, புன்னகை, அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல்? நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் புதிய சாதனை
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லத் தயாரா?... 150 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு
{{comments.comment}}