Sripriya Short story: அழகு சுமந்த வலி

Apr 17, 2026,10:11 AM IST

- பன்முகத் திறமையாளர் ச. ஸ்ரீபிரியா பழனிவேலு


அவள் பெயர் மலர். பெயருக்கு ஏற்றபடி அழகு. பெண்ணே பார்த்துப் பொறாமைப்படும் தேகம். உயரம், நிறம், உடல்வாகு எல்லாம் கடவுள் கைதேர்ந்து செதுக்கிய சிற்பம் போல. ஆனால் அந்த அழகின் மேல் ஒரு துளி கர்வம்கூட ஒட்டியதில்லை. யார் வந்து பேசினாலும் சிரித்த முகம். உதவி என்று கேட்டால் உடனே ஓடுவாள்.


பள்ளிப் பருவத்திலேயே தொடங்கியது அவள் சோதனை. தோழி என்று நெருங்கிப் பழகியவள் கூட, “எல்லாரும் உன்னையே பார்க்கிறாங்க” என்று உள்ளுக்குள் புழுங்கினாள். நோட்டு கேட்பாள், பேனா கேட்பாள், வீட்டுப்பாடம் எழுதித் தரச் சொல்வாள். வேலை முடிந்ததும் மலரைப் பற்றி நாலு பேரிடம் குறை சொல்வாள். மலருக்குப் புரியும். ஆனாலும் “பரவாயில்லை, பாவம்” என்று மன்னித்துவிடுவாள்.


கல்லூரி முடிந்தது. குடும்பச் சூழல் கழுத்தை நெரிக்க, ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்குப் பிரிவில் சேர்ந்தாள். அங்கேதான் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைப் பார்த்தாள்.


அவள் வேலையில் கச்சிதம். காலை 9 மணிக்கு உள்ளே நுழைந்தால், கணினி திரையை விட்டு கண் எடுக்க மாட்டாள். ஆனால் சுற்றி இருந்த பெண்கள் சிலர் அரட்டை, சிரிப்பு, தூக்கம். வேலை கேட்டால், “ஐயோ தலைவலி” என்பார்கள். மேலாளருக்கு வேண்டியவர்கள் என்பதால் யாரும் கேட்க மாட்டார்கள்.


மலர் ஒருநாள் இரவு 7 மணி வரை இருந்து எல்லா கணக்கையும் முடித்துக் கொடுத்தாள். மறுநாள் கூட்டத்தில் பாராட்டு யாருக்கு? வேலையே செய்யாமல் மேலாளருக்கு காபி வாங்கிக் கொடுத்த பெண்ணுக்கு. “டீம் ஒர்க்” என்று அவள் பெயரைச் சொன்னார்கள்.




மலருக்குள் எரிமலை. “ஏன் இந்த அநீதி?” என்று கத்தத் தோன்றும். ஆனால் வீட்டு நிலைமை நினைவுக்கு வரும். அம்மாவின் மருந்து, தம்பியின் படிப்பு. கோபத்தை விழுங்கி, புன்னகையை ஒட்ட வைத்துக்கொள்வாள்.


அடக்கிய கோபம் அமிலமாய் மாறியது. இரவில் தூக்கம் வரவில்லை. நெஞ்சு படபடப்பு. கை நடுக்கம். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மருத்துவமனை. “மன அழுத்தம். தூக்க மாத்திரை எடுத்துக்கோங்க” என்பார் மருத்துவர். மாத்திரை உடலைத் தூங்க வைத்தது. மனதை? அது விழித்தே கிடந்தது.


தனிமையில் அழுவாள். “அழகா பிறந்தது தப்பா? நேர்மையா இருக்கிறது குற்றமா? கடவுளே, என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?” கண்ணீர் தலையணையை நனைக்கும். 


விடிந்ததும் மீண்டும் அதே புன்னகை. “இன்றாவது நல்ல நாளாக இருக்கும்” என்று நம்பிக்கையைச் சுரண்டி எடுத்து முகத்தில் பூசிக்கொள்வாள். அலுவலகம் செல்வாள். அதே அரட்டைக் கூட்டம், அதே ஓரவஞ்சனை, அதே வலி.


ஒருநாள் மருத்துவர் கேட்டார், “ஏம்மா, வேலையை விட்டுட்டு வேற இடம் பார்க்கலாமே?”  

மலர் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஆயிரம் அர்தம். “டாக்டர், ஓடுறதுனால பிரச்சனை தீராது. நான் போனா, என்னை மாதிரி இன்னொரு பொண்ணு வருவா. அவளையும் இதே கூட்டம் கடிக்கும். நான் நேர்மையா இருக்கேன். அதுவே என் பலம்.”


அன்று முடிவு செய்தாள். அழுகையை நிறுத்தினாள். மாலை நேரத்தில் அருகில் உள்ள அரசுப் பள்ளிக்குப் போனாள். ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கணக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள். அங்கே யாரும் அவள் அழகைப் பார்த்துப் பொறாமைப்படவில்லை. “டீச்சர்” என்று ஓடி வந்து கட்டிக்கொண்டார்கள். அந்தக் குழந்தைகளின் கண்ணில் தெரிந்த உண்மையான அன்பு, அலுவலகத்தில் கிடைக்காத மருந்தைக் கொடுத்தது.


மெல்ல மெல்ல புரிந்தது. உலகம் எப்போதும் மாறாது. ஆனால் நம் பார்வையை மாற்றிக்கொள்ளலாம். அலுவலகம் அவளுக்குச் சம்பளம் கொடுத்தது. பள்ளிக் குழந்தைகள் நிம்மதி கொடுத்தார்கள்.


இன்றும் மலர் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். இன்னும் அவளைக் குறை சொல்கிறார்கள். இன்னும் உண்மையான பெயர் கிடைக்கவில்லை. ஆனால் அவள் இனி மன அழுத்த மாத்திரை போடுவதில்லை. காரணம், அவள் வாழ்க்கையின் அர்த்தத்தை அலுவலகத்துக்கு வெளியே கண்டுபிடித்துவிட்டாள்.


வீடு திரும்பும்போது பத்து குழந்தைகளின் “டீச்சர் பாய்” அவள் காதில் ஒலிக்கும். அந்த ஒரு சொல் போதும். அவள் அழகுக்கும் நேர்மைக்கும் கிடைத்த அங்கீகாரம் அதுதான்.


நீதி: அழகு ஒரு வரம். நேர்மை ஒரு சுமை. இரண்டும் சேர்ந்தால் உலகம் உன்னைச் சோதிக்கும். ஆனால் உனக்கான உலகத்தை நீயே உருவாக்கிக்கொண்டால், எந்தச் சோதனையும் உன்னைச் சாய்க்க முடியாது. போலிகள் கைதட்டல் வாங்கலாம். உண்மையானவர்கள் இதயங்களை வாங்குவார்கள். அதுதான் நிரந்தர வெற்றி.


உங்கள் தோழிக்கு இந்தக் கதையைச் சொல்லுங்கள். “விடியும் என்று நம்பு. விடியலை நீயே உருவாக்கு” என்று சொல்லுங்கள்.


(பன்முகத் திறமையாளர் ச. ஸ்ரீபிரியா பழனிவேலு, உதவித் தலைமையாசிரியர், பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி , பட்டுக்கோட்டை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மசோதாக்களை நிறைவேற விட மாட்டோம் - தொகுதி மறுவரையறைக்கு எதிராக ராகுல் காந்தி ஆவேச பேச்சு

news

ஏன் இந்த அவசரம்?...பார்லிமென்டில் பாஜக.,வை வெளுத்து வாங்கிய கனிமொழி

news

கரூரில் பரபரப்பு...செந்தில் பாலாஜியின் நண்பர் வீடுகளில் ஐடி ரெய்டு

news

தேவகோட்டை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா.. நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற 8ம் வகுப்பு மாணவர்கள்!

news

“நாம் பேசும் AI… யார் அவர்கள்?”.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சிக் கதை

news

Nadavavi Kinaru: காஞ்சிபுரத்தில் இருக்கும் அதிசய நடவாவி கிணறு .. அப்படீன்னா என்ன?

news

வெப்பமே என் வெப்பமே...!

news

Chettinadu Kitchen: மணிமாவின்.. செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி.. பன் பர்பி

news

Thangalakshmi Poems: ஒரு சூரியன்.. ஒரு அந்திவானம்.. சில கவிதைத் துளிகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்