ரூ.9000 கோடி டாடாவின் வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

Sep 28, 2024,02:46 PM IST

ராணிப்பேட்டை:   ராணிப்பேட்டை பணப்பாக்கத்தில் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் டாடா நிறுவன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.


ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் ரூ.9000 கோடியில் 470 ஏக்கரில் அமையவுள்ள டாடா, ஜாக்குவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின்  இன்று அடிக்கல் நாட்டினார். அத்துடன் ரூ.400 கோடி மதிப்பில் 20 ஏக்கரில் அமையவுள்ள காலணி ஆலைக்கும் முதல்வர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் மற்றும் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், டாடா மோட்டர் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கு நான் பெருமை கொள்கிறேன். டாடா குழுமம் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல உலகில் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழ்நாடே முகவரி ஆக உள்ளது. உலக அளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் டாடா குழுமம் செயல்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தில் டாடா குடும்ப நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் டாடா குடும்பத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.


பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.பெண்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து வருகிறது. நாமக்கல்லில் வேளாண் குடும்பத்தில் பிறந்து முன்னணி நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவராக சந்திரசேகரன் திகழ்கிறார். இந்திய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் விளங்குகிறார். தமிழ்நாட்டில் வளர்ச்சி பயணத்தின் முக்கியமான நாளாக இன்றைய தினம் திகழ்கிறது.


டாடா குடும்பம் தமிழ்நாட்டில் கூடுதல் முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்ற வகையில் ராணிப்பேட்டையில் தொழிற்சாலை அமைவதில் மகிழ்ச்சி. 1973 ஆம் ஆண்டு ராணிப்பேட்டையில் கலைஞர் முதல் சிப்காட்ஐ தொடங்கி வைத்தார். 50 ஆண்டுகளில் கார் உற்பத்தி ஆலைகள் உட்பட பல தொழிற்சாலைகள் ராணிப்பேட்டையில் அமைந்துள்ளன.


மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் ஆக தமிழ்நாடு விளங்குகிறது. 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று தொழில்துறைக்கு நான் இலக்கு கொடுத்துள்ளேன். தமிழ்நாட்டில் இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக திராவிட மாநில அரசு தொடர்ந்து பணியாற்றும் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்