எங்க ஊரு பாட்டு!

Apr 23, 2026,11:45 AM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


வயலோடு உறவாடி

வரப்போடு நடமாடும்

கிராமத்துப் பைங்கிளிகள் 


களை பறிக்க ஒரு பாட்டு

நாற்று நட  தனிப்பாட்டு 


வேலைக்கு இடையே வெயிலில் இளைப்பாறி 

களைப்பாறும் போது வரும் பாட்டு

அலுப்பு தீரும் அது கேட்டு 


ஏர் பூட்டி உழும் போதும் 

ஏற்றமது இறைக்கும் போதும் மங்கையவள் கேட்டிட மாமன் பாடும் பாட்டு




ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் போதும்

விளைந்த கதிரை அறுக்கும் போதும் அழகான அறுவடைக்கு ஒரு பாட்டு 


அம்மியிலே அரைக்கும் போதும் 

அழுக்குத் துணி துவைக்கும் போதும் ஒரு பாட்டு 


தூளியிலே தாலாட்டு

தூறல் போட்டால் அதில் பாட்டு 


பாட்டுக்கு பாட்டு 

பதிலுக்கு இசைப் பாட்டு


தெம்மாங்குப் பாட்டு

தெருக்கூத்துப் பாட்டு


பால் கறக்க பசு மடியில் 

பாசமாய் ஒரு பாட்டு 


குலவையர்கள் கூடி ஆட

கும்மிப்பாட்டு 

துயரத்தை ஒயிலாய்ப் பாட ஒப்பாரிப் பாட்டு 


எதற்கெடுத்தாலும் பாட்டு 

இது எங்க ஊரு பாட்டு


இதற்கு எந்த இசையும் தேவையில்லை 


இயற்கையின் இன்னிசைக்கு‌ நிகரில்லை....


குயில் சத்தமும் மழை சத்தமும் கதிர் அடிக்கும் சத்தமும் கொட்டும் அருவி சத்தமும் குதிக்கும் மீனின் சத்தமும்

குழந்தையின் அழுகை சத்தமும் 

குமரியவள் வளவி சத்தமும் பக்கவாத்தியமாம்!!!!

இயற்கையே எங்களின் இன்னிசை!!!!

இயற்கையோடு இணைந்ததே எங்கள் இசை!!!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்