சிறுபான்மையினருக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கியவர் மன்மோகன் சிங்.. பேராசிரியர் காதர் மொகிதீன்

Dec 27, 2024,05:40 PM IST

திருச்சி: மத்தியில் சிறுபான்மையினருக்காக தனி அமைச்சகம் உருவாக்கிய வரலாற்றுப் பெருமைக்குச் சொந்தக்காரர் டாக்டர் மன்மோகன் சிங் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் புகழாரம் சூட்டியுள்ளார்.


முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று 

உயிரிழந்தார்.அவரின் மறைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-




இந்திய ஜனநாயகத்தை உலகம் போற்றும் வகையில் ஆட்சி நிர்வாகம் பத்தாண்டு காலம் நடத்திக்காட்டிய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங். 26-12-2024 இரவு தனது 92வது வயதில் மரணமுற்றார். பிறந்தவர் அனைவரும் மரணத்திற்குச் சரணம் ஆக வேண்டியவர்களே. ஆனால் வாழும் காலத்தில் வாழ்வோருக்குச் செய்யவேண்டிய நற்காரியங்களைச் செய்து காட்டியவர்களே மக்களின் மனங்களில் வாழ்கிறார்கள். அதற்கு ஓர் உதாரணமாகத் திகழ்ந்தவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்.

அமைதியின் வடிவம்; ஆழமான சிந்தனையாளர்; பொருளாதார நிபுணர்; இந்தியாவின் பொருளாதாரத்தை உலகில் பொருளாதார வீழ்ச்சி பற்றிய கவலை நிலவிய காலத்தில் மக்கள் போற்றும்படியான பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டிய மேதை அவர்.

பழகுவதற்கு இனியவர்; பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் நல்லது செய்து வாழ்ந்தவர். சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இந்திய பிரதமர் என்னும் வரலாறு படைத்தவர் இவரே.


இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் இன்றைக்கு மணிப்பூர் ஒரு கொலைக்களமாகக் கொதித்துக் கொண்டிருக்கிறது. டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது கிழக்கிந்திய மாநிலங்கள் சமூக நல்லிணக்கத்துடன் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வந்த வரலாறு என்றும் நினைவில் நிற்கக்கூடியதாகும். அப்பகுதியில் இருந்துதான் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்குத் தொடர்ந்து தேர்வு பெற்று வந்தார் என்பது போற்றற்குரிய சரித்திரம் ஆகும்.


இவரின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில்தான் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேர் ஒன்றுகூடி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையில் பிரதமரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் நாட்டில் சிறுபான்மையினருக்குரிய அமைச்சகம் உருவாக்கப்பட்டது. முதல் அமைச்சராக அப்துர் ரஹ்மான் அந்துலே பொறுப்பு வகித்தார்.


இதனைச் செய்த வரலாற்றுப் பெருமை டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு உரியதாகும். நல்லவர் மறைந்து விட்டார்! மறைந்த மாமேதையின் மறுவாழ்வுக்குப் பிரார்த்திப்போம். அவரின் இழப்பால் வருந்தும் அவர்தம் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்போம் என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உன் அன்பு எனக்கு உயிர் கொடுத்தது... மனிதம் மலர்கையில்.. பகுதி 3

news

நாய் பூனை வளர்க்கிறீர்களா.. அப்படீன்னா இன்னிக்கு என்ன தினம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!

news

நமக்கான வாகனம் இதோ வந்துவிட்டது... இலட்சியத்தை வெல்வோம் - ராமதாஸ் அதிரடி

news

பெண் தானே.. மனைவிதானே.. வீட்டில்தானே இருக்காங்க.. அப்படின்னு லைட்டா எடுத்துக்காதீங்க!

news

இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு!

news

கர்மாவை கரைக்கும் சித்தர்களின் ஜீவசமாதி வழிபாடு

news

காணாமல் போன ஆட்டுக்குட்டி.. The Missing Lamb

news

ஐய ஜோக் சொல்லிட்டாரு சிரிங்கப்பா.. கலகலக்கும் பஸ் பயணம்!

news

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது - முதலமைச்சர் முக ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்