இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்

Jun 10, 2025,10:16 AM IST

நெவார்க், நியூ ஜெர்சி: அமெரிக்காவின் நியூஜெர்சியின் நெவார்க் விமான நிலையத்தில், ஓர் இந்திய மாணவர் அதிகாரிகளால் கைவிலங்கிடப்பட்டு, தரையில் கிடத்தப்பட்டு, பின்னர் நாடு கடத்தப்பட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் மின்னல் வேகத்தில் பரவி, பெரும் குமுறலை ஏற்படுத்தியுள்ளன. 


இந்திய-அமெரிக்க தொழிலதிபருமான குனால் ஜெயின் என்பவர் இதுதொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததன் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்தஉள்ளது. அமெரிக்க அதிகாரிகள் எந்த அளவுக்கு மோசமாக நடந்து கொண்டுள்ளனர் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது இந்த சம்பவம்.


நெஞ்சை உலுக்கும் அந்தக் காணொளியில், அந்த மாணவர் தரையில் அழுத்திக் கிடத்தப்பட, குறைந்தது நால்வர் அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் தமது முழங்கால்களை அவரது முதுகில் மிதித்திருந்தனர். மாணவரின் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன.




முன்னதாக இந்த வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்திருந்த குனால் ஜெயின், நேற்று இரவு நெவார்க் விமான நிலையத்தில் ஒரு இளம் இந்திய மாணவர் நாடு கடத்தப்பட்டதைக் கண்டேன் - விலங்கிடப்பட்டு, கண்ணீர் மல்க, ஒரு குற்றவாளியைப்போல நடத்தப்பட்டார். அவர் கனவுகளைத் துரத்தி வந்தவர், எவருக்கும் தீங்கு விளைவிக்காதவர். ஒரு வெளிநாடு வாழ் இந்தியனாக, நான் துணையற்றவனாய் உணர்ந்தேன், என் இதயம் குலைந்து போனது. இது ஒரு மனித துயரம் என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். 


அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகம் இவ்விவகாரத்தை முழுமையாக விசாரித்து, மாணவருக்கு உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து மறுநாள், நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகம் இந்நிகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். இந்தியக் குடிமக்களின் நலனுக்காகத் துணைத் தூதரகம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


இந்தியில் பேசியதால் பிரச்சினை


குனால் ஜெயின் அந்த சம்பவம் குறித்து மேலும் கூறுகையில், அந்த மாணவரை சுமார் ஐம்பது பேர் சூழ்ந்திருந்தனர், ஆனால் எவரும் வாய் திறக்கத் துணியவில்லை. அவர் தரையில் வீழ்த்தப்பட்டதற்கு காரணம், அவர் சற்று ஆக்ரோஷமாக இருந்திருக்கலாம், மேலும் மனக்குழப்பத்தில் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் ஏன் மனக்குழப்பத்தில் இருந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அதிகாரிகள் இந்தி புரியவில்லை என்றும், அவர் ஹரியான்வி மொழியில் பேசிக் கொண்டிருந்தார் என்றும் கூறினர். ஒருவேளை நான் உதவலாம் என்று எண்ணினேன். அங்கு சென்று ஒரு போலீஸ் அதிகாரியிடம், அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நான் உதவலாமா என்று கேட்டேன். ஆனால் அவர் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டார்.


பிரச்சனை தகவல் தொடர்பில்தான் இருந்தது. இந்த நபரால் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை நம்புவது மிகவும் கடினம், நிச்சயமாக அவரால் முடியும். அவர் மன அழுத்தத்திலும் மனக்குழப்பத்திலும் இருந்தார், அதனால்தான் அவர் இந்தியில் பேசிக் கொண்டிருந்தார். நுழைவுத் துறைமுகத்தில் ஏதோ மோசமாக நடந்திருக்கலாம். குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அவர் குழப்பத்தில் இருப்பதைக் கண்டறிந்து, அதனால்தான் அவரது விசாவை நிராகரித்திருக்கலாம் என்றார் ஜெயின்


டிரம்ப்பின் செயலால் ஏற்பட்ட விளைவா?


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்தது முதலே குடியேற்றக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி விட்டார். இதனால் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் மோசமான முறையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கை கால்களில் விலங்கிட்டு விமானத்தில் ஏற்றி அனுப்பி வருகின்றனர்.


நூற்றுக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட திகிலூட்டும் காட்சிகளை யாரும் மறந்திருக்க முடியாது. பிப்ரவரி மாதத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டபோது, அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையால் பகிரப்பட்ட ஒரு காணொளியில், அவர்கள் கைவிலங்கிடப்பட்டு, கால்களில் சங்கிலியிடப்பட்டிருந்தனர். அவர்கள் விமானத்திலிருந்து இறங்கியபோது, இந்தியர்கள் தள்ளாடி நடப்பதாகக் காட்சிகள் காட்டப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்