சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எங்கு போட்டியிடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் அவர் தமிழ்நாட்டில் போட்டியிடலாம் என்ற ஒரு டாக் ஏற்கனவே உள்ளது. அந்தத் தொகுதி ஸ்ரீபெரும்புதூரா என்ற பரபரப்பு இப்போது எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில், இந்திரா காந்தி குடும்பத்தினர் பெரும்பாலும் உத்தரப் பிரதேசத்தில்தான் போட்டியிடுவது வழக்கம். இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவது வழக்கம். அவருக்குப் பின்னர் அந்தத் தொகுதியில் அவரது மருமகளான முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிட்டு வந்தார். ஒரு முறை அவர் பாஜக சவாலை ஏற்று கர்நாடக மாநிலம் பெல்லாரியில் போட்டியிட்டார். அத்தேர்தலில் அவருக்கு எதிராக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் போட்டியிட்டார். சோனியா காந்தி பெரும் வெற்றியை அதில் பெற்றார். அதன் பிறகு அவர் தென் மாநிலங்களில் போட்டியிட்டதில்லை.
மறைந்த ராஜீவ் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார். அவருக்குப் பின்னர் அந்தத் தொகுதி ராகுல் காந்தி வசம் மாறியது. கடந்த 2019 தேர்தலிலும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட்டார். கூடவே தென் மாநிலங்களிலும் போட்டியிட வேண்டும் என்ற வலியுறுத்தலால், கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. இதில் வழக்கமாக ஜெயித்து வந்த அமேதி தொகுதியில் யாரும் எதிர்பாராத வகையில் ராகுல் காந்தியை, ஸ்மிருதி இராணி தோற்கடித்தார். வயநாட்டில் மட்டும் வெற்றி பெற்றார் ராகுல்.

இந்த முறை அவர் எங்கு போட்டியிடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. இந்த முறை சோனியா காந்தி ரேபரேலியில் போட்டியிடவில்லை. அவரது மகள் பிரியங்கா காந்தி அங்கு போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவாரா என்பதிலும் தெளிவு இல்லாமல் இருக்கிறது.
இந்த நிலையில்தான் ராகுல் காந்தி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம் போட்டுள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் இது நிறைவேற்றப்பட்டுள்ளதால் புதிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ராகுல் காந்தி இந்த முறையும் வயநாட்டில் போட்டியிடுவார் என்றே நம்பப்படுகிறது. கூடுதலாக அவர் அமேதியில் போட்டியிடுவாரா அல்லது தமிழ்நாட்டுக்கு வரும் திட்டம் உள்ளதா என்று தெரியவில்லை. ஸ்ரீபெரும்புதூரில்தான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தொகுதியானது முன்பு திருவள்ளூர் தொகுதியை உள்ளடக்கியதாக இருந்தது. இதிலிருந்துதான் பின்னர் திருவள்ளூர் தனி தொகுதி உருவாக்கப்பட்டது. மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் தனி, பல்லாவரம், தாம்பரம் சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கி புதிய ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்தத் தொகுதியில் பல்வேறு கட்சிகளும் வென்றுள்ளன. திமுக 7 தடவையும், அதிமுக 3 முறையும் வென்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு இங்கு 3 முறை வெற்றி கிடைத்துள்ளது. இந்தத் தொகுதியில் சமீப காலமாக தொடர்ந்து திமுகவே போட்டியிட்டு வருகிறது. சிட்டிங் எம்.பியாக இருப்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு. எனவே இந்தத் தொகுதியை காங்கிரஸுக்கு திமுக விட்டுத் தருமா என்பது கேள்விக்குறியே.. அதேசமயம், ராகுல் காந்தியே போட்டியிடுவதாக இருந்தால் திமுக தொகுதியைத் தர முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் கே.பாக்யராஜ்.. ஆயிரக்கணக்கானோரின் அஞ்சலியுடன்.. அரசு மரியாதையுடன் உடல் தகனம்
நிதி, மின் துறைகளை தொடர்ந்து விரைவில் வேளாண் துறைக்கும் வெள்ளை அறிக்கை
அன்பு வைகோவுக்கு.. பதவி திமுகவுக்கு.. மதிமுக எம்எல்ஏ எடுத்த திடீர் முடிவு!
வாங்க, அடிச்சு விளையாடுவோம்.. தமிழ்நாடு புதிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உற்சாகம்!
Tamil Poem: தேற்றிட யாருளர்?
RIP Director K Baghyaraj: திரைவானத் தூறல் தீர்ந்து போச்சு!
பாக்யராஜ் என்கிற பன்முககலைஞர்!
பாக்கியராஜ் என்றும் ஒரு சகாப்தம்!
திரைத்துறையின் பாக்கியமே.. கலைத்துறையின் அதிசயமே!
{{comments.comment}}