"நலம் நலமறிய ஆவல்.. இப்படிக்கு உங்கள்".. இன்று உலக அஞ்சல் தினம்!

Oct 09, 2023,03:22 PM IST
- மீனா

சென்னை: "சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்.. இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னை  சேர்ந்திடும்"

இந்தப் பாட்டை எவராலும் மறக்க முடியுமா. அற்புதமான வரிகள் அதிலுயும் தன்னுடைய காதல் கடிதத்தை சூரியனும் சந்திரனும் கூட எப்பொழுதும் கொண்டு போய் சேர்ப்பார்கள் என்று எழுதிய விதம்தான் மிகவும் அருமை. காதலர்களுக்கு வேண்டுமானால்.. சூரியனும் சந்திரனும் காதல் கடிதங்களை  கொண்டு சென்று சேர்க்கலாம்..  ஆனால் சாமானியர்களுக்கு..  நிச்சயம்  கடிதங்களைக் கொண்டு போய் சேர்ப்பதற்கு சூரியமூர்த்தியோ அல்லது சந்திரசேகரனோ.. ஏதாவது ஒரு போஸ்ட்மேன்தான் இருப்பார்!. 

அதெல்லாம் சரி இப்ப எதுக்கு போஸ்ட் பத்தி பேசுறீங்க என்று தானே யோசிக்கிறீங்க.  இன்று சர்வதேச அஞ்சல் தினம். உலகம் முழுவதும் அக்டோபர் 9 ம் தேதி இது கொண்டாடப்படுகிறது. உலக தபால் அமைப்பானது 1874 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் தொடங்கப்பட்டது. உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக 1969 அக்டோபர் 9 ஆம் தேதி உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது. 



இந்தத் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும் இதன் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. முந்தைய காலகட்டங்களில் இருந்து  தகவல் பரிமாற்றத்திற்கு அஞ்சல்கள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல இந்த முறை மிகவும் பயன்படுத்தப்பட்டது. இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒரு பட்டனை அழுத்தினாலே நம்முடைய தகவல்கள் நொடி பொழுதில் மற்றவர்களிடத்தில் போய் சேரும், என்றாலும் தபால் துறையின் அஞ்சல் சேவையின் முக்கியத்துவத்தை எவராலும் மறுப்பதற்கில்லை. 

இப்பொழுது உள்ள சூழ்நிலைகளில் போஸ்ட் என்று சொன்னாலே instagram, x போன்ற இணையதளங்களில் போடுவது என்று தான் தெரிகிறது. ஆனால் அப்போது எல்லாம் சார் போஸ்ட் என்ற ஒற்றை வார்த்தையில் சொல்ல முடியாத அளவிற்கு சந்தோஷம் இருந்தது. நமக்கு போஸ்ட் வராதா என்ற ஏக்கங்களும் அநேகர் உள்ளத்தில் இருக்கும். ஏனென்றால் அந்த போஸ்டில் நமக்கு பிடித்தவர்கள் நமக்காக அவர்கள் உணர்வுகளையும் சேர்த்து எழுதி கடிதங்களாக அனுப்பி இருப்பார்கள். அதை நாம் வாங்கி பிரித்து படிப்பதற்கு அவ்வளவு ஆர்வமாக இருக்கும். அந்த அளவிற்கு அது ஒரு பொக்கிஷமாகவும் பாதுகாத்து வைத்திருப்போம். 

இப்பொழுது எல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாம் அடிக்கடி தொலைபேசி மூலம் பேசிக் கொள்கிறோம். ஆனால் நம்முடைய சொந்தங்கள் தூரத்தில் இருக்கும்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அவர்கள் போடும் கடிதங்கள் மூலமே நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் போடும் கடிதங்களுக்காக காத்திருக்கும் அந்த இடைப்பட்ட காலங்களில் அவர்களைப் பற்றிய சிந்தனையும் அவ்வப்போது வந்து கொண்டு இருக்கும். தொலைவில் இருந்தாலும் அருகில் இருப்பது போன்ற உணர்வு இதன் மூலம் எல்லாருக்கும் கிடைக்கும்.  இன்று அருகில் இருந்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தூரத்தில் இருப்பது போன்ற உணர்வே மேலோங்கி எழுகிறது. 

கடிதங்கள் மூலம் உறவுகளோடும், நண்பர்களோடும் பேசும்  இத்தகைய சூழ்நிலை சந்தர்ப்பங்கள் இப்பொழுது உள்ள தலைமுறைக்கு கிடைக்கவில்லை என்பது வருத்தமான ஒரு விஷயம் தான். இதனால் தபால் துறையில் தகவல் பரிமாற்றம் நலிவடைந்து விட்டதால் அதை ஈடுகட்டும் வகையில் மேலும் மக்களுக்கு  பயன்படும் வகையில் நல்ல திட்டங்களையும் கொண்டு வந்து எப்பொழுதும் தபால் துறையை உயிர்ப்புடன் வைப்பதற்கு அரசு முயற்சித்து வருகிறது.

வாழ்க்கையில் இதுவரை கடிதமே எழுதியிராத அனுபவம் உங்களுக்கு உண்டா.. தயவு செய்து அதை மாற்றுங்கள்.. யாருக்காவது கடிதம் எழுதுங்கள்.. யாருக்கும் எழுதத் தோன்றாவிட்டால் உங்களுக்கே கூட கடிதம் எழுதிப் போடுங்கள்.. போஸ்ட்மேன் கொண்டு வந்து தரும் அந்தக் கடிதத்தைப் படித்துப் பாருங்கள்.. நிச்சயம் அது புதுவித அனுபவமாக இருக்கும்!

கடிதம் எழுதுங்க பாஸ்.. மனசுக்கு நல்லது!

சமீபத்திய செய்திகள்

news

மும்பைக்கு இன்று ரெட் அலர்ட்... வெளுத்து வாங்கும் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

news

மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!

news

சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி

news

முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?

news

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு

news

மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

அலைபேசி பேச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்