புதுடெல்லி: உடல் எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இனியும் என்னால் போராட வலிமை இல்லை. அனைவரும் மன்னியுங்கள் என்று கூறி தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்.
33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் 206 நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் நேற்று முன்தினம் இந்தியாவின் சார்பில் வினேஷ் போகத் களம் இறங்கினார். அப்போது 16 பேர் கொண்ட நாக் அவுட் சுற்று, கால் இறுதி மற்றும் அரை இறுதி ஆகிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இந்த இறுதி சுற்று போட்டி நேற்று நடைபெற்றது.
அதற்கு முன்னதாக வினேஷ் போகத்தின் உடல் எடை 2 கிலோ கூடுதலாக இருந்ததால், நேற்று முன்தினம் இரவு முழுவதும் கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து எடையைக் குறைக்க முயற்சித்தார். ஆனாலும் கடைசியில் 100 கிராம் எடையை குறைக்க முடியாமல் போனது. இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டார்.
இரவு முழுவதும் தூங்காமல், சாப்பிடாமல் உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். இருந்தாலும் கூட அவரது எடை 50 கிலோ 100 கிராம் ஆக இருந்தது. டாக்டர்களின் அறிவுரைப்படி தனது நீளமான முடியை கூட வெட்டி தியாகம் செய்தார். அப்படியும் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது அத்தனை உழைப்பும் வீணாகிப் போனது. இதனால் வினேஷ் போகத் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி ஏமாற்றத்தில் திகைத்து நின்றார். இரவு முழுவதும் ஓய்வு இல்லாமல் கடுமையாக உடற்பயிற்சி செய்ததால் அவருக்கு நீர்ச்சத்து குறைபாடும் ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வினேஷ் போகத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஆறுதலும், தைரியமும் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிண்ணனியில் சதி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகளை முன் வைத்துள்ளனர். அவருக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்பினர், இயக்கங்கள், தனிநபர் என ஆதரவு குவிந்த நிலையில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தம் போட்டிகளில் இருந்து முற்றிலும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.
வினேஷ் போகத்தின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அம்மா, நான் தோற்றுவிட்டேன். மல்யுத்தம் என்னை வென்று விட்டது. என் தைரியம், கனவுகள் எல்லாம் உடைந்து விட்டன. எனக்கு இப்போது வலிமை இல்லை. குட்பை மல்யுத்தம் 2001-2024. உங்கள் அனைவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருப்பேன், மன்னியுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் புகார்களை கூறிய வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராடியவர் வினேஷ் போகத் என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான போராட்டத்துக்கு மத்தியில்தான் அவருக்கு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளவே அனுமதி கிடைத்தது. அப்படி கிடைத்தும் கூட தனது மனோ திடத்தால் அதிரடியாக விளையாடி பதக்கத்தக்கு அருகே வரை வந்தார் வினேஷ் போகத். ஆனால் 100 கிராம் எடை அவரது கனவை சீர்குலைத்து விட்டது பெரும் வேதனையாக இருக்கிறது.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}