என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

Dec 08, 2025,04:15 PM IST

எர்ணாகுளம்: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் திலீப் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். என் திரை வாழ்வை சீர்குலைக்க வேண்டும் என்று நடந்த சதி செயல் தான் இந்த சம்பவம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


மலையாள நடிகர் திலீப் கடந்த 2017ம் ஆண்டு மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட  மலையாள நடிகர் திலீப், குற்றமற்றவர் என்று கூறி எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரை இன்று விடுவித்துள்ளது.


இதன்பின்னர் நடிகர் திலீப் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், முதலில் கடவுளுக்கு நன்றி கூறிகிறேன். எனது குடும்பத்தினர், நண்பர்கள் ஆதரவாளர்களுக்கும் மற்றும் எனக்கு உறுதுணையாக நின்றவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக அவர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.




9 ஆண்டு காலமாக எனக்காக நீண்ட சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். திரைத்துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்தவர்களும் எனக்கு ஆறுதலாக இருந்தனர். அவர்களுக்கும்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த சதி செயல் மஞ்சு வாரியரால் தான் தொடங்கப்பட்டது. அவர் தான் என் மீது கிரிமினல் சதி புகார் கொடுத்துள்ளார். இதன் காரணமாகவே என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கின் பிரதான குற்றவாளி மற்றும் பிற குற்றவாளிகளுடன் இணைந்து எனக்கு எதிராக ஒரு போலிக் கதைகளை உருவாக்கினர். 


அதுமட்டும் இன்றி காவல்துறை, சில ஊடகங்களோடு இணைந்து என் மீது போலியான செய்திகளை பரப்பின. என் மீது கட்டமைத்த போலிக் கதை இன்று நீதிமன்றத்தால் நொறுக்கப்பட்டது. எனது தொழிலை சிதைத்து, என் புகழை சீர்குலைக்க வேண்டும் என்பதே உண்மையான சதி செயல் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்