மறைந்தது தமிழ்நாட்டின் மண் வாசனை.. பாரதிராஜா!

Jun 10, 2026,03:41 PM IST

- தி. மீரா


தமிழ்த் திரையுலகில் கிராமத்து மக்களின் வாழ்க்கையையும், மண்ணின் மணத்தையும், இயற்கையின் அழகையும் உண்மையாகப் பதிவு செய்த இயக்குநர்களில் முதன்மையானவர் பாரதிராஜா. அதனால் அவர் "கிராமிய இயக்குநர்" என்றும் "இயக்குநர் இமயம்" என்றும் போற்றப்படுகிறார்.


பாரதிராஜா தமிழ்ச் சினிமாவிற்கு வந்த காலத்தில் பெரும்பாலான திரைப்படங்கள் நகர வாழ்க்கையையும், ஸ்டுடியோ அமைப்புகளையும் மையமாகக் கொண்டிருந்தன. ஆனால் அவர் கிராமங்களின் வயல்வெளிகள், கண்மாய்கள், மண் பாதைகள், நாட்டுப்புற கலாச்சாரம் மற்றும் எளிய மக்களின் உணர்வுகளை நேரடியாகத் திரையில் கொண்டு வந்தார். இதன் மூலம் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒரு புதிய முகத்தைக் கொடுத்தார்.


"16 வயதினிலே" திரைப்படம் அவரது கிராமியப் படைப்புகளின் தொடக்கமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து "கிழக்கே போகும் ரயில்", "மண் வாசனை", "அலைகள் ஓய்வதில்லை", "முதல் மரியாதை", "கடலோரக் கவிதைகள்" போன்ற படங்கள் கிராம வாழ்க்கையின் அழகையும் உண்மையையும் மக்களிடம் கொண்டு சேர்த்தன.

வேதம் புதிது படத்தில் சாதிப் பிரச்சினையை மிக அற்புதமாகக் கையாண்டுள்ளார்.




பாரதிராஜாவின் படங்களில் கிராமம் என்பது வெறும் பின்னணி அல்ல; அது ஒரு கதாபாத்திரமாகவே வாழ்கிறது. வயல்களின் பசுமை, நாட்டுப்புறப் பாடல்கள், மக்களின் அன்பு, உறவுகளின் வலிமை, காதலின் தூய்மை ஆகியவை அவரது திரைப்படங்களில் உயிரோட்டத்துடன் காணப்படுகின்றன.


அவரது படைப்புகள் கிராமிய வாழ்க்கையை மட்டும் காட்டாமல், சமூகப் பிரச்சினைகளையும் துணிச்சலாக எடுத்துரைத்தன. குறிப்பாக "கருத்தம்மா" திரைப்படம் பெண் குழந்தைக் கொலைக்கு எதிரான வலுவான சமூகக் குரலாக அமைந்தது.


புதிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய பெருமையும் பாரதிராஜாவுக்கு உண்டு. அவரது வழிகாட்டுதலால் பலர் தமிழ்த் திரையுலகில் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளனர்.


கிராமத்தின் மண்வாசனையையும், மக்களின் உணர்வுகளையும் கலை நயத்துடன் உலகிற்கு அறிமுகப்படுத்திய பாரதிராஜா, தமிழ்ச் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி. அவர் உருவாக்கிய திரைப்படங்கள் காலம் கடந்தும் பேசப்படும். எனவே, கிராமிய வாழ்வின் காவியத்தை திரையில் செதுக்கிய மகத்தான கலைஞராக பாரதிராஜா என்றும் நினைவுகூறப்படுவார்.


என் இனிய தமிழ் மக்களே என்றவர் சத்தமின்றி போனார்.. மண் வாசனை மண்ணோடு மறைந்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்