கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்

Mar 07, 2026,02:02 PM IST

சென்னை: சர்வதேச சந்தை நிலவரங்களால் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும், தேர்தல் வாக்குறுதிப்படி மானியம் வழங்காமல் தமிழக அரசு மக்களை ஏமாற்றி வருவதாகவும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.


சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, விலை உயர்விற்கான காரணங்களையும், தமிழக அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.


விலை உயர்வு தவிர்க்க முடியாததா?




சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சூழல்கள் உள்நாட்டு எரிபொருள் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: "சர்வதேச சந்தையில் போர் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி காரணங்களால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயரும் போது, நமது நாட்டிலும் அதன் பாதிப்பு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. உலகளாவிய பொருளாதார மாற்றங்களின் விளைவாகவே இந்த விலை உயர்வு ஏற்படுகிறது." எரிபொருள் விலையைத் தீர்மானிப்பதில் சர்வதேசச் சந்தையின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசு ஏழை எளிய மக்களைப் பாதுகாக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.


திமுக மீது தாக்கு : 


விலை உயர்வுக்கு மத்திய அரசை மட்டும் குற்றம் சாட்டுவதை விடுத்து, மாநில அரசு தனது கடமையைச் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார். குறிப்பாக, 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியை அவர் நினைவூட்டினார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் (வாக்குறுதி எண்: 503), "சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும்" என்று குறிப்பிட்டிருந்தது. ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும், இன்று வரை அந்த மானியம் வழங்கப்படவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.


மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா?


"ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விலை உயரும் போது மாநில அரசு தனது பங்கிற்கு வழங்க வேண்டிய மானியத்தை வழங்கியிருந்தால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் சுமை ஓரளவாவது குறைந்திருக்கும். ஆனால், வாக்குறுதிகளை வெறும் காகிதத்தோடு நிறுத்தி விட்டு மக்களைத் தவிக்க விட்டுள்ளது தமிழக அரசு," என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். தற்போதுள்ள சூழலில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த மாநில அரசும் தனது பொறுப்பை உணர்ந்து, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி சிலிண்டர் மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்