தோழர் வி.எஸ். அச்சுதானந்தன்... புரட்சிகரப் பாரம்பரியத்திற்கு ஒரு வீரவணக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Jul 21, 2025,05:50 PM IST
சென்னை: மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீர வணக்கம் செலுத்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் விடுத்துள்ள இரங்கல் பதிவு:

தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் கேரளத்தின் அரசியல் மனசாட்சியில் ஆழமாகப் பதிந்த ஒரு புரட்சிகரப் பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார். மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு மக்கள் தலைவர், வாழ்நாள் முழுவதும் பொதுவுடைமைவாதி, மற்றும் முன்னாள் முதலமைச்சர் என அவர் கொள்கைப் பிடிப்புள்ள அரசியலுக்கும் பொதுச் சேவை மனப்பான்மைக்கும் ஒரு இலக்கணமாகத் திகழ்ந்தார்.



அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும், ஒரு உண்மையான மாபெரும் தலைவரை இழந்து வாடும் கேரள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். 

மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள், என் சார்பாகவும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் அந்த மாபெரும், பழம்பெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவார். வீரவணக்கம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் இரங்கல்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும், வி.எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், கேரளத்தின் முன்னாள் முதலமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரரும், பொதுவுடைமை இயக்கத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த தோழர் வி.எஸ். அச்சுதானந்தன், புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக ஓயாமல் குரல் கொடுத்த ஒரு வழிகாட்டியாக இருந்து, இப்போது அமைதியடைந்துவிட்டார்.

மறக்கப்பட்டவர்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய ஒரு மக்கள் தலைவரை கேரளமும், இந்தியாவும் இழந்துவிட்டது.

பிரியாவிடை, தோழர் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்