எல் நினோ எதிரொலி: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் வறட்சி அபாயம்

Jun 24, 2026,02:09 PM IST

சென்னை : பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ (El Nino) காலநிலை மாற்றம் காரணமாக, தமிழகத்தின் 12 மாவட்டங்கள் கடுமையான வறட்சி நிலையை எதிர்கொள்ளக்கூடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வறட்சி பாதிப்பு குறித்து மத்திய அரசு நடத்திய விரிவான ஆய்வின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


27 மாநிலங்களில் ஆய்வு:

மத்திய அரசு நாடு முழுவதும் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள 27 மாநிலங்களில் மொத்தம் 226 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய விளிம்பில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 12 முக்கிய மாவட்டங்களும் அடங்கும்.


தமிழகத்தில் பாதிக்கப்படும் மாவட்டங்கள்:




மத்திய அரசின் வறட்சி கண்காணிப்புப் பட்டியலின்படி, தமிழகத்தில் பின்வரும் 12 மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது:


அரியலூர்

தருமபுரி

திண்டுக்கல்

கிருஷ்ணகிரி

நாமக்கல்

நீலகிரி

பெரம்பலூர்

இராமநாதபுரம்

திருச்சி

திருப்பத்தூர்

வேலூர்

விருதுநகர்


காரணம் என்ன? 

மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வழக்கத்திற்கு மாறான வெப்பநிலை அதிகரிப்பதே 'எல் நினோ' எனப்படும் இயற்கை காலநிலை நிகழ்வாகும். வழக்கமாக இந்த பிராந்தியத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 26°C முதல் 28°C வரை இருக்கும். ஆனால், தற்போது இயல்பான அளவை விட குறைந்தது 0.5°C வெப்பநிலை அதிகரித்துள்ளது. இது உலகளாவிய மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையின் வடிவத்தை மாற்றி, சில பகுதிகளில் வறட்சியையும், சில பகுதிகளில் கடுமையான மழையையும் ஏற்படுத்துகிறது.


குறையும் தென்மேற்கு பருவமழை:

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் எல் நினோவின் தாக்கம் மிதமானது முதல் வலுவான நிலையை எட்டக்கூடும் என்றும், ஆண்டின் இறுதியில் இது மேலும் தீவிரமடையலாம் என்றும் கணிப்புகள் கூறுகின்றன. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விடக் குறைய வாய்ப்புள்ளது. இது வறட்சி பாதிப்புள்ள மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையையும், பயிர் இழப்பையும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் வழிகாட்டுதல்:

இந்த வறட்சி அபாயத்தை எதிர்கொள்ளவும், விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைக் குறைக்கவும் மத்திய அரசு தற்காப்பு நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களைத் தவிர்த்து, எள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற குறைந்த காலஅவகாசத்தில் விளையக்கூடிய (Short-duration crops) மாற்றுப் பயிர்களை பயிரிட ஊக்குவிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் நீர் மேலாண்மை மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் தற்போது எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்