பெங்களூரு: பெங்களூரில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி பவனியில் ஏற்பட்ட மிகப் பெரிய கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெற்றிக் கொண்டாட்டத்தில் இது மிகப் பெரிய துயரமாக மாறியுள்ளது.
RCB அணி 18 வருடங்களுக்குப் பிறகு
ஐபிஎல் கோப்பையை வென்றதால் ஏற்பட்ட அளவற்ற கொண்டாட்டம், ஒரு பெரும் துயரமான நிகழ்வாக மாறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இதையடுத்து கோப்பையுடன் அகமதாபாத்திலிருந்து பெங்களூரு அணி இன்று பெங்களூரு வந்தடைந்தது. விமான நிலையத்தில் அணி வீரர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவுக்காக, எம். சின்னசாமி ஸ்டேடியம் அருகே மக்கள் குழுமத் தொடங்கினர்.
முதல் முறையாக கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருந்ததால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு வெளியே திரண்டனர். இதனால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கிய ரசிகர்கள் அங்கிருந்து வெளியேற முயன்றபோது மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் சிக்கிக் கொண்டனர். நெரிசலில் சிக்கி காயமடைந்தனர்.
போலீஸார் காயமடைந்தவர்களையும், மயக்கமடைந்தவர்களையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டேடியத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல ஆயிரம் பேர் திரண்டதால்தான் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், கூட்டம் கட்டுப்படுத்த முடியாதது. கூட்ட நெரிசலுக்கு நான் வருந்துகிறேன். 5,000 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கூட்டத்தினரை தடியடி நடத்தியும் கலைக்க முடியாது. ஆர்வ மிகுதியால் அதிக அளவில் ரசிகர்கள் கூடி விட்டனர் என்றார்.
இதற்கிடையே, மைதானத்திற்கு அருகிலுள்ள சில மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
சிவாஜி நகர் பகுதியில் உள்ள பௌரிங் மருத்துவமனையில், காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக வெற்றிக் கொண்டாட்டத்தைப் பார்ப்பதற்காக, மிகப் பெரிய அளவில் மக்கள் கூடியிருந்தனர். ஸ்டேடியத்தைச் சுற்றிலும் உள்ள கட்டடங்கள், மரங்களில் ஏறி கிளைகளில் அமர்ந்திருந்தனர். மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடி விட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக கர்நாடக அரசு விதான சௌதாவிலிருந்து மைதானத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த வெற்றிப் பேரணியை ரத்து செய்து விட்டது.
சரியான திட்டமிடல் இல்லாததால்தான் இந்த விபரீதம் ஏற்பட்டு விட்டது. இல்லாவிட்டால் மறக்க முடியாத மகிழ்ச்சிகரமான நிகழ்வாக இந்த வெற்றிக் கொண்டாட்டம் இருந்திருக்கும் என்று
கிரிக்கெட் ரசிகர்கள் ஆதங்கத்துடன் கூறியுள்ளனர்.
{{comments.comment}}