திருவனந்தபுரம்: நான் சென்னை தக்லைப் பட விழாவில் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் பேசியது அன்பின் வெளிப்பாடு. அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தக்லைப் ஆடியோ விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியது கர்நாடகத்தில் சர்ச்சையாகியுள்ளது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேசமயம்
தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவில் நடந்த தக்லைப் பட விழாவின்போது தனது பேச்சு குறித்து விளக்கம் தெரிவித்தார்
கமல்ஹாசன். அப்போது அவர் கூறியதாவது: நான் பேசியது அன்பின் வெளிப்பாடு. மொழி வரலாற்றை பல வரலாற்றாசிரியர்கள் எனக்கு கற்பித்துள்ளனர். அன்புடன் வெளிப்படுத்திய ஒரு கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். மொழிசார்ந்த விஷயங்களைப் பேசுவதற்கு அரசியல்வாதிகளுக்குத் தகுதி இல்லை, அதில் நானும் அடங்குவேன்.
தமிழ்நாடு நீண்டகாலமாகவே அனைவரையும் அரவணைக்கும் தன்மையைக் கொண்ட மாநிலம். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இப்படி தனித்தன்மையுடன் இருந்ததில்லை. ஒரு மேனன் அங்கு முதல்வராக இருந்திருக்கிறார். ஒரு ரெட்டி முதல்வராகவும், ஏன் ஒரு மாண்டியாவைச் சேர்ந்த கன்னடரும் கூட முதல்வராகப் பணியாற்றிய ஒரு அரிய மாநிலம் இது. தமிழனும் முதல்வராக இருந்திருக்கிறார்.
சென்னையில் எனக்கு ஒரு படம் தொடர்பாக இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோது
கர்நாடகம்தான் எனக்கு ஆதரவு அளித்தது. சென்னையில் நான் சிக்கல்களை எதிர்கொண்டபோது கர்நாடகம் எனக்குத் துணை நின்றது. கன்னட மக்கள் இங்கு வாருங்கள் என்று அழைத்தனர். எனவே கன்னடர்கள் என்னைப் புரிந்து கொள்வார்கள். தக்லைப் படத்தையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
சிவராஜ் குமாரின் அப்பா, எனது தந்தை போன்றவர், சகோதரர் போன்றவர். அன்புடன் அவரிடம் நான் பேசியதை சர்ச்சையாக்க வேண்டியதில்லை. இது பதில் இல்லை, விளக்கம் என்று கூறினார் கமல்ஹாசன்.
{{comments.comment}}