ஜோசியம் சொன்னது குத்தமாப்பா?... தங்கர் பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி ஜோசியர்.. திடீர் கைது!

Apr 09, 2024,06:28 PM IST

கடலூர்: கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார்.  இதற்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மக்களவைத் தேர்தல் நடக்க இன்னும் 10 நாட்கள் தான் உள்ளன. அதனால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீயாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளராக தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். பாமக இந்த தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது. 


தங்கர் பச்சான் தென்னம்பாக்கம் பகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது, சாலை ஓரத்தில் கிளி ஜோசியம் பார்த்து வந்த அழகுமுத்து என்பவரிடம் அமர்ந்து பேசினார். பின்னர் அவரிடம் கிளி ஜோசியம் பார்த்தார். கிளி எடுத்த படத்தில் அய்யனார் வந்ததால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றும் ஜோதிடம் கூறினார் அழகுமுத்து. இதனால் மகிழ்ச்சி அடைந்த தங்கர் பச்சானும் அடுத்து பிரச்சாரத்தில் பிசியாகி விட்டார்.




இந்நிலையில், தங்கர் பச்சான் கிளி ஜோதிடம் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை பார்த்த வனத்துறையினர் கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என தெரிவித்து, கிளி ஜோசியரை கைது செய்துள்ளனர். ஜோசியரிடம் இருந்து 4 கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:


கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது.  கடலூர் தொகுதியில்  போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.


தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர்  தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா?  இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால்  சோதிடத்தில்  நல்ல செய்தி  கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.


கிளியை கூண்டில் அடைத்தது  குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.  தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள்.  இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார்.  அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.


தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில்  தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

news

ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!

news

ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!

news

புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?

news

Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்