உத்தரப் பிரதேசத்தில் விபரீதம்.. ஆன்மீக சொற்பொழிவின்போது பெரும் கூட்ட நெரிசல்.. 122 பேர் பரிதாப பலி!

Jul 02, 2024,06:31 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் ஆன்மீகத் தலைவர் ஒருவரின் பேச்சைக் கேட்பதற்காக கூடிய கூட்டத்தில் திடீர் நெரிசல் ஏற்பட்டு 122 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்தவர்களின் உடல்கள் குவிந்து வருவதால் மருத்துவமனையில் உடல்களை வைக்க முடியாமல் டாக்டர்கள் திணறி வருகிறார்கள்.


உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரும் பரபரப்பை இந்தசம்பவம் ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸைச் சேர்ந்தவர் போலே பாபா. இவர் ஒரு ஆன்மீகத் தலைவர். இவருக்கு மிகப் பெரிய ஆதரவாளர் கூட்டம் உள்ளது. இவர் இன்று ஹத்ராஸில் ஒரு சத் சங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதாவது பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். இந்த சத் சங்கத்திற்கு போதிய அளவில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.




இந்த நிலையில் திடீரென கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலரும் முண்டியடித்து சாமியாரைக் காண முயன்றதால் கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக் கொண்டனர். நெரிசல் ஏற்பட்டதால் மக்களிடையே பீதி ஏற்பட்டு அங்கிருந்து பலரும் தப்பி ஓடினர். இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் விழுந்து கிடந்தனர். விழுந்து கிடந்தவர்கள் மீது ஏறி பலர் தப்பி ஓடியதால் அதில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.


போலீஸார் உடனடியாக மக்களை கட்டுப்படுத்தி கூட்டத்தை வெளியேறச் செய்தனர். ஆம்புலன்ஸ்களும், மீட்புப் படையினரும் விரைந்து வந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது வரை 122 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதில் பலர் வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.


சிக்கந்த்ரா ராவ் காவல் நிலைய எல்லைப் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் காயமடைந்தவர்கள் கொண்டு வரப்பட்டனர். அங்கு சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இறந்தவர்களின் உடல்களையும் அங்கு வைக்க இடமில்லை. இதனால் மருத்துவமனை முழுவதும் உடல்களைப் போட்டு வைத்துள்ளனராம். 




இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


ஹத்ராஸ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் குமார் இதுகுறித்துக் கூறுகையியில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அங்குள்ள சுகாதார மையத்தில்தான் தற்போது  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது ஒரு தனியார் நிகழ்ச்சி. இதற்கு உரிய முறையில் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தன. அதேசமயம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சில வசதிகளைச் செய்திருக்க வேண்டும். அது சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.


சத்சங்கம் நடந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதி இல்லை என்று தெரிகிறது. இதனால் அதிக அளவிலான வாகனங்கள் குவிந்து இருந்தன. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை அங்கிருந்து கொண்டு வர முடியவில்லை. மக்களும் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுதான் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியாக முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்