சுடர்க்கொடி கேளாய்!

Jun 11, 2026,04:12 PM IST

- பாவலர் மாயோன் மங்கை


ஆத்தோரம்  நாணலிலே

அழகாய்  விளையாடி

ஊத்தோரம்  ஓலை கட்டி

ஒத்துமையா  விளையாடி


செந்நெல்லுச்  சோறாக்கி

சேம்பிலை மேல் பரப்பி

கையறுத்துக் கறிசமைத்து

நகைசொல்லி  உறவாடி


கட்டிளங்காளை அவன்

கருப்பண்ண சாமி அவன்

காலால் இடறி விட்டான்

காதல் மொழி பேசினானே




காதலை வார்த்து விட்டுக்

காற்றாய்ப்  பறந்தானே

பறந்தவனை  மறவேனே

பக்குவமா முடிந்தேனே


வீட்டில் நான் தனித்திருக்க

விளையாட  நினைத்தானோ

உண்ணும் நீர் கேட்டான்

உணராது நான்தந்தேன்


வளைக்கரம் பற்றிநின்றான்

வலிந்து மார் கொண்டான்

பிடியிடையை  விரல் தடவ

பித்தாகி நான் நின்றேன்


இதுதான் காதல் என்பதா   

இன் தோழி நீ   கூறேன்

இன்பமே எனக்கு என்று

இனியரிடம் நீ சொல்லேன்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்