எங்கள் கண்ணதாசன்!

Jun 24, 2026,03:27 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


பொன் இருக்கையில் வைத்துப்

போற்றப்பட வேண்டியவன்! 

எம் அகக்கண் திறந்த இவன் 

பூஜிக்கப்பட வேண்டியவன்!


கவிதைகள் சமைத்தான்! 

மனம் மகிழ்வுறச் செய்தான்!

வாழ நம்பிக்கை தந்தான்!

வாழ்வாங்கு வாழ்கின்றான்! 


ஏழைக்  குடிசையும் இவன் 

பாட்டால் ஏற்றம் பெற்றது! 

ஓலைக் குடிசைக்கும் இவன் 

கவிதை ஒரு வேதம் ஆனது! 




பாலை  மனத்தினிலும் ஒரு 

வாழைமரம் வளரச் செய்தான்!

வையகத்தில் வானகத்தைக்

காணச் செய்தான்! 


இவன் காதல் பாடல்களில் 

கம்பன் தோற்றுப் போவான்!

இவன் தத்துவப் பாடல்களில் 

பட்டினத்தார் தோற்றுப் போவார்!


இவன்  வாழ்ந்தது சில காலம்! 

இவன் புகழ்  வாழும் பல யுகங்கள்! 

வாழ்க கண்ணதாசா! எங்கள்

 மனம் கவர்ந்த இனிய நேசா!


புவியரசர் போற்றுகின்ற 

கவியரசர்!- இவர் 

கலைமகளின் அருள் பெற்ற 

கண்ணதாசன்! 


பாடல் மெட்டொன்று  

இவர் கேட்ட மறு நிமிடம்

வார்த்தை அருவி வந்து கொட்டும் 

மழைப் பொழிவாய்!


அதில் நம் மனம் மகிழும்

மகிழம் பூவாய்!

தமிழ் அன்னை மகிழ்வாள்

தன் கவி மகனால்!


செவிக்கு இன்பம் 

இவர் பாடல்!

தமிழ் மொழிக்கு இன்பம்

இவர் கவிதை! 


வளரும் கவிஞருக்கு 

வேதம் இவர் எழுத்து! 

இறவாத புகழ் உண்டு 

இப் புவியில் இவருக்கு!


திரைப்படப் 

பாடல்களில்

இலக்கியத்தைக்

கொடுத்தார்!


கம்பனாக,

பாரதியாக

நம் கண் முன்னே 

காட்சி தந்தார்!


இவர் மறைந்து ஆயிற்று 

வருடங்கள் பல பத்து!

ஆனால் இப்போதும் இவர் எழுத்து 

தமிழுக்குத் தனிச்சொத்து!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்