கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை

Aug 29, 2026,03:43 PM IST

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டம் முடிந்த பிறகு, அங்கு சுத்திகரிப்புச் சடங்கு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு குற்றச்செயல் என்றும், இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


ஹல்த்வானி ராம்லீலா மைதானத்தில் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றிய சில நாட்களுக்குப் பிறகு, ஸ்ரீ ராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் புனித நீர் தெளித்து சுத்திகரிப்புச் சடங்கு நடத்தியதாகக் கூறப்படுகிறது.


இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்திருந்தனர்.




இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, கார்கே ஒரு தலித் தலைவர் என்பதால் மட்டுமே இந்தச் சடங்கு நடத்தப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு என்ற பெயரில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது பட்டியல் இன மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.


தலித் மக்கள் முன்னேறுவதையோ, மரியாதையுடன் வாழ்வதையோ பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் விரும்பவில்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது.


இந்த விவகாரத்தில் அரசு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காவிட்டால், அதற்கு இணையான எதிர்வினை நிச்சயம் இருக்கும் என்று எச்சரித்தார்.


முன்னதாக இந்த விவகாரத்தைக் கார்கே மாநிலங்களவையில் எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, இச்சம்பவம் வருந்தத்தக்கது என்றும் பாஜக இதற்குக் காரணமல்ல என்றும் கூறி விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்