ஒற்றைச் சொல்

Aug 29, 2026,01:55 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


ஏதோ சொல்ல வாயெடுத்தேன்! 

பார்வை எங்கோ திரும்ப;


நான் அதை சொல்லாமல் விட்டேன்!


ஏதோ சொல்ல நான் முனைய;

அலைபேசி அழைக்க;


அப்படியே மௌனமானேன்!


திரும்பவும் என் பக்கம் பார்க்க;

முகம் தீவிர யோசனையில்;


அகத்தில் இருந்தது

வார்த்தையில் வர மறுத்தது!




இன்னுமும் ஒரு முறை

முயற்சிக்க;

"சும்மா இருக்க மாட்டாயா?

வீட்டிற்கு வந்து பேசலாமே" என்பது

போல் சைகை!


மூக்கு கண்ணாடி கடையில்

பேரம்  படிந்த பின்

அலைபேசியை தேட ஆரம்பிக்க;


"அது வீட்டில்‌ 

மின்னுட்டத்தில்" 

என்றதும்;


முகம் சிவந்தது;

கோபத்தினாலா?

கழிவிரக்கத்தினாலா?

ஆதங்கத்திலா?


"முதலிலேயே சொல்வதற் கென்ன?" என்று வெடிக்க;


அதை சொல்லத்தான் 

இவ்வளவு நேரமும்

முயன்றேன்!


நீங்கள் என்னைப்

பேசவே விடவில்லை;


என்றபடியே,

என்  திறன்பேசியைக் கொடுக்க;


"தேங்க்ஸ்" என்ற 

ஒற்றை வார்த்தையில்;

நான்

நிம்மதியாகப் பெருமூச்சு விட்டேன்


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு, மலர் வனம், சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்