சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்... ஜோதியை எங்கிருந்து தரிசிக்கலாம்?... வழிகாட்டுதல்கள் அறிவிப்பு

Jan 13, 2025,05:18 PM IST

சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (ஜனவரி 14) மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் பக்தர்களுக்கான வழிகாட்டுதல்களை சன்னிதானம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.


சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை நவம்பர் 16ம் தேதி துவங்கி, ஜனவரி 26ம் தேதி வரை நடைபெற்றது. அதன் பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மகரவிளக்கு திருவிழாவிற்காக ஜனவரி 30ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மகரவிளக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம், மகர சங்கராந்தி தினமான ஜனவரி 14ம் தேதி (நாளை) மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது. மகரஜோதி தரிசனத்தின் போது சாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணப் பெட்டியின் மூன்று நாள் ஊர்வலம் ஜனவரி 12ம் தேதியான நேற்று பந்தள அரண்மனையில் இருந்து துவங்கியது.


தலைசுமையாக எடுத்து வரப்படும் திருவாபரணப் பெட்டி, ஜனவரி 14ம் தேதி மாலை 05.30 மணியளவில் சன்னிதானத்தை வந்தடையும். அதிலுள்ள ஆபரணங்கள் சாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்ற ஒரு சில விநாடிகளிலேயே பொன்னம்பலமேட்டில் சாமி ஐயப்பன் ஜோதி வடிவமாக பக்தர்களுக்கு காட்சி தரும் அற்புத நிகழ்வு நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் கலந்து கொள்வார்கள். வழக்கம் போல் இந்த ஆண்டும் பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்வதற்கான இடங்கள் சோதனை செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன. அதோடு மகரஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டுதல்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜோதி தரிசனம் செய்வதற்கான இடங்கள் :




நிலக்கல்லில் உள்ள அட்டதோடு, அட்டதோடு மேற்கு காலனி, இளவுகல், நீலிமலை, அய்யன் மலை ஆகிய பகுதிகளிலும் பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்யலாம். அதே போல் பம்பையில் ஹில்டாப், ஹில்டாப் சென்ட்ரல், பெரியானை வட்டம், சன்னிதானம் பண்டிதவலம், தரிசனம் காம்ப்ளக்ஸ் பகுதி, அன்னதானம் மண்டபம் முன்பு, திருமுட்டத்திற்கு தெற்கே அமைக்கப்பட்டுள்ள பகுதி, ஆழி பகுதி, கொப்பரகலம், ஜோதி நகர், வனத்துறை அலுவலகம் முன்புறம், நீர்வளத்துறை அலுவலகம் பகுதி ஆகிய இடங்களில் இருந்து மகரஜோதி தரிசனத்தை காணலாம்.


சபரிமலை மகரஜோதி தரிசன வழிகாட்டுதல்கள் :


* சன்னிதானம் வரும் பக்தர்கள் கேஸ் அடுப்பு, பெரிய பாத்திரங்கள், அடுப்புகள் போன்றவற்றை எடுத்து வரக் கூடாது.


* நிலக்கல் முதல் சன்னிதானம் வரையிலான பகுதியில் தற்காலிக அடுப்புகள் அமைத்து சமைக்கக் கூடாது.


* ஜனவரி 14ம் தேதி திருவாபரணம் வரும் சமயத்தில் பக்தர்கள் யாரும் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். திருவாபரணப் பெட்டி சரங்குத்தியை கடந்த பிறகே பக்தர்கள் மலையேறி சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.


* மகரஜோதி தரிசனத்திற்காக சிறப்பு பாஸ் பெற்றவர்களுக்கு மட்டுமே சன்னதி முன்பு உள்ள பிரகாரத்தில் நின்று ஜோதி தரிசனம் செய்ய அனமதி உண்டு.


* குழந்தைகள், முதியவர்களை அழைத்து வரும் ஐயப்ப சாமிகள் அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


* குருசாமிகள், தங்கள் குழுவில் உள்ளவர்களுக்கு தாங்கள் வந்த வாகனத்தின் எண், அது நிறுத்தப்பட்டுள்ள இடம், டிரைவரின் விபரம், மொபைல் எண் ஆகியவற்றை கொடுத்து வைக்க வேண்டும்.


* பக்தர்களை வாகனங்களில் அழைத்து வந்த டிரைவர்கள் திரும்பி செல்லும் போது வாகனங்களை மெதுவாகவும், பாதுகாப்பாகவும் இயக்க வேண்டும்.


* ஜோதி தரிசனம் முடிந்த பிறகு பக்தர்கள் முடிந்த வரை விரைவாக வீடுகளுக்கு புறப்பட்டு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Poem: இளமையும் காலமும்!

news

Tamil Poems: தனி மனிதி!

news

அன்பு.. எத்தனை முறை காயப்பட்டாலும், மூளை அறியும், ஆனால் மனம் கேட்காது!

news

Monday Motivation: வாரீர்! வாரீர்!! பிள்ளைகாள்.. இலக்கணம் எளிதே தமிழ் இலக்கணம் எளிதே!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

அமைதியின் சிகரம் யோகினி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்