வருமா ஒரு நாள்?

Aug 28, 2026,12:47 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை


பிறந்து தவழ்ந்து நடை பயின்று

ஓடி ஆடி விளையாடிய மண்ணில் 

நான் கால் பதிக்கும் நாள் மீண்டும் வருமா ?


அம்மாவின் கைபிடித்து 

ஆசையாய் அலங்காரம் செய்து 

நடந்த திருவருணை நகர வீதிகளைக்

காணும் நாள் மீண்டும் வருமா ?


அன்புத் தோழமைகள் 

அருகிருந்து கதைத்த கதை 

அனு தினமும் சிரித்து மகிழ்ந்த நிலை 

இனி ஒரு நாள் மீண்டும் வருமா ?


கார்த்திகை தீபத் திருவிழாவிலே 

அதிகாலை வேளையிலே 

புதுக்காற்றைச் சுவாசித்து 

கிரிவலம் வரும்போது 

மனசெல்லாம் நிறைந்து 

முகமெல்லாம் புன்னகைக்கும்

புது நாளும் இனி வருமா ?




திருக்கோயில் தனிலே 

காலாற நடந்து குளத்தருகே அமர்ந்து 

இறைமணம் கமழும் 

பவளமல்லிப் பூ வாசமும் 

அருள் வடிவான அம்மையப்பனைக் கண்ட அருள் நிலையும் 

அனுபவிக்கும் ஒரு நாள் மீண்டும் வருமா ?


இருபது ஆண்டுகளுக்கு மேலாகி 

போக இயலா நிலையாகி 

இறை காணும் ஏக்கம் மட்டும் பெரிதாகி 

என் இறுதி நாட்களுக்குள்ளாவது 

காணும் ஒரு நாள் வருமா?


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்