Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

Sep 19, 2026,01:28 PM IST

- ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன்


ஒரு நாள் ரவி தனது மாமா மகன் கண்ணனுக்கு போன்  செய்து எப்படி இருக்கே? என்று கேட்டான். அதற்கு கண்ணன்  நல்லா இருக்கேன்  என்றான். ரவி மாமா எப்படி இருக்கார்? என்று கேட்டான். கண்ணனும் மாமா நாளை எண்ணின்டிருக்கிறார் என்றார்.


ரவி சரிடா, நான் அப்புறம் பேசறேன் என்றான். பிறகு தன் மனைவியிடம் மாமா நாளை எண்ணின்டிருக்காராம். அப்படீன்னா உடம்பு சரியில்லாமல் சீரியசா இருக்கார் போல இருக்கு. நான் போய் பார்த்துட்டு வருகிறேன் என்றான்.


உடனே அவன்  கிளம்பிச் சென்றான். கண்ணன் வீட்டை அடைந்தான். ஹாலில் மாமா  டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.


ரவிக்கு குழப்பமாக இருந்தது. மாமா அவனை வாடா என வரவேற்றார்.  பிறகு என்ன விஷயம்? என்று கேட்டார்.


ரவியும் ஒன்னுமில்ல மாமா. பார்த்து ரொம்ப நாளாச்சு. அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். கண்ணன் இல்லையா? என்று கேட்டான். மாமாவும் அவன் பெட்ரூமில் இருக்கான் என்றார்.


ரவி பெட்ரூமிற்கு சென்றான். அங்கே கண்ணன் கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருந்தான். இவனை பார்த்ததும் வாடா ரவி என்றான்.




ரவி ஏன்டா மாமா நாளை எண்ணின்டிருக்கிறார்னு சொன்னே. ஜம்முனு டி.வி.பார்த்துண்டிருக்கிறாரே என்று கேட்டான்.


அதற்கு கண்ணன் ஆமான்டா, இன்னிக்கு தேதி இருபது. பென்ஷன் வர இன்னும் பத்து நாள் இருக்கு. அது வர்ற வரைக்கும் பொறுமை இல்லை. என்னிக்கு வரும்னு ஒவ்வொரு நாளா எண்ணிண்டிருக்கார். அதைத்தான் சொன்னேன் என்றான்.


ரவி சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பி விட்டான்.


இனிமேல் யார் என்ன சொன்னாலும் நல்லா விவரமா கேட்டுக்கனும் என்று முடிவு செய்து விட்டான்.


(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன், அம்பத்தூர், ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்