ஹைதராபாத் அருகே.. மருந்துத் தொழிற்சாலையில் வெடிவிபத்து. பலி எண்ணிக்கை 32 ஆனது!

Jul 01, 2025,12:09 PM IST

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே உள்ள பஷாமயிலாரத்தில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் சுமார் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 


திங்கள்கிழமையன்று சிகாச்சி இன்டஸ்ட்ரியல்  நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து இடிபாடுகளில் உடல்களைத் தேடி வருகின்றனர்.


சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பஷாமயிலாரம் தொழிற்பேட்டையில் இந்த விபத்து நடந்தது. ஹைதராபாத்தில் இருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் இந்த இடம் உள்ளது. மைக்ரோ கிரிஸ்டலின் செல்லுலோஸ் (MCC) உலர்த்தும் பிரிவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 35 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இன்னும் 27 தொழிலாளர்களை காணவில்லை. அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.




மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு அமைப்பு (HYDRAA), வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர். வெடி விபத்து நடந்தபோது தொழிற்சாலையில் 108 தொழிலாளர்கள் இருந்தனர். இந்த வெடிச்சத்தம் சுமார் 5 கி.மீ தூரம் வரை கேட்டது.


வெடி விபத்தின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 15 தீயணைப்பு வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. வெடி விபத்தின் தாக்கத்தால் தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டு பல மீட்டர் தூரத்தில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சிலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளதால், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.


முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி செவ்வாய்க்கிழமை அன்று விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட உள்ளார். மேலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். வெடி விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜா நரசிம்மா திங்களன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிறுவனம் 40-45 வருடங்களாக மைக்ரோ கிரிஸ்டலின் செல்லுலோஸ் தயாரித்து வருகிறது என்று அவர் கூறினார்.


இது ரியாக்டர் வெடி விபத்து இல்லை என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜி. விவேக் தெரிவித்தார். ஏர் ட்ரையர் சிஸ்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெடி விபத்து மற்றும் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த விபத்து மற்றும் அதன் காரணங்கள் குறித்து விசாரிக்க மாநில அரசு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

JCD Prabhakar: சபாநாயகர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஜேசிடி பிரபாகர்.. எம்.ஜி.ஆர். காலத்து தலைவர்!

news

கணினி அறிவியல் பாடத்திற்காக வந்த நிதியில் மோசடி.. பட்டதாரி ஆசிரியர்கள் பரபரப்புப் புகார்!

news

தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்

news

N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?

news

Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்