சென்னை : தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் நடிகர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விபத்து விஜய்யின் கவனக்குறைவாலேயே ஏற்பட்டது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த டி.கே.எஸ். இளங்கோவன், கூட்டத்தைத் திட்டமிடுவதில் ஏற்பட்ட குளறுபடிகளே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று சாடினார். குறிப்பாக, விஜய் சுமார் 7 மணி நேரம் தாமதமாக மாநாட்டிற்கு வந்ததே கூட்ட நெரிசல் அதிகரிக்க முக்கியக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"ட்ரோன் கேமராக்களில் அதிகப்படியான கூட்டம் தெரிவதற்காகவும், தனது செல்வாக்கை நிரூபிக்கவும் விஜய் திட்டமிட்டே தாமதமாக வந்ததாகத் தெரிகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் மணி கணக்காக மக்கள் காத்திருக்க வைக்கப்பட்டனர். குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவித்ததே இந்தத் துயரத்திற்கு இட்டுச் சென்றது" என்று அவர் குற்றம் சாட்டினார். விஜய்யால் தான் இந்த சம்பவம் நடந்தது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக, அவர்களைத் தனது இடத்திற்கு அழைத்துச் சந்திப்பது விஜய்யின் 'அரசியல் முதிர்ச்சியின்மையை' காட்டுவதாக இளங்கோவன் விமர்சித்தார். "மக்களுக்காக அரசியல் செய்ய வருபவர், மக்களிடம் செல்ல வேண்டும்; மக்கள் அவரிடம் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது நாகரீகமல்ல" என்றும் அவர் கூறினார். அரசியலுக்கு வரும் எவரும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், சட்ட விதிகளை மதிக்கத் தெரியாதவர்கள் முதலமைச்சராகத் துடிப்பது வேடிக்கையானது என்றும் தனது பேட்டியில் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் ஆளும் கட்சிக்கும், விஜய்யின் புதிய கட்சிக்கும் இடையே பெரிய மோதலை உருவாக்கியுள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் சமீபத்தில் தான் விஜய் டில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விட்டு வந்துள்ளார். ஜனவரி 19ம் தேதியன்று மீண்டும் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த சமயத்தில் கரூர் சம்பவத்திற்கு விஜய் தான் காரணம் என டி.கே.எஸ்.இளங்கோவன் பேசி உள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}