National Doctor's Day: இந்தியாவில் டாக்டர்கள் தினம் ஏன் கொண்டாடப்படுது தெரியுமா..?

Jul 01, 2026,03:44 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

இறைவனுக்கு அடுத்தபடியாக மனித குலத்துக்கு ஆற்றும் மகத்தான சேவைக்காக, டாக்டர்களின் பங்களிப்பை போற்றுவதற்காகவும், இரவு பகல் பாராமல் அவர்கள் செய்யும் சேவையை   கௌரவிப்பதற்காகவும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 1ம் தேதி அன்று தேசிய டாக்டர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் மருத்துவ முன்னேற்றத்திற்கான அவர்களின் பெரும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக, மருத்துவ வல்லுநர்களுக்கு இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவர்கள் தினம் வரலாறு:

மேற்கு வங்காளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஆக இந்த டாக்டர்.பிதான் சந்திர ராய் அவர்கள் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவராக விளங்கியவர். டாக்டர். பிதான் சந்திர ராய்(Dr. Bidan Chandra Roy) அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை குறிக்கும் வகையில் இந்த நாள் "தேசிய மருத்துவர் தின"மாக  கொண்டாடப்படுகிறது.

டாக்டர்.பிதான் சந்திர ராய் அவர்கள் 1888- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி அன்று பீகார்மாநிலம் பாட்னா அருகே உள்ள பாங்கி போர் என்ற ஊரில்  பிறந்தார். டாக்டர் அவர்கள் ஏழைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர்.மருத்துவ பணிக்கு தன்னை அர்ப்பணித்தவர். இவர் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு நெருக்கமானவராக இருந்தவர். 





காந்தியுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகவும் போராடியதோடு மட்டுமல்லாது,இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் இருந்தார். அவர் மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பு வகுத்து மக்களுக்காக சேவையாற்றினார். டாக்டர். அவர்கள் தன் வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட கொடுத்த நற்குணம் படைத்தவர். அவர் முதலமைச்சராக இருந்த காலத்திலும் கூட ஏழைகளுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்தவர்.

இவர் பிறந்த தினமான ஜூலை 1ஆம் தேதி 1962 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மார்ச் 30ஆம் தேதி டாக்டர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால்,டாக்டர் பி.சி. ராயின் நினைவாக இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 1ஆம் தேதி 1991 ஆம் ஆண்டு முதல் தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

டாக்டர்.பி.சி. ராயின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவையில் பணிபுரிபவர்களுக்கு 1976 ஆம் ஆண்டு முதல் டாக்டர். பி.சி.ராய் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. டாக்டர். பிதான் சந்திரராய் அவர்கள் இந்தியாவின் மிக உயரிய குடிமகன் விருதான "பாரத ரத்னா" விருதை 1961 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.மருத்துவ துறையில் இவரது சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய மருத்துவ கழகம் இவரது பெயரில் டாக்டர். பி.சி.ராய் தேசிய விருதை வழங்கி வருகிறது.
 
பகவான் மனுஷ ரூபத்தில் இருப்பவர்கள் மருத்துவர்கள்:

நாம்  இறைவனை நேரில் காண இயலாது. நம் மனதில் உணர முடியும். ஆனால் ஒவ்வொருவரின் வாழ்விலும் நாம் பிறந்தது முதல் ஒவ்வொருவரின் இறுதி காலம் வரை டாக்டர்களின் விலைமதிப்பற்ற பங்கை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பொது மருத்துவ பரிசோதனை முகாம்களுக்கு இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கள் பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு பி.சி. ராய் விருதும் வழங்கப்படுகிறது. 

இன்றைய சமுதாயத்தில் வருங்கால  தூண்களான இளைஞர்கள் மருத்துவத் தொழிலை தேர்ந்தெடுத்து அதனை அர்ப்பணிப்புடன் பின்பற்ற ஊக்குவிப்பதற்காக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல செயல்பாடுகள் இன்று  நடைபெறுகின்றன.
 
"பகவான் மனுஷ ரூபேன"

மருத்துவர்கள் மனுஷ ரூபத்தில் இருக்கும் கடவுள்.  அவர்கள் நம்மை நோயிலிருந்து குணப்படுத்தி சிறந்த முறையில் நாம் வாழ்வதற்கான வாழ்க்கையை அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தியாக உணர்வுடன் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை தானே...


மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்