சிந்தனைச் சிதறல்.. விதையிட்டு வளர்த்தவருக்கே முதலுரிமை!

Jul 01, 2026,04:53 PM IST

- அ. தாமஸ்


ஒருவர் விதையிட்டு வளர்க்கையில்  துளிராத விதை வேறு ஒருவர் வெறுமனே நீர் வார்க்கையில் துளிர்கிறது என்பதற்காக துளிர்விட்ட நேரத்தில் நீரிட்டவருக்கு மட்டுமே அம்மகிழ்வினைக் கொண்டாடும் உரிமை உரியதன்று. மாறாக அம் மகிழ்ச்சியில் பெரும்பங்கு விதையிட்டு வளர்த்தவருக்கே உள்ளது என்பதை பல நேரங்களில் ஏற்க மறுக்கிறோம். துளிர்விட்ட நேரத்தில் நீர் வார்த்தவரையே அனைத்திற்கும் காரணம் என்று தூக்கிப் பிடிக்கிறோம். 


பிறரின் உழைப்பிற்கு உரிமை கொண்டாடுவது அவர் உமிழ்ந்த உணவை உண்பதை விட மோசமானது. எனவே நமது உழைப்பின் மதிப்பை உரிமையோடு ஏற்று பிறர் உழைப்பின் மதிப்பை உத்தரவாதமேயின்றி மறுத்து அதை உரியவரிடம் சேர்த்தாலே இங்கு பலரின் வெற்றி அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். 




தேவை உணர்ந்து மரம் வைப்பவனை மதி கெட்டவன் எனும் உலகம்தான் வைத்த மரத்தை வேர் அறுத்து விலை பேசுபவனை மதி நுட்ப வாதி என்கிறது. இந்நிலை தொடர்வதால் தான் மரம்  இழந்த மானுடம் நீருக்கும் காற்றுக்கும் நிழலுக்கும் கூட இறந்து நிற்கிறது பெரு வணிகரிடம்.


வசதிகள் கிடைக்கும் பொழுது வளர்ப்பதை விட ஆபத்தான நேரத்தில் அழியாமல் காப்பதே அனைத்திலும் உயர்வானது. வசதிகள் கிடைக்கையில் தானாய் வளர்வதைக் கூட தான் வளர்த்தேன் என்று பெருமை பேசுபவரை உயர்த்திப் பிடிக்கும் உலகம் ஆபத்துக் காலத்தில் தனி ஒருவனாய் தாங்கிப் பிடித்தவனை தகுதியற்றவன் என தகுதி நீக்கம் செய்கிறது. எனவே தகுதியானதை தகுதியான இடத்தில் சேர்ப்போம். தகுதியானவரை அவர் தகுதி உணர்ந்து ஏற்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்